Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

இதற்குத்தானா ஆசைப்பட்டாய் வைபவி..?!


வாட்சாப்பில் வந்த இந்த செய்தி என்னை மிகவும் கலங்க வைத்துவிட்டது. அதை அப்படியே இங்கே பகிர்கிறேன்!

பல்லாவரத்திலிருந்து குன்றத்தூர் போகும் சாலையில் இருக்கிறது திருமுடிவாக்கம்.. உயர உயர அபார்ட்மென்டுகள். ஆயிரக் கணக்கான வீடுகள்! ஏரியா மொத்தமும் சொல்லிச் சொல்லி மாய்கிறது அந்தச் சம்பவம் பற்றி!

பிரைமரி ஸ்கூலில் மூன்றே மூன்று வருஷம் தனக்கு டீச்சராக இருந்த ராஜம்மா என்பவரை, 10 வருஷங்களாக நினைத்திருந்த தோடு, உடல்நிலை சரியில்லாத நிலையிலும் குஜராத்திலிருந்து வந்து அவரைப் பார்த்து, அவர் தோளிலேயே மரித்திருக்கிறது ஓர் அழகிய ரோஜா!

வைபவி விஜயலஷ்மி - இதுதான் அந்த மாணவியின் பெயர். கண்ணீருக்கும் கேவல்களுக்கும் இடையே, கோரமான அந்த நிஜத்தைப் பகிர்ந்துகொள்கிறார், ஆசிரியை ராஜம்மாள்.

‘‘இந்த இடம்தாங்க அந்தக் குழந்தை வந்து உட்கார்ந்திருந்தது... இதோ, இந்தத் தோள்லதான் சாய்ஞ்சு படுத்திருந்துச்சு. அதோட விரல்களைப் பிடிச்சபடி நான் கன்னத்தைத் தட்டிகொடுத்துட்டு இருந்தேன்.. அப்படியே என் தோள்ல சாய்ஞ்சபடியே உயிர் போயிடுச்சுங்க.. இப்போ வரை என்னால நம்ப முடியலை! எதுக்காக என் மேல அந்தக் குழந்தைக்கு அப்படியொரு பாசம்... என்ன கொடுத்தேன் நான்? ஒரு டீச்சரா மூணு வருஷம் நான் அதுகிட்ட அன்பு காட்டினதைத் தவிர வேற எதையும் பெரிசா செய்துடலை... ஆனா, அந்தக் குழந்தை எனக்குக் கொடுத்துட்டுப் போயிருக்கிற மரியாதை, கௌரவம்.. எப்பேர்ப் பட்டது? உலகத்தில் யாருக்காவது இப்படி நடந்திருக்குமா? நடந்ததுனு சொன்னால்கூட நம்ப மாட்டோமே!’’  மனசை ஆற்ற முடியாமல், 
குழந்தையைப் போல அரற்றுகிறார் ராஜம்மாள்.

‘‘2007-ம் வருஷம்.. நான் தாம்பரம் கேந்திரிய வித்யாலயா 2 (ஏர்ஃபோர்ஸ் ஸ்டேஷன்) ஸ்கூல்ல பிரைமரி செக்ஷன்ல வேலை பார்த்துட்டிருந்தேன். அங்கே முதல் வகுப்புக்கு எடுக்கிற அதே ஆசிரியைதான் மூணாவது வகுப்பு வரை. அதனால குழந்தைங்க நல்லா பழகி ஒட்டிக்குவாங்க. வைபவியும் அப்படித்தான்..

நார்மல் குழந்தைகளைவிட கொஞ்சம் பருமனா இருந்ததால், மத்த பசங்க அவளைக் கிண்டல் பண்ணுவாங்க. நான் அவகிட்ட பரிவா நடந்துக்குவேன். அதனால என்கிட்ட அந்தக் குழந்தைக்குக் கூடுதல் பிரியம். தன் லன்ச் பாக்ஸை பிரிச்சு, நான் ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டு ‘நல்லாருக்கு’னு சொன்ன பிறகுதான் அது சாப்பிடும். என் புடவை நல்லாயிருந்தா முதல்ல ஓடி வந்து சொல்லும்! ‘உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்டு யார்’னு கேட்டாகூட, ‘ராஜ்மா மேம்’னு என் பேரைச் சொல்லும்.

வைபவியோட அப்பா ராம கிருஷ்ணராஜா, ஏர்ஃபோர்ஸ்ல விங் கமாண்டர்; அம்மா ப்ரியா ஹவுஸ் வொய்ஃப்! கல்யாணமாகி 10 வருஷங்கள் குழந்தையில்லாம, டில்லிக்குப் பக்கத்திலிருக்கிற வைஷ்ணவிதேவி கோயில்ல பிரார்த்தனை செய்து, முதல்ல பையன் வைஷ்ணவ் பிறந்திருக் கான். அடுத்ததுதான் வைபவி! அதனால வீட்டுல அந்த ரெண்டு குழந்தைகளும் அவங்களுக்கு  ரொம்ப செல்லம்!

வைபவி தேர்டு ஸ்டாண்டர்டு முடிக்கிறப்போ, அவங்கப்பாவுக்கு அலகாபாத்துக்கு டிரான்ஸ்ஃபர் ஆச்சு. ‘போகவே மாட்டேன்’னு அடம் பிடிச்சு நின்னுது வைபவி. ‘ராஜ்மா மேமும் என்கூட வரணும்’னு ஒரே அழுகை! நான் வர முடியாதுங்கிற யதார்த்தத்தைப் புரிஞ்சுக்கத் தெரியாத வயசு! ‘எங்க அப்பா விங் கமாண்டர் தானே மேம்? பிரின்ஸிபால்கிட்ட சொல்லி பர்மிஷன் வாங்கி உங்களையும் அங்கே கூட்டிட்டுப் போயிடுவேன்’னு அது சொன்னப்ப, அந்தப் பிஞ்சு இதயத்தின் பாசத்தில் வாயடைச்சுப் போயிட்டேன். அப்புறம் ஒரு வழியா, ‘ஃப்ளைட்ல இப்போ டிக்கெட் இல்லையாம்.. நாளைக்கு ஃப்ளைட்ல மேடம் வருவாங்க!’னு சொல்லி அவளை சமாதானப் படுத்தி, அனுப்பி வச்சோம்!

அங்கே போயும் ரொம்ப நாட்களுக்கு ‘என்ன இன்னும், மேம் வரலையே?’னு கேட்டுட்டே இருந்திருக்கா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம் சொல்லி சமாளிச்சிருக்காங்க. ஒரு கட்டத் துல அவளே புரிஞ்சுக்கிட்டா. அதுக்கப்புறம் போன்ல பேச ஆரம்பிச்சா!

வருஷா வருஷம் ஏப்ரல்ல அவ பிறந்த நாளுக்கு நான் வாழ்த்துச் சொல்வேன். என் பிறந்த நாளன்னிக்கு காலையில் வர்ற முதல் கால் அவளோடதாத்தான் இருக்கும். என்கிட்ட பேசும்போது எல்லாம் மறக்காம அவ கேட்கும் கேள்வி.. ‘ஏன் மேம் எந்த டீச்சருமே உங்களை மாதிரி இருக்க மாட்டேங் கிறாங்க?’ என்பதுதான். அவளோட அன்பை நினைச்சு எனக்குக் கண்ணீரே துளிர்க்கும். ‘எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங் கம்மா’ என்பதுபோல பதில் சொல்வேன். ‘யூ ஆர் ஸோ லவிங்! ஸோ ஸ்வீட்! ஐ லவ் யூ ராஜ்மா மேம்! யூ ஆர் மை பெஸ்ட் ஃப்ரெண்ட்!’ - இதெல்லாம் வைபவி அடிக்கடி சொல்ற வார்த்தைகள். 
எதுன்னாலும் நான் சொன்னா கேட்டுக்குவா. வீட்ல அவ ஏதாவது மருந்து சாப்பிடலைன்னா கூட அவங்க பாட்டி, எனக்கு போன் பண்ணுவாங்க. நான் சொன்னதும் சமர்த்தா சாப்பிட்டுடும் குழந்தை! அந்த அளவுக்கு ஏதோ ஒரு அட்மிரேஷன், அட்டாச்மென்ட்!

இன்னொரு விஷயம் கேட்டு நான் ஆடிப் போய்ட்டேன்... ‘டின்னருக்கு என்ன வேணும்’னு பாட்டி கேட்டா, ‘சப்பாத்தி வித் மை டீச்சர்’னு சொல்வாளாம். அவளுக்கு ராஜ்மா (பீன்ஸ்) ரொம்பப் பிடிக்கும். வீட்ல, அவளோட ரூம்ல நான் தேசிய நல்லாசிரியர் விருது வாங்கின போட்டோவை வச்சிருக்கிறதா அவங்க அம்மா சொல்வாங்க.

ஆச்சு.. கால ஓட்டத்தில் இப்படியே பத்து வருஷங்கள் ஓடிடுச்சு. வைபவி பத்தாவது படிச்சிட்டிருந்தா. போன வருஷம் அக்டோபர்னு நினைக்கிறேன்.. நான் போன்ல பேசினப்போ, அவ குரலே சரியில்லை. ஏதோ மேல் மூச்சு வாங்குற மாதிரி பேசினா. ‘குழந்தைக்கு ஏதோ உடம்புக்கு’னு தெரிஞ்சுது. வைபவியின் அப்பா கிட்ட பேசும்போது அவர் குரலும் சுரத்தில்லாம இருந்தது. என்னன்னு புரிஞ்சுக்க முடியல.

நவம்பர் மாசம் வெள்ளம் வந்தப்போ, நான் எப்படி இருக்கேன்னு கேக்கறதுக்காக பேசினாங்க. ரெண்டு தடவை வைபவி பேசினபோதும், ஆஸ்பத்திரியில் இருந்துதான் பேசியிருக்கானு பின்னாலதான் தெரிஞ்சுது! அவளுக்கு கிட்னியில் பிரச்னை, டயாலிசிஸ் பண்ணிட்டிருக்காங்க என்பது வரை தகவல் சொன்னாங்க.

மனசு வலிச்சுது! ‘கடவுளே... ஏன் இந்தச் சின்னக் குழந்தையை இப்படி கஷ்டப்படுத்துற?’னு என் இஷ்ட தெய்வம் பெருமாள் கிட்ட வேண்டிக்கிட்டேன். அதுக்கு அடுத்த முறை பேசும்போது, ‘எனக்குக் குழந்தையைப் பார்க் கணும் போலிருக்கு!’னு சொல்லி, ஏர் டிக்கெட் எல்லாம் கூட ட்ரை பண்ணினேன். ஆனால், அவங்கப்பா ‘பொங்கலுக்கு சென்னை வந்தாலும் வருவோம் மேடம். வைபவியும் உங்களைப் பார்க்கணும்னு தினமும் சொல்லிட்டே இருக்கு!’ என்றார். அதனால நான் கிளம்பல.

ஆனா, பொங்கலுக்கு வரல. அதுக்கப்புறம், இந்த பிப்ரவரி மாசம் 6-ம் தேதி.. திடீர்னு வைபவிகிட்டே இருந்து போன்! என்னோட அட்ரஸைக் கேட்டா. எதுக்குனு கேட்டப்போ, அப்பா ஏதோ கொரியர் அனுப்பணும்னு சொன்னாங்கன்னு சொன்னாள். ஆனா, என்கிட்ட சொல்லாம சர்ப்ரைஸா என் முன்னால வந்து நிற்கணும்கிறது அவளோட திட்டமா இருந்திருக்கு. 

7-ம் தேதி பார்த்தா, கார்ல வந்து இறங்குறாங்க. வைபவியும், அவ பேரன்ட்ஸும். அப்படியே அவளைக் கட்டிப் பிடிச்சி, உச்சி முகர்ந்தேன். டயாலிசிஸ் பண்ணின அடையாளமா கழுத்துல தழும்பு. துப்பட்டாவால அதை மறைச்சிருந்தா. முகம் லேசாக உப்பியதுபோல இருந்துச்சு. என்னைப் பார்த்த சந்தோஷத்தில் நோயைக்கூட மறந்துட்டு, முகத்தில் அவ்வளவு ஒரு மலர்ச்சி யோட பேசிட்டிருந்தா.. அவளோட டென்த் எக்ஸாம்ஸ் பத்தி சொன்னா. ‘நான் நல்லா எழுதி உங்க ஸ்டூடன்ட்னு ப்ரூவ் ப்ண்ணுவேன்’னு சொன்னா.

எல்லோருக்கும் டீ போட்டேன். வைபவிக்கும் கொடுத்தேன். அரை டம்ளர் குடிச்சது குழந்தை. கொஞ்ச நேரம் படுத்தது. அப்புறம், படுத்திருக்க முடியலனு எழுந்து உட்கார்ந்தது. என்னோட கட்டில்ல, காலைக் கீழே தொங்கப் போட்டுக்கிட்டு அவள் நடுவிலே யும் நானும் அவளோட அம்மாவும் ரெண்டு பக்கத்துலயும் உக்கார்ந் திருந்தோம். அவளுக்கு முன்னாடி அழக்கூடாதுனு அவ பெற்றோர் ஒரு சொட்டு கண்ணீர்கூட விடாமல், பல்லைக் கடிச்சிக்கிட்டு சிரிச்சபடி இருந்தாங்க. அது மனசை ரொம்ப சங்கடப்படுத்திச்சு.

‘எனக்கு ஞாபகம் இருக்கு மேம்.. தாம்பரம்ல ஸ்கூல் டே ஃபங்க்ஷன்ல பிங்க் டிரெஸ் போட்டு என்னை ஆட வச்சீங்க!’னு சொல்லி சிரிச்சா. ‘ஐ மிஸ் யூ மேம்’னு கட்டிக்கிட்டா.

பேசிட்டு இருக்கும்போதே ‘டயர்டா இருக்கு மேம்’னு சொல்லிக்கிட்டே என் தோள்ல சாஞ்சுக்கிட்டா! லேசா மூச்சுத் திணறல் இருந்ததுபோல.. மூச்சு விட்டா! தண்ணி கேட்டா.. கொடுத்ததும் வாங்கி ஒரு மடக்கு குடிச்சா! என் வலது கையால் அவளோட தோள்களை அணைச்சதுபோல பிடிச்சிருந் தேன். இன்னொரு கையால் கன்னத்தில் தட்டிக் கொடுத்துட்டு இருந்தேன். பேச்சே இல்லை! அவங்க அம்மா, ‘பேபி, பேபி’னு கூப்பிட்டுப் பார்த்தாங்க.

நானும் பதற்றமாகி ‘வைபவி... பாப்பா’னு கன்னத்தைத் தட்டிப் பார்த்தேன். எனக்கு உச்சந்தலை யிலிருந்து உள்ளங்கால் வரை என்னவோ ஓடின மாதிரி உணர்வு! அப்படியே படுக்க வச்சோம்! மூக்கில் லேசா ஒரு திரவம் வடிஞ்சிருந்தது. நாக்கின் நுனி லேசா வெளியில் தள்ளியபடி இருக்க, உடலில் எந்த அசைவும் இல்லை. எனக்குள்ள ‘சிலீர்’னு என்னமோ பண்ணுச்சு! ‘விபரீதம்’னு மூளையில் உறைச்சது.

அடிச்சுப் பிடிச்சு கீழிறங்கி ஓடி, ஒரு டாக்டரைக் கூட்டிட்டு வந்தேன். டாக்டர் வந்து செயற்கை முறை சுவாசத்துக்கு முயற்சி செய்து பார்த்தாங்க. கடைசியில், நாடியைப் பிடிச்சிப் பார்த்துட்டு, உதட்டைப் பிதுக்கினாங்க!

‘ஐயோ.. கடவுளே!’னு நான் கதறின அந்த நிமிஷத்திலிருந்து அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் ஏதோ கனவு போலத்தான் இருக்கு!

ஆம்புலன்ஸ் வந்தது. வேறொரு பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்ப் பார்த்தாங்க. ‘வைபவி உயிரோடு இல்லை’ங்கற கொடுமையான நிஜத்தை அவங்களும் உறுதிப்படுத்தினாங்க. அங்கேயிருந்து வைபவியை, கொரட்டூர்ல இருக்குற அவங்க பெரியப்பா வீட்டுக்குக் கொண்டு போனோம். ஒரு ஜடம் மாதிரி நான் அந்தக் குழந்தையின் முகத்தையே பார்த்தபடி இருக்க, வந்தவங்க எல்லாம், ‘யார் அந்த மேடம்?’னும் ‘இவங்கதான் அந்த டீச்சரா?’னும் என்னைப் பார்த்துட்டுப் போனாங்க. ‘இவங்களைப் பார்க்கத்தான் அங்கேயிருந்து வந்துச்சாம்.. இந்த மேடம்னா உசுராம்!’னு எல்லாரும் சொல்லச் சொல்ல எனக்கு கட்டுப் படுத்த முடியாமல் அழுகை!

அடுத்த நாள் ஃப்ளைட்ல வந்திறங்கிய பாட்டியும் வைபவி யின் அண்ணாவும் கதறிய கதறல்.. ‘ராஜ்மா மேடத்தைப் பார்த்துட்டு வந்துடறேன் பாட்டினு சொன்னியே கண்ணு! எங்கேடா போன? இதோ பாரு உன்னோட ராஜ்மா... எழுந்து வாடா!’னு அந்த அம்மா ஓலமிட்டது இன்னும் என் காதுகளை விட்டுப் போகலை!’’ அந்த நிகழ்வை அப்படியே கண்களில் காட்டிக் கலங்குகிறார் ராஜம்மாள்.

‘‘என்ன பந்தம் இது? எந்த ஜென்மத்து பந்தம்? விட்ட குறை தொட்ட குறையாக பூர்வ ஜென்மத்தில் விட்டுப் போனதை நிறைவு செய்ய வந்த தேவதை... இனி என்னோடு எப்போதும் இருந்து என்னை வழி நடத்தப் போகும் என் குட்டி தேவதை! அந்தக் குழந்தையை இழந்து தவிக்கிற பெற்றோருக்கும், அண்ணனுக்கும், பாட்டிக்கும் இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரும் தைரியத்தைக் கடவுள் தரணும்!’’ என்கிறவருக்கு வைபவி தினமும் கனவில் வருகிறாளாம்.

‘வைபவி... என் செல்லமே! உனக்கு அன்பைத் தவிர வேற எதையுமே நான் கொடுக்கலையே! ஆனா.. நீ எனக்குக் கொடுத்திருக் கிறது மிகப் பெரிய கௌரவம். நான் வாங்கின நல்லாசிரியர் விருதெல்லாம், நீ கொடுத்திருக்கும் இந்த விருதுக்கு முன்னால் எம்மாத்திரம்? இந்தக் கடனை நான் எப்படிக் கழிப்பேன்? மீண்டும் பிறந்து வா கண்ணே! உனக்கு வகுப்பெடுக்கக் காத்திருக் கேன் இந்த ராஜ்மா!’ எனத் தான் எழுதி வைத்திருக்கும் வரிகளை நமக்குக் காட்டுகிறார் ராஜம்மாள்.

நம் விழிகளின் நீர்த்திரையால் கலைந்து தெரிகின்றன எழுத்துகள்!
- பிரேமா நாராயணன்

இந்த நேசம் வந்தது எப்படி?

இத்தனை பாசத்தையும் நேசத்தையும் ராஜம்மாள் ஈட்டியது எப்படி? அவர் குழந்தைகளிடம் காட்டுவது அப்படி என்ன ஸ்பெஷல் டிரீட்மென்ட்?

‘‘குழந்தைகளின் அன்பு மட்டுமே என்னுடைய பெரிய சொத்து! பொதுவாக ஆசிரியர் & மாணவி உறவு, அந்தப் பள்ளியை விட்டுப் போகும் வரைதான் இருக்கும். பெற்றோரும் அப்படித்தான். ‘நம்ம குழந்தையை நல்லா பார்த்துக்கணுமே’ என்று ஒரு பள்ளியில் படிக்கும் வரைதான் ஆசிரியர்களிடம் நன்றாகப் பழகுவார்கள். ஆனால், என் விஷயத்தில் யாரும் அப்படியல்ல. நான் போடும் ஒரு கமென்ட்டையோ, ஸ்டாரையோகூட குழந்தைகள் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். காரணம், ‘யூ ஆர் டீர்ச்சர்’ஸ் பிரைடு’ என்பது போன்ற இணக்கமான கமென்ட்டுகளை எழுதுவேன். அதனால் எந்தக் குழந்தையுமே என்னை விட்டு விலகினதில்லை. எந்தக் குழந்தையையும், ‘நீ அன்ஃபிட்’, ‘முட்டாள்’, ‘லாயக்கில்லாதவன்’ என்றெல்லாம் நான் ஒதுக்கியதில்லை.

ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு..
‘‘Every child is a master piece!
Every child is the Master’s piece!’ இது என்னுடைய ஃபேவரைட் கோட்!

நன்கு படித்து, நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவர்களையே பாராட்ட வேண்டும் என்பதில்லை. நன்கு படிக்காத மற்ற குழந்தைகளையும் பாராட்ட வேண்டும். அவர்களுக்குள் என்ன திறமை இருக்கும் என்பது நமக்கு இப்போது தெரியாது. நம் பாராட்டுகளே அதைக் கண்டுபிடிக்க உதவும்!’’ என்கிறார் இந்த நல்லாசிரியர்!



39 கருத்துகள்

  1. கண்களில் கண்ணீர் வழிய இதனை நான் படித்து முடித்தேன்.

    சிலருக்கு சில பேர்கள் மீது இதுபோன்ற ஆத்மார்த்தமான அன்பு ஏற்பட்டுவிடும். அதனை எழுத்தில் வடிக்கவே இயலாது. அன்பு ஒன்று மட்டுமே நாம் விலை மதிக்க முடியாதது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை அய்யா, இந்த சம்பவம் மிகுந்த மனவேதனையை தந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  2. படிக்கும்போது மனதை என்னவோ செய்கிறது. ஆசிரியர்களை இரண்டாவது பெற்றோர்கள் சொல்வது இதனால்தானோ? பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  3. உண்மை..அழுதிருக்கிறேன்..வாசித்துமுடித்த பின்னும் அந்த வைபவி தோளிலிருந்து இறங்க மறுக்கிறாள்...வாசலில் நோய்க்கான சிகிச்சை தடயங்களோடு வந்த சிறுமியின் கோலம் கண்களுக்குள் நிற்கிறது..

    நெகிழ்வு சார்...
    உங்கள் கரங்களுக்கு என் வந்தனங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெகிழ்வாகவும் உணர்வுப்பூர்வமாகவும் கருத்திட்ட தங்களுக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  4. வைபவியின் அன்பை நினைத்து கண்கள் கலங்கின!

    பதிலளிநீக்கு
  5. படிக்கும் முன்பே முடிக்க முடியாமல் கண்ணீர்த்திரையிட்டதைத் தடுக்க முடியவில்லை. அன்பின் வழியது உயிர்நிலை என்றது இதைத்தான். அவர் அன்பின் வடிவம் அதனால் தான் அந்தக் குழந்தையின் கண்ணில் மட்டுமில்லாமல் கருத்திலும் நிறைந்திருக்கிறார். இது மிகவும் அரிய செய்தி. என் மீது இனம்தெரியாத பாசம் காட்டிய குழந்தைகளைப் பற்றி எனது நூலில் “என்வாழ்வில் மறக்கமுடியாத நாள்கள்” என்று இரண்டு கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். கிராமத்தில் இது நடக்கும். நகரத்திலும் நடக்குமளவு அன்பின் பகிர்தல். குழந்தைகளின் தெய்வம் அன்புதானே? இதை அறியாமல் அவர்களைக் குறைசொல்வதும், அடிப்பதுமான பேய்கள் பலர் ஆசிரியராக இருக்கின்றனர் என்பதால் ராஜ்மேம் வாழும் தெய்வமாகிவிட்டார். அற்புதப் பகிர்வுக்கு நன்றி நண்பர் செந்தில், த.ம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அய்யா! குழந்தைகளின் தெய்வம் அன்பு தான். ஆசிரியர்கள் இதை உணர்ந்தால் நல்லது.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  6. மனசை பிசைய வைக்கும் நிஜநிகழ்வு!படிக்கும் போதே இத்தனை பாசமா,உயிர்ப்பா இருந்த அந்தக்குழந்தை இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருக்க கூடாதா என மனசு ஏங்குவதை தடுக்க முடியவே இல்லை. கனமான வரிகளுடன் மனதை கனக்க வைத்து ராஜ்மாவுடன் மட்டுமல்ல நம் நினைவிலும் வாழப்போகும் குழந்தையானாளோ?

    தி கிரேட் ராஜ்மா!நல்லாசிரியர் விருதினை விட வைபவி கொடுத்து சென்றிருக்கும் விருதே மிக உயர்ந்தது!

    பகிர்ந்தமைக்கு நன்றி செந்தில்குமார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் நல்ல மனசைதானே உடனே அழைத்துக்கொள்கிறது.
      வருகைக்கு நன்றி நிஷா!

      நீக்கு
  7. என்ன எழுதுவது என்று புரியவில்லை நண்பரே விழிகளில் நீர்...
    த.ம.6

    பதிலளிநீக்கு
  8. மேடத்தைப் பார்க்கும் வரை துடித்துக் கொண்டிருந்த உயிர் நின்று விட்டது என்பதை அறிய மிகுந்த வேதனை உண்டானது !உண்மையான பாசத்தைக் கண்டி மெய் சிலிர்த்தேன் !

    பதிலளிநீக்கு
  9. இந்தப் பதிவை படிச்சதும் கண்களில் கண்ணீர். வாழ்வில் ஒருவரிடமாவது அந்தடீச்சரைப்போல அன்பு காட்டணும்

    கே.கே.மகேஷ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை மகேஷ், அன்பு என்றால் இப்படிதான் இருக்க வேண்டும்.
      முதல் வருகைக்கு நன்றி மகேஷ்!

      நீக்கு
  10. இந்தப் பதிவை படிச்சதும் கண்களில் கண்ணீர். வாழ்வில் ஒருவரிடமாவது அந்தடீச்சரைப்போல அன்பு காட்டணும்

    கே.கே.மகேஷ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை மகேஷ், அன்பு என்றால் இப்படிதான் இருக்க வேண்டும்.
      முதல் வருகைக்கு நன்றி மகேஷ்!

      நீக்கு
  11. ஸாரி செந்தில்/சகோ..என்ன எழுத என்று தெரியவில்லை. எழுத இயலவும் இல்லை..இதைப் படித்ததும் கண்ணில் நீர் உருண்டொடுகிறது. வைபவியும் ஆசிரியரும் மனதில் ஆழமாகப் பதிந்து போனார்கள்.

    பதிலளிநீக்கு
  12. முகப்புத்தகத்தில் இச்செய்தியைப் படித்த போது எனக்கும் இதே உணர்வு. ஆசிரியருக்கும் மாணவிக்கும் இடையில் இப்படி ஒரு பந்தம்.....

    பதிலளிநீக்கு
  13. மனதை உருக வைத்துவிட்டது .ஆசிரியர்கள் அனைவரும் படிக்கவேண்டிய பதிவு.

    பதிலளிநீக்கு
  14. கண்கள் கலங்கிவிட்டன நண்பரே
    ஒரு ஆசிரியைக்கும் மாணவிக்கும் இந்த அளவிற்கு ஒரு பந்தம்
    ஒரு பாசம்இருக்க முடியுமா இருவருமே போற்றுதலுக்கு உரியவர்கள்
    இப்பதிவில் இருந்து மீண்டு வர பலநிமிடங்கள் ஆகும் போலிருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணர்வை உலுக்கிய சம்பவம்தான். மீள நிறைய நேரம் தேவைப்படத்தான் செய்கிறது.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  15. என்ன ஓரு பந்தம்...
    படிக்கும் போது கண்கள் கலங்கிவிட்டது சார்...
    என்னால் இதிலிருந்து இப்போது மீள முடியாது...
    அந்தக் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. மனதுக்குள் ராஜ்மாவும் வைபவியும் அழுத்தமாக பதிந்து விட்டார்கள் சார். மிகவும் நெகிழ்ச்சியான உண்மை நிகழ்வு. உங்களின் representation அருமை. எழுத்தில் உங்களின் பல வருட அனுபவம் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை நான் எழுதவில்லை, கட்டுரையின் தொடக்கத்திலேயே அதை கொடுத்துவிட்டேன். நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். சமூக வலைத்தளத்தில் வலம் வந்த என்னை மிகவும் பாதித்த சம்பவத்தை உங்கள் அனைவருடன் பகிர்ந்துள்ளேன். அவ்வளவுதான். இந்தப் பாராட்டு இதை எழுதிய பிரேமா நாராயணன் என்பவருக்கு சேரும்.

      நீக்கு
  17. உள்ளத்தை நெகிழ வைக்கும் பதிவு!! இராச்மா அவர்கள் சிறந்த ஆசிரியர் என்பதை விட, அவருக்கு இணையான இன்னோர் ஆசிரியரை அத்தனை ஆண்டுகளில் அந்தப் பெண் சந்திக்கவே இலை என்பதுதான் இதில் நாம் உணர வேண்டிய உண்மை. அப்படி ஒரு ஆசிரியரைச் சந்தித்திருந்தால் இந்த அளவுக்கு இராச்மாவுக்காக அந்த மாணவி ஏங்கியிருக்க மாட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அய்யா! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  18. Anbin Payilagam Ungalin Kootajoru.Vaazhtthuvadharku Vaarthaigal Thedugiren.Raajamma teacherin anbu mattum Vaibaviyai valarkavillai.Adhayium Thaandiya Eedupaadum koodatthaan
    enbadhu Thelivu.Dedication enru Aangilatthil Kooruvar.Maadha Pidha Guru Deivam enbahu Thiumathi Rajamma teachrukku mutrilum porutthamaanadhu.Anbum (evvidha edhirpaarpum Illa)Uravaahum enbathai Ungal moolam Unarhalaal Ungalukku en Nandrihal.Nallasiriyar Rajammavirku En siram thaazhndha Vaazhtthukkal.
    shramvir(Bairavan HAri).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை