Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

மாமனாக வந்து வழக்குரைத்த மகேசன்

துரை மாநகரில் தனபதி என்ற வணிகன் சிறப்போடு வாழ்ந்து வந்தான். வணிகத்தை தொழிலாகக் கொண்ட அவனுக்கு குபேர யோகம் வாய்த்திருந்தது. அவனின் மனைவி சுசீலைக்கு அழகும் நற்குணங்களும் நிறைந்திருந்தது. ஆனாலும் அவளுக்கு குழந்தை பாக்கியம் மட்டும் கைகூடவில்லை. எல்லா செல்வங்கள் இருந்தும் கொஞ்சி மகிழ ஒரு மழலைச் செல்வம் இல்லையே என்ற வருத்தம் அவர்களை வாட்டி எடுத்தது.

    ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர். தனபதி தனது தங்கை மகனையே தனது மகனாக ஏற்று கொண்டான். அவனின் மனைவி சுசீலையும் அவனை அன்போடு வளர்த்து வந்தாள். பலவகையான ஆபரணங்களை அவனுக்கு அணிவித்து அழகுறச் செய்தான்.

    நாட்கள் செல்ல செல்ல தனபதி நன்றி மறக்கத் தொடங்கினான். தன் மனைவி மீது கொண்ட காதல் மயக்கத்தில் தன் தங்கையுடன் அடிக்கடி சண்டையிட்டான். இது தங்கைக்கு கோபத்தை உண்டாக்கியது.

    ஒரு நாள் கடுமையான கோபம் கொண்ட தங்கை “நீ எல்லாம் என்ன மனிதன்? குழந்தையில்லாத பாவிதானே நீ! என் குழந்தையினால்தானே நீ பிறவிப் பயனை அடைந்தாய், நன்றி கெட்டவனே!” என்று கூறி திட்டி விட்டாள்.

    இது தனபதியை மிகவும் வெட்கப்பட வைத்தது. ரோஷம் கொண்ட அவன் அடுத்த பிறவியிலாவது தனக்கு குழந்தை பேறு கிடைக்க வேண்டும். அதற்காக தவம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தான். தனது சொத்து முழுவதையும் தனது மருமகனுக்கு உரிமையாக்கிவிட்டு தனது மனைவியுடன் வனவாசம் சென்றான்.

    தனபதி வனவாசம் சென்ற சிறிது நாட்களிலே அவருக்கு வேண்டாத தாயாதிக்கார்கள் பொய் வழக்கு செய்து, மருமகனிடமிருந்து எல்லா சொத்துக்களையும் பறித்துக் கொண்டார்கள். வயல்கள், தோட்டங்கள், நன்செய் நிலங்கள், நகைகள், அடிமையாட்கள், பசுமாடுகள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டனர். என்னசெய்வதென்று தெரியாத தாயும் மகனும் வீதியில் நின்றனர்.

    போகும் திசை தெரியாமல் திக்கற்று இருப்பவர்களுக்கு தெய்வம் மட்டுமே துணை. அந்த தெய்வத்திடமே சரண் அடைவோம் என்று சோமசுந்தரப் பெருமான் கோவில் சென்று வணங்கினார். “எல்லாம் வல்ல இறைவனே! எங்களின் அவல நிலையை பார்த்தாயா! இருந்தவையெல்லாம் பறி கொடுத்துவிட்டு உன் முன் நாதியற்று நிற்கிறோம். நானோ ஆதரவற்ற பெண் எனக்கு இருப்பதோ ஒரே மகன். அவனும் சிறுவன். விவரம் தெரியாதவன். சாமான்யர்களான எங்களை காப்பது உனது கடமை. எங்களை காத்தருள்வாய் தேவனே!” என்று கூறி விழுந்து புரண்டு பலவாறு அழுதாள் தனபதியின் தங்கை.

    அழுகையின் அயர்ச்சி அவளை அங்கேயே உறக்கம் கொள்ள வைத்தது. உறக்கத்தில் சிவனின் திருவருளால் கனவு வந்தது. பிரமணரின் உருவில் சிவபெருமான் எழுந்தருளினார். “பெண்ணே! இன்று இரவு கடந்து, பொழுது விடிந்ததும். உன் செல்வத்தை அபகரித்தவர்களை அரசன் மீது ஆணையிட்டு தர்மசபைக்கு கொண்டுவந்து விடு. அங்கு யாமே வருவோம். தர்மசீலர்களும், அறிவில் சிறந்து விளங்கும் பெரியவர்களும் ஒப்புக் கொள்ளும்படியான, பொய் வழக்கை தீர்த்துவைத்து பொருள்கள் எல்லாவற்றையும் மீட்டுத் தருவோம்” என்று கூறினார்.

    இதைக் கேட்டு விழித்துக் கொண்ட பெண் வியப்பும் மன மகிழ்வும் கொண்டாள். சோமசுந்தரரை வாழ்த்தினாள். தனது மகனை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினாள்.

    மறுநாளும் விடிந்தது.

    தனது சொத்தை அபகரித்தவர்கள் இருப்பிடம் சென்ற பெண் “தர்மநெறி தவறியவர்களே! பொய்வழக்கில் நீங்கள் வெற்றிபெற அனுமதிக்கமாட்டேன். இங்கு இருக்கும் அனைவரையும் சாட்சியாகக் கொண்டு அரசன் மீது ஆணையிட்டேன். தர்ம சபைக்கு நீங்கள் வரவேண்டும். பெரியவர்கள் சொல்லும் தீர்ப்பைக் கேட்க வேண்டும். எங்களின் பொருளை திரும்ப தரவேண்டும்” என்று கூறி பாதையில் சென்ற அவர்களை மறித்து நின்றாள்.

    அவர்களோ முரடர்கள். வலிமை மிக்கவர்கள் அவள் சொல்வதை கேட்காமல் அவளை அடித்தார்கள். “பாவிகளா! எனது செல்வத்தை ஏமாற்றி அபகரித்தது மட்டுமல்லாமல், நியாயம் கேட்டு தர்மசபைக்கு அழைத்தால் என்னை தாக்குறீர்களே.. இது முறையா?” என்று கத்திக் கொண்டே தனது மகனோடு தர்மசபைக்கு சென்று வழக்கை முறையிட்டாள். தர்மசபையோர் காவலர்களையும் ஏவலர்களையும் அனுப்பி வைத்தனர். தனபதியின் தங்கை அவர்களுடன் சென்று ஏமாற்றுக்காரர்களை அடையாளம் காட்ட ஏவலர்கள் நியாய சபைக்கு இழுத்துவந்தனர்.

    சோமசுந்தரப் பெருமானோ, வனவாசம் சென்றிருந்த தனபதியைப் போல உருவம் கொண்டு சபைக்கு வந்தார். அவர் கண்களில் கோபம் அனலாக வீசியது. மகனைப் பார்க்கும் போது முகம் மலர்ந்தது.

    “இந்த நாட்டில் மன்னன் இல்லையா? நியாயவழி நடக்கும் பெரியவர்கள் இல்லையோ? இறைவன் என்ற ஒருவன் இருக்கிறானா? இல்லையா? தர்மமும் நியாயமும் பாண்டிய மண்ணில் செத்துப் போய்விட்டதா? என்று தனபதிப் பெருமான் முறையிட்டார்.

    தனபதியே நேராக வந்ததால் தாயாதிக்காரர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இனி எதுவும் செய்ய முடியாது என்று மனம் தளர்ந்துவிட்டனர். மனவலிமையை இழந்துவிட்டனர். தாங்கள் ஏமாற்றியதை நினைத்து வெட்கமும் பயமும் கொண்டனர்.

    மாமனாக வடிவம் கொண்டு வந்திருந்த சிவன் தனது மருமகனையும் தங்கையையும் அணைத்துக்கொண்டார். 'ஜயோ! செல்வ செழிப்பில் இருந்த நீங்கள் பரம ஏழைகளாக மாறிவிட்டீர்களா?' என்று வருந்தினார். தாயும் மகனும் தனபதிப் பெருமானின் காலில்விழுந்து கண்ணீர்விட்டு அழுதனர்.

    மருமகனை மார்போடு அனைத்துக் கொண்ட தனபதிப் பெருமான் அவன் முன்பு அணிந்திருந்த பொன் ஆபரணங்களை ஒவ்வொன்றாகப் பெயர் சொல்லி ‘எல்லாம் இழந்தாயோ?! என்று வாய்விட்டு அழுதார். கேட்பவர்களின் மனம் இரங்கியது. கண்கள் கலங்கின. பின்னர் சோமசுந்தரர் குடிகொண்டிருக்கும் கோவிலை நோக்கி “மாணிக்கம் விற்ற பெருமானே! பெண்களுக்கு வளையல் அணிவித்து சாபவிமோசனம் தந்த எங்கள் குலத்தெய்வமே! இந்த வழக்கைத் தீர்த்துவைத்து என் தங்கை இழந்த பொருளை மீட்டுத் தருவாயா…? என்று வேண்டினார். சபையை நோக்கி “நாலும் தெரிந்த நல் அறிஞர்களைக் கொண்ட இந்த தர்மசபை அறிஞர்களே! எங்களுக்கு நியாயம் வழங்குங்கள்” என்று விண்ணப்பித்தார்.

    இருதரப்பினரின் வழக்குகளையெல்லாம் நன்கு கேட்டு ஆராய்ந்த நீதிநூல் வல்லுநர்கள் “தாயாதிக்காரர்களின் வழக்குப் பொய்யானது” என்று தீர்ப்புக் கூறினர். இந்த தீர்ப்பை அவர்கள் ஏற்கவில்லை. அதற்கு பதிலாக “வழக்காட வந்திருப்பவர் தனபதி வணிகரே இல்லை. இவர் வேறு யாரோ…? என்று வாதிட்டனர்.

    இதனைக் கேட்ட தனபதிப் பெருமான் கைகொட்டிச் சிரிந்தார். தனக்கு எதிராக வாதிட்ட அத்தனை தாயாதிக்காரர்களையும் ஒருவர் விடாமல் பெயர் சொல்லி அழைத்தார். அதோடு விட்டுவிடவில்லை. அவர்களின் குடிப்பெயர், பட்டம், காணி, தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள் சொந்தக்காரர்கள், குணங்கள், செய்கின்ற தொழில், செய்த பிழை என்று எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கூறிமுடித்தார்.

    இதனைக் கேட்ட நீதிபதிகள் “வந்திருப்பது தனபதிச்செட்டியர் தான்” என்று முடிவாக கூறினர். தங்களின் வழக்கு தோற்றது. இதனை அறிந்தால் பாண்டிய மன்னன் தங்களை தண்டித்துவிடுவானே! என்ற பயம் அவர்கள் எல்லோருக்கும் ஏற்பட்டது. இதனால் ஒவ்வொருவம் ஏதேதோ காரணங்களைக் கூறியபடி சிதறி ஓடினார்கள்.

    அவர்கள் ஓடிச்சென்றதும் நீதிமான்கள் தனபதி வணிகர் முதலில் கொடுத்திருந்த பொருள்களை எல்லாம் தத்துப்புத்திரனுக்கே உரியவை. அவற்றை திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பு சாசனத்தை வணிகராக வந்திருந்த தனபதிப் பெருமானிடம் தந்தனர். எல்லாம் சுபமாக முடிய வணிகராகத் தோன்றிய சிவபெருமான் மறைந்தருளினார்.

    இந்த வழக்கைப்பற்றி கேள்விப்பட்ட பாண்டிய மன்னனான சுந்தரேச பாதசேகர பாண்டியன் மிகுந்த வியப்பு கொண்டார். வணிகராகத் தோன்றிய சிவபெருமானின் அற்புதங்களை நினைத்து உள்ளம் பூரித்தார். தனபதியின் தத்துப் பிள்ளையான தங்கையின் மகனுக்கு மேலும் பல பரிசுகளை வழங்கினான் மன்னன். சிவபெருமானின் திருக்கோவிலை தங்கத்தால் புதுப்பித்தான்.

1 கருத்துகள்

  1. இது போன்ற வழக்குகளில் சிவனே வந்து சாட்சி சொன்னதாக கதைகள் படித்த நினைவு. இன்று மறுபடி அதுபோன்ற வாசிப்பில் மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை