Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

மஹாராஜாவாக வாழுங்கள்

ங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்துவதற்கு முன்பு சக்கரவர்த்திகளும் மஹாராஜாக்களும்தான் நம்மை ஆண்டார்கள். எதிரிகள், சூழ்ச்சி, யுத்தம் என்று பாதகமான அம்சங்கள் நிறைய இருந்தாலும்.... ராஜாக்கள் வாழ்வே தனிதான். டாம்பீகமும், படோடபமும் நிறைந்த அந்த வாழ்வை சாதாரண மனிதர்கள் உணர்ந்து கொள்ளவே முடியாது. அதை உணரச் செய்வதுதான் மஹாராஜா எக்ஸ்பிரஸின் நோக்கம். எட்டு நாட்கள் சுற்றுலாவில் உங்களை பாரம்பரியம் மிக்க ராஜாவின் வாழ்க்கையை நிஜத்தில் கொண்டு வந்து விடுகிறார்கள்.

இதுதான் மஹாராஜா எக்ஸ்பிரஸ்
2010-ல் 'இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரே­ஷனும்', 'காக்ஸ் அண்ட் கிங்ஸ் இந்தியா'வும் இணைந்து மேற்கொண்டதே இந்த 'மஹாராஜா எக்ஸ்பிரஸ்' சுற்றுலா. இன்றைக்கு இது உலகிலேயே மிக உயர்ந்த ஆடம்பர ரயில் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. ரயிலில் 'பிரஸிடென்ஷியல் சூட்' என்ற ஸ்டார் ஹோட்டல் சமாச்சாரங்களையெல்லாம் கொண்டு வந்தது இதில்தான்.

இந்த எக்ஸ்பிரஸில் மொத்தம் 23 கேரேஜ் இருக்கும். அதில் சுற்றுலா பயணிகளாக வரும் மஹாராஜாக்கள் தங்குவதற்கென்று 14 கேரேஜூக்கள் இருக்கின்றன. சாதாரணமாக 23 பெட்டிகள் கொண்ட ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெட்டிக்கு 72 பேர் என்ற விகிதத்தில் 1,656 பேர் பயணிக்க முடியும். ஆனால் இந்த எக்ஸ்பிரசில் வெறும் 88 பேர் மட்டுமே பயணிக்கிறார்கள்.

இந்த 88 பேரிடம் 1656 பயணிகளின் கட்டணத்தையும் வசூலித்து விடுகிறார்கள். இப்போது புரிகிறதா இதன் பயணக்கட்டணம் ஏன் காஸ்ட்லியாக இருக்கிறது என்று. பிரஸிடென்ஷியல் சூட் டுக்காகவே தனியாக ஒரு கேரேஜ் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோக டைனிங், பார், லாஞ்ச், ஜெனரேட்டர், ஸ்டோர், தண்ணீரை சுத்திகரிக்கும் நிலையம் என்று பலவும் மற்ற கேரேஜ்களில் அமைக்கப்பட்டுள்ளன.

சிவப்பு கம்பள வரவேற்பு, பிளாட்பாரத்தில் தெரிகிறதா..!
பயணிகள் தங்கும் 14 கேரேஜிலும் 43 தனித்தனி கேபின்கள் உள்ளன. இதில்தான் 88 விருந்தினர்கள் தங்குகிறார்கள். பைவ் ஸ்டார் ஹோட்டலில் என்னென்ன வசதிகள் உள்ளனவோ அத்தனையும் இந்த நகரும் அரண்மனையில் உள்ளது.

'மயூர் மஹால்'
இருக்கைகள், படுக்கைகள், எல்லாமே அரண்மனை வடிவத்திலே அமைந்துள்ளன. இந்தப் பயணத்தின் மூலம் இந்திய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் உணர்ந்து கொள்ள முடியும். பழங்கால கோட்டைகள், அரண்மனைகள் பற்றிய விவரங்கள் வழிகாட்டிகள் மூலம் தெளிவாக அறியலாம். யுனெஸ்கோவின் பாரம்பரிய பகுதிகளை அதிகம் கொண்ட சுற்றுலா திட்டம் இது. வனவிலங்குகளை ரசிக்க நே­னல் பார்க்குகளும் உள்ளன. உள்ளூர் கலைஞர்களின் நாட்டுப்புற பாடல்கள் நிகழ்ச்சியும், இந்தியர்களின் சிறப்பு அம்சமான விருந்தோம்பலும் இந்த பயணத்தின் சிறப்பு.

இவையெல்லாம் ராஜாக்கள் காலத்து பழக்க வழக்கங்களாகவே உள்ளனவே. நவீன வசதிகள் இல்லையா? என்று கேட்பவர்களுக்கு...ஏன் இல்லை? என்ற பதிலைத்தான் மஹாராஜா எக்ஸ்பிரஸ் தருகிறது. உடைமாற்ற தாராளமான இடம், ஒவ்வொருவரும் அவரவர்க்கு ஏற்றபடி ஏஸியை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி, 24 மணி நேர மருத்துவ வசதி, இலவச வை-ஃபை, இன்டர்நெட் இணைப்பு, எலெக்ட்ரானிக் ஸ்மோக் டிடெக்ஷ­ன் சிஸ்டம், லைவ் டெலிவிஷ­ன், சிசிடிவி கேமரா, டைரக்ட் இண்டர்நே­னல் டயல் டெலிபோன், அட்டாச்டு பாத்ரூம், அவசர உதவிக்கு ஹெலிகாப்டர், ஆம்புலன்ஸ் வசதி போன்ற எல்லாமே இதில் இருக்கிறது. மஹாராஜாவில் ஏறியது முதல் பயணம் முடிந்து இறங்கும் வரை சுற்றுலாப்பயணிகளை தலைமேல் வைத்து தாங்குகிறார்கள் இதன் பொறுப்பாளர்கள்.

ஓடும் ரயிலில் அரட்டை
இந்த எக்ஸ்பிரஸில் இரண்டு டைனிங் கேரேஜ்கள் உண்டு. ஒன்றின் பெயர் 'ரங் மஹால்'. அதாவது வண்ணங்களின் அரண்மனை, மற்றொன்று 'மயூர் மஹால்'. அதாவது மயில் அரண்மனை. இங்கு உணவும் ராஜ மரியாதையோடு பரிமாறப்படுகிறது. இந்த ரயிலில் சாகஸத்திற்கும், சீரிய பண்புகளுக்கும், காதலுக்கும் இடமுண்டு. தேனிலவு தம்பதிகளுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை தரும் சுற்றுலா இது.

உணவகம்
மஹாராஜா எக்ஸ்பிரஸ் 5 வகையான சுற்றுலாக்களை நடத்துகிறது. அதில் முதன்மையானது ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா! 8 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா மும்பையில் தொடங்கி அஜந்தா, உதய்பூர், ஜோத்பூர், பிகானீர், ஜெய்பூர், ரத்தம்பூர், ஆக்ரா வழியாக டெல்லியில் முடிகிறது.

ஒவ்வொரு ரூமுக்குமான வரவேற்பு அறை
அஜந்தா குகை, ராஜஸ்தான் அரண்மனைகள், கோட்டைகள், தாஜ்மஹால், யானைகளின் போலோ விளையாட்டு, சைட் ஸீயிங் டூர், ஸ்பா போன்றவையும் இதில் உள்ளன. மொத்தத்தில் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு அனுபவத்தையும், எட்டு நாட்கள் மஹாராஜா வாழ்க்கையையும் தரும் சுற்றுலா இது. வாழ்நாளில் ஒருமுறையாவது போய்வர வேண்டிய சுற்றுலா இது.

----------------------------------------------------------------------------------------------------------------
'ஹெரிடேஜ் ஆப் இந்தியா' என்ற இந்த எட்டு நாட்கள் சுற்றுலாவுக்கான கட்டணங்கள் கீழே தந்துள்ளேன்.
மொத்தம் நான்கு வகையான கட்டணங்கள் உண்டு.
-----------------------------------------------------------------------------------------------------------------
டீலக்ஸ் கேபின்
 ரூ.2,00,138 (10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான கட்டணம்.
 இதுவே பெரிவவர்களுக்கு ரூ.4,60,276.

ஜூனியர் சூட்
ரூ.2,89,674 (குழந்தைகளுக்கு)
ரூ. 5,78,762. (பெரியவர்களுக்கு)

சூட்
 ரூ.4,03,788 (குழந்தைகளுக்கு)
ரூ.8,07,576 (பெரியவர்களுக்கு)

பிரசிடென்ஸியல்  சூட்
ரூ.6,96,388 (குழந்தைகளுக்கு)
ரூ.13,86,924. (பெரியவர்களுக்கு)
------------------------------------------------------------------------------------------------------------------




26 கருத்துகள்

  1. பதில்கள்
    1. நான் மகாராஜாவில் எல்லாம் பயணம் செய்தது கிடையாது. ஆனால், பயணம் செய்தவர்களின் அனுபவங்களை கேட்டிருக்கிறேன். அதை கொண்டே இந்த பதிவு.

      நீக்கு
  2. இந்த புகைவண்டி பற்றி ஒரு தொடர் "விபரணச் சித்திரம்" பார்த்தேன். பல நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்காக இப்படி புகை வண்டி வசதியுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த விவரங்கள் என்னிடமும் உள்ளன. எங்களது சுற்றுலா மாத இதழிலும் அதைப் பற்றி எழுதியுள்ளேன்.

      வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி.

      நீக்கு
  3. ஆகா
    அருமை
    பணம் பணம் பணம்
    இருந்தால் மட்டுமே இந்த வண்டியில் ஏறலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக, பணம் இருந்தால் நாம் ராஜாக்கள் தான் என்பதை நிரூபிக்கும் மற்றொரு ஆவணம் இந்த மஹாராஜா எக்ஸ்பிரஸ்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  4. தகவலுக்கு நன்றி நண்பரே அனைத்தும் குறித்துக்கொண்டேன் நிச்சயம் ஒருநாள் போவேன் நான் நினைத்தால் இன்று இரவுகூட போவேன் போய் வந்து அனுபவத்தை பகிர்ந்தாலும் பகிர்வேன்.
    (புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்)
    T.M. 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போகும் போது எங்களையும் கட்டாயம் கூப்பிடுங்கள் கில்லர்ஜி. உங்கள் புண்ணியத்தில் நாங்களும் மகாராஜாவாக வருகிறோம்.

      நீக்கு
  5. அய்யா வணக்கம்.
    வழக்கம் போலவே இதழியலாளர்க்கே உரிய தேர்ந்த நடை.
    படிப்பவரைத் தன்னோடு சேர்த்து அழைத்துக் கொண்டு போகும் தன்மை.!
    கொஞ்சமும் அலுப்போ சலிப்போ இல்லாமல் பதிவு முழுவதையுமே ஒரே மூச்சில் மகாராஜா எக்ஸ்பிரஸின் வேகத்தில் படித்து முடிக்கச் செய்த தங்களின் எழுத்துகள்..
    உங்களிடமிருந்து கற்க வேண்டிவை நிறைய உள்ளன.
    மற்றபடி இந்தப் பயணம்........ எனக்கெல்லாம் படிக்கலாம் என்ற மட்டில்தான்.

    த ம கூடுதல் 1

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பாராட்டுகள் என்னை நெளியச் செய்கின்றன. அன்பின் பாராட்டாகவே அவற்றை எடுத்துக் கொள்ளகிறேன்.
      மற்றபடி நம்மையெல்லாம் கில்லர்ஜி அழைத்துப்போவார். கவலை வேண்டாம்.

      நீக்கு
  6. ஆர்வத்தோடு படித்து வந்தவனுக்கு விலையைப் பார்த்ததும் மயக்கமே வந்து விட்டது. அற்புத பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகாராஜாக்கள் எப்போதுமே காஸ்ட்லி ஆனவர்கள்தானே ஜி!

      நீக்கு
  7. இந்த ரயில் வசதிகூட வடக்கு பக்கம் தானா ,அட்லீஸ்ட் ,ரயிலையாவது பார்க்கலாம் என்றால் அதுவும் முடியாது போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ஆமாம் சரியாச் சொன்னீங்க ஜி....

      நீக்கு
    2. மஹாராஜா எக்ஸ்பிரஸ் பார்க்க முடியாது. அது உலகத்திலே காஸ்ட்லியான ரயில். ஆனால், அதற்கு அடுத்த நிலையில் உள்ள சில ரயில்களை தமிழ்நாட்டில் பார்க்க முடியும்.

      கர்நாடகா சுற்றுலா துறையும் ரயில்வேயும் இணைந்து நடத்தும் டூர் இது. சற்று மலிவு விலை டூர் இது. 8 நாட்கள் டூருக்கு கட்டணம் கீழே..

      ஒரு நபருக்கு ரூ.1,68,000
      இரண்டு பேருக்கு ரூ.2,80,000
      மூன்று பேருக்கு ரூ.2,94,000

      சுற்றுலா விவரம்
      ---------------------------

      முதல் நாள் - பெங்களூர் ரயில் புறப்படுதல்
      இரண்டாம் நாள் - சென்னை, மகாபலிபுரம்
      மூன்று நாள் - பாண்டிச்சேரி, ஆரோவில்
      நான்காம் நாள் - தஞ்சாவூர், திருச்சி
      ஐந்தாம் நாள் - மதுரை
      ஆறாம் நாள் - கன்னியாகுமரி, திருவனந்தபுரம்
      ஏழாம் நாள் - கொச்சின், ஆலப்புழை
      எட்டாம் நாள் - பெங்களூர்

      ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த ரயிலை மதுரை ரயில் நிலையத்தில் பார்க்கலாம். முடிந்தால் குடும்பத்தோடு ஊர் சுற்றி வரலாம், ராஜாமரியதையோடு.

      நீக்கு
  8. ஆஹா...அற்புதமான அனுபவப் பயணமாக இருக்கும் போல...நீங்க எழுதி இருப்பதைபடிக்கும் போது ஒரு தடவை போனா என்ன என தோன்றியது....? ஆனா....கடையா நீங்க வெளியிட்ட கட்டணத்தை பார்த்தவுடனே...சரி சரி சகோ எழுதியதில் நாம தான் பயணம் செய்து பார்த்து விட்டோமே...விடு ஜீட் அப்படின்னு திருப்தியாகி விட்டது...

    நன்றி சுற்றுலாவுக்கு கூட்டிச் சென்றமைக்கு....சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சகோதிரி,

      முதல் முதலாக எனது தளத்திற்கு வருகை தந்து, கருத்திட்டு, வாக்களித்ததற்கு வரவேற்புடன் கூடிய நன்றிகள்.

      தொடருங்கள்! நானும் தொடர்கிறேன்!

      நீக்கு
  9. நண்பரே! இதைப் பற்றி ரெயில்வே அறிமுகப் படுத்தி அதைப் பற்றிய விவரணங்கள் வந்த போதே வாசித்து வாசித்து, கனவு கண்டு, நிறைய நாட்கள் மஹாராஜாக்களாக வாழ்ந்தாயிற்று. ஆமாம்! தொகையைப் பார்த்து மயக்கத்துலதான்.....அன்றே! சரி சரி இப்பவே நாம மகாராஜாக்களாத்தானே இருக்கோம் என்று நினைத்து தேற்றிக் கொண்டோம்.....கனவுகள் காணுங்கள். அவை மெய்ப்படும் ஒரு நாள் என்று நம் அப்துல்கலாம் ஐயா அவர்கள் சொல்லுவதை நாங்கள் மெய்ப்பட வைக்கலாமே! கில்லர்ஜியின் தயவில் என்றிருக்கின்றோம்.....அவரு ரொம்ம்ம்ம்ம்ம்ப வே நல்லவரு! (என்னைய ரொம்பவே நல்லவருன்னு சொல்லிட்டாய்ங்க இந்த வில்லங்கம் புடிச்ச தில்லைஅகத்துக்காரங்கனு சொல்லி அவர் அழுவது கேட்கின்றது!!!) ...நாங்கள் கில்லர்ஜியிடம் சொல்லிவிடலாம் என்றால் நீங்களும் அதைத்தான் சொல்லி இருக்கின்றீர்கள்....சரி அப்ப நாமெல்லோரும் ரவுண்டு கட்டுவோம் அவரை....

    அருமையான விவரணம். நல்ல நடை! பயணித்தது போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே!

      நம்ம கில்லர்ஜி நம்மை அழைத்துப் போவதை தாங்களும் உறுதிபடுத்திவிட்டீர்கள். மஹாராஜா எக்ஸ்பிரசில் நம்மை அழைத்து போக முடியாவிட்டாலும், அட்லீஸ்ட் கோல்டன் சாரியட் எக்ஸ்பிரசில் அழைத்து செல்லலாம். கட்டணம் குறைவு. (பார்க்க பகவான்ஜிக்கான பதிலை)

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே!

      நீக்கு
    2. தில்லை அகத்து, வில்லங்கத்தார்களுக்கு.....
      கொஞ்சநேரம் வேலைக்கு போயிட்டு வருவதற்க்குள் என்னைப்பற்றி பொறணியா ?

      நீக்கு
  10. பயணம் செய்யாவிட்டலும் ,ஒருமுறையாது உள்ளே ஏறிப்பார்க்க ஆசை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கான வாய்ப்பும் குறைவு. ஏனென்றால் பெரிய மனிதர்கள் பயணிக்கும் வண்டி என்பதால் பாதுகாப்பு அதிகம். பயணிப்பவர்கள் நமக்கு தெரிந்தவர்களாக இருந்ததால் உள்ளே சென்று பார்த்துவிட்டு வரலாம்.

      நீக்கு
  11. இப்படியான பயணத்தை படிக்க மட்டுமே முடியும் ஒவ்வொரு படமும் மிகப்பெரிய அரண்மனையை நினைவுபடுத்தியது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை