Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

பாக்கர் எனும் சித்தர்

து ஒரு சிறிய ஊர்.

அந்த ஊருக்கு வித்யாசமான ஒரு முறம் விற்கும் வியாபாரி வந்திருந்தார். அவர் முறம் விற்பனை செய்வதை பார்த்து அந்த ஊர்காரர்கள் ஏளனமாக சிரித்தனர்.

"அம்மா, தாயே..! இந்த முறத்திற்கான விலை ஒரு வெள்ளி. இந்த விலை இறைவன் எனக்கு சொன்ன விலை. யாராவது ஒரு வெள்ளி கொடுத்து முறம் வாங்கினால் மீதி இருக்கும் முறங்களை இனாமாகத் தருகிறேன்." என்று  கூறினார்.

முதலில் அவரை ஒரு பைத்தியகாரராகத்தான் எல்லோரும் நினைத்தனர். ஆனால் அவர் சொன்னபடியே ஒரு முறத்தை தவிர மற்ற தெல்லாம் இனாமாகக் கொடுத்த போது அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

அந்த முற வியாபாரியின் பெயர் பாக்கர். ஒரு முறத்தின் விலை ஒரு வெள்ளி என்று தினமும் கூவி விற்பது அவரது வாடிக்கையாக இருந்தது. கால தேவிதான் தினமும் ஒரு வெள்ளி கொடுத்து ஒரு முறத்தை வாங்கிச் செல்வாள். மற்ற முறங்களை அந்த ஊர் மக்கள் இலவசமாகப் பெற்றுச் செல்வார்கள்.

காலதேவி கொடுத்த அந்த ஒரு வெள்ளியையும் பாக்கர் முழுதாக செலவு செய்யமாட்டார். அந்த ஒரு வெள்ளியில் கால் வெள்ளியை தனது மனைவிக்கு கொடுப்பார். கால் வெள்ளிக்கு முறம் செய்வதற்கான மூங்கில்களை வாங்குவார். மீதமிருக்கும் அரை வெள்ளியை தெருவில் வீசி விடுவார்.

மறுநாள் வழக்கம்போல் முறம் விற்கச் சென்று விடுவார். பாக்கரின் மனைவியும் கால் வெள்ளிப் பணத்தில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தார். பாக்கரும் இல்லத்தில் இருந்து கொண்டே தினமும் தியானத்தில் ஈடுபடுவார். பாக்கர் மிகச்சிறந்த சிவ பக்தர். நடராஜரின் சிலம்பு சப்தம் கேட்ட பின்தான் தனது தியானத்தை கலைப்பார்.

பாக்கரின் மனைவி ஒரு நாள், "சுவாமி! என்னை மகிழ்விக்க கால் வெள்ளி போதும். என்றாலும் கூட, நீங்கள் தினமும் அரை வெள்ளியை வீதியில் எறிவது ஏன்?" என்று கேட்டார்.

"தினமும் மனதில் ஆசை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்கான ஒரு பயிற்சி அது. என்றாவது அந்த அரை வெள்ளிக்கு நீயோ..! நானோ..! ஆசைபடுகிறோமா என்பதை கால தேவி சோதிக்கும் விளையாட்டு, என்றும் வைத்துக் கொள்ளலாம். ஆசைக்கு அடிபணியாத பயிற்சியே இது!" என்று விளக்கம் அளித்தார்.

"எல்லாம் சரி சுவாமி. அடுத்து நமது வீட்டில் ஒரு விசேஷம் வருகிறது. அதற்கு நிறைய பாத்திரங்கள் தேவைப்படுகிறது. நீங்கள் தான் ஊர் முழுவதும் இலவசமாக முறங்களைக் கொடுத்து உள்ளீர்களே. அந்த பெண்களிடம் சென்று நமது விசேசத்திற்கு வேண்டிய பாத்திரங்களை வாங்கி வாருங்கள். பயன்படுத்தி விட்டு திரும்ப தந்து விடலாம்." என்றார்.

பாக்கரும் மனைவி கூறியபடியே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று பாத்திரங்களைக் கேட்டார். அவர்களுக்கு பாக்கர் மிகவும் மட்டமானவராகத் தெரிந்தார். என்னதான் இருந்தாலும் முறம் விற்றுப் பிழைப்பு நடுத்தபவர்தானே... இருந்தாலும் இலவசமாக முறங்களைக் கொடுப்பதால் வேண்டா வெறுப்பாக  வீட்டில் இருந்த ஓட்டை உடைசல் பாத்திரங்களை பாக்கரிடம் கொடுத்தனர். இதன் மூலம் அந்த ஊர் பெண்கள் தன்மீது எப்படி பட்ட அன்பு வைத்துள்ளார்கள் என்பதை பாக்கர் புரிந்து கொள்ள இது ஒரு சந்தர்பமாக அமைந்தது.

மூன்று நாட்கள் கழித்து வீட்டில் விசேஷம் எல்லாம் முடிந்த பின் வாங்கிய பாத்திரங்களை அந்தந்த வீட்டில் கொண்டுபோய் திருப்பிக் கொடுத்தார். பாக்கர் திருப்பிக் கொடுத்த பாத்திரங்களில் இருந்த ஓட்டை உடைசல் எல்லாம் சரி செய்யப்பட்டு புது பாத்திரமாக இருந்தது. அது போக ஒவ்வொரு பாத்திரத்துடனும் ஏதேனும் ஒரு சிறிய பாத்திரம் கூடுதலாக இருந்தது. கூடுதலாக இருந்த பாத்திரங்களைக் கண்டு அத்தனைப் பெண்களும் ஆச்சர்யம் அடைந்தனர்.

"பாக்கரே, எங்களது பழைய பாத்திரங்களை புதிதுபோல் பளபளக்கச் செய்து விட்டீர்களே! நன்றி. அதே சமயத்தில் நாங்கள் கொடுக்காத சிறிய பாத்திரங்களும் ஒவ்வொரு பாத்திரத்துடனும் உள்ளதே அது எப்படி?" என்று எல்லோரும் ஆவலாகக் கேட்டனர்.

"அது வேறொன்றுமில்லை. நீங்கள் கொடுத்த சமையல் பாத்திரங்கள் பகலில் வேலைக்கு உதவின. இரவில் அவை எல்லாம் குட்டி போட்டு விட்டன. நீங்கள் கொடுத்த பாத்திரங்கள் தானே குட்டி போட்டது. அது உங்களுக்கு உரியது தானே. அதனால்தான் உங்களிடம் கொடுத்து விட்டேன்" என்று விளக்கம் கூறினார். ஊர் முழுக்க பாத்திரம் குட்டி போட்டதே ஒரே பேச்சாக இருந்தது.

சிறிது நாட்கள் போனபின் மீண்டும் ஒரு விசேஷம் பாக்கர் வீட்டில் வந்தது. மறுபடியும் பாக்கருக்கு பாத்திரங்கள் தேவைப்பட்டது. இந்த முறையும் அந்த பெண்கள் வீட்டு வாசலில் நின்று பாத்திரங்களைக் கேட்டார். இப்போது யாரும் அவரை உதாசினப்படுத்தவில்லை. முறம் விற்பவர்தானே என்று மட்டமாகப் பார்க்க வில்லை. மாறாக எல்லா பெண்களும் சந்தோஷத்துடன் தங்களது கணவன் மார்களுக்குத் தெரியாமல் மிக நல்ல பாத்திரங்களை விலை உயர்ந்த பாத்திரங்களைக் கொண்டுவந்து பாக்கரிடம் கொடுத்தனர். பாக்கரும் எல்லா பாத்திரங்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு போனார்.

மூன்று நாட்கள் போனது.

குட்டிபோட்ட பாத்திரங்களோடு பாக்கர் வருவார் என்று மங்கையர்கள் மனம்நிறைந்த சந்தோஷத்தோடு பாக்கரை எதிர்பார்த்து காத்திருந்தனர். பாக்கர் திரும்பி வரவே இல்லை. பெண்கள் பதறிப் போயினர். எல்லா பெண்களும் ஒன்று சேர்ந்து பாக்கர் வீட்டுக்கு படையாக கிளம்பினர்.

அங்கே பாக்கரது மனைவி மட்டுமே இருந்தார். வந்திருந்த பெண்கள் கோபத்தோடு, "பாக்கர் எங்கே?" என்று கேட்டார்கள். உடனே பாக்கரின் மனைவி கண்களில் இருந்து கண்ணீர் கசிந்து சிந்தியது.

"அந்த கொடுமையை நான் எப்படி சொல்வேன். நீங்கள் கொடுத்த் பாத்திரங்களை எல்லாம் திருப்பிக் கொடுக்கலாம், என்று என் கணவர் நினைத்திருந்த போதுதான் அந்த விபரீதம் நடந்தது. நீங்கள் கொடுத்த பாத்திரங்களுக்கு எல்லாம் நோய் வந்து இறந்து போய்விட்டன" என்று துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதார்.

"என்னதான் அழுதாலும் மாண்டவைகள் மீளுமா? மீளமுடியாது... வேறு வழியில்லாமல் இறந்து போன எல்லா பாத்திரங்களையும் எடுத்துப்போய் தகனம் செய்து விட்டார். நேற்றுதான் பால் ஊற்றி வந்தார். அந்த கவலையிலே பைத்தியம் பிடித்ததுபோல் இருந்தார். எங்கே சென்றாரோ தெரியவில்லை. நீங்கள் தான் என் கணவரை எப்படியாவது என்னிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்." என்று கூறி குலுங்கிக் குலுங்கி அழுதாள். அந்தப் பெண்கள் எல்லாம் திடுக்கிட்டு போனார்கள்.

நல்லவன்போல் நடித்து தங்களை ஏமாற்றி விட்டதாக கூறிய அவர்கள் நடந்த எல்லாவற்றையும் தங்கள் கணவன்மாரிடம் தெரிவித்தனர். எல்லோரும் ஒன்று சேர்ந்து மன்னரிடம் முறையிட்டனர்.

அந்த மன்னர் தீவிர சிவ பக்தர். பாக்கரின் அருமைகளைத் தெரிந்தவர். இருந்தாலும் மக்களுக்காக விசாரணைக்கு உத்தரவிட்டார். பாக்கர் அரசவைக்கு  வந்தார். பாக்கரை மானசீகமாக வணங்கிய மன்னர், "பாக்கரே, நடந்தவற்றைக் கூறுங்கள். அனைவரும் ஆத்திரமாக உள்ளனர்." என்று மன்னர் கேட்க, "அரசரே! இந்த ஊர் மக்களிடம் முன்பு ஒரு முறை பாத்திரம் வாங்கினேன். திரும்ப கொடுத்து விட்டேன். உண்மையா என்று கேளுங்கள்?" என்றார்.

"ஆமாம்! அரசே, பாக்கர் சொல்லுவது உண்மையே. முன்பு கொடுத்த பாத்திரங்களைத் திருப்பிக் கொடுத்தார். கொடுத்தப் பாத்திரத்துடன் கூடுதலாக ஒரு சிறிய பாத்திரத்தையும் கொடுத்தார். என்ன இது? என்று கேட்டதற்கு பாத்திரங்கள் குட்டி போட்டதாகச் கூறினார். இரண்டாவது முறை நாங்கள் பாத்திரம் கொடுத்தோம் அதை திரும்ப தரவேயில்லை. அதை கேட்டால் பாத்திரங்கள் எல்லாம் இறந்து விட்டது என்று பொய் கூறுகிறார். பாக்கரின் இந்த ஏமாற்று வேலையை தண்டிக்க வேண்டும் மன்னா...!" என்று அனைவரும் கூறினர்.

"அரசே, மோசமான எண்ணம் நாசத்தை விளைவிக்கும். பிறந்தவை இறக்கும் என்பது உலக நியதி. பாத்திரங்கள் அன்று குட்டி போட்டன. பிறப்பும் இறப்பும் இயற்கைதானே. அன்று பாத்திரங்கள் புதியதாய் பிறந்ததை மக்கள் எப்படி நம்பினார்கள்...? இப்போது, பிறந்த பாத்திரம் இறந்துபோனதை ஏன் நம்பவில்லை!" என்று பாக்கர் கேட்டார்.

மக்களின் பேராசையை அகற்றுவதற்காக சித்தர் விளையாடிய விளையாட்டு என்பதை புரிந்து கொண்ட மன்னர் "சித்தர் பெருமானே! பக்குவப்பட்டவர் நீங்கள்! இந்த அரை வேக்காட்டு மனிதர்களிடம் குறைவில்லா மனதை எதிர்பார்க்க முடியுமா! அதனால் அவர்களின் பாத்திரங்களை அவர்களுக்கு திரும்ப அருளும்படி வேண்டுகிறேன்" என்றார் மன்னர்.

பாக்கரும் "அழுக்கடைந்த பாத்திரங்களை தூய்மையான பாத்திரங்களாக மாற்ற நினைத்தது என்றுடைய தவறுதான்" என்று கூறி தனது ஞான திருஷ்டியால் எல்லா பாத்திரங்களையும் வரவழைத்து கொடுத்து விட்டு யார் கண்ணிலும் படாமல் மாயமாய் மறைந்து போனார்.

மனிதர்களின் பேராசையை அகற்ற பாக்கரும் எவ்வளவோ செயல்களை செய்தார். அது அந்த மக்களுக்கு  தெரியாமல் போனதில் பாக்கருக்கு வருத்தமே !

2 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை