Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

அந்தக்கால முதல்வர் அப்படி..!

ஏற்கனவே புத்தகத்தில் வாசித்தது என்றாலும் சமீபத்தில் இந்த தகவலை முகநூலில் மீண்டும் வாசித்தபோது ஏனோ இன்றைய முதல்வர்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறார்கள். 


அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் மூக்கையா தேவர் அறையிலேயே எப்போதும் இருப்பார். ’

ஒருமுறை "ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறேன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு" என்று கூறி 100 -ருபாயை எடுத்துக் கொடுத்தார் மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் தயாராகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. மண்ணாங்கட்டியைக் காணவில்லை.சற்று நேரம் கழித்து, தலையில் பெரிய சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. 

அவரைப் பார்த்ததும் "ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா?" என்று எகிறினார் மூக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். "என்னங்கய்யா நீங்க, இங்க உணவகத்தில் அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா..!" என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். "அரசாங்க உத்தியோகத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்" என்று முதல்வர் காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். மூக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுதார்.

என்னவென்று கேட்கிறார். "இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா!" என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று "முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்." என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி 'புக்'செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜர். "யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும்?" என்கிறார். "அய்யா! நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா!" என்றபடியே அருகில் இருந்த மூக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைத்துக் கொண்டு, "எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா..!" என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் "ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க..!" என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை.

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் மூன்று பேர் அங்கே வந்தார்கள். "இங்கிருந்து முதல்வருக்கு போன் செய்தது யார்?" என்றார்கள். "நான்தான் ஐயா..!" என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. "உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள்..!" என்று கூறினார்கள் அதிகாரிகள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வர் காமராஜர் என புரிகிறது. மூக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி "ஐயா, நீங்களும் வாங்க..!" என்று அழுகிறார். "பின்னாடியே வருகிறேன். நீ போப்பா..!" என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜரை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கன்னத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள்.

"நீங்கதான் மண்ணாங்கட்டியா..?" என்கிறார் காமராஜர். "ஆமாங்க ஐயா. நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா..!" என்றபடியே காலில் விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு சுத்தமாகப் பிடிக்காது. அதிகாரிகளை முறைத்துப் பார்க்க உடனே அவர்கள் எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை "வா...வாண்ணே. வந்து பக்கத்துல உட்காருங்க..!" என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜர், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு "நான் தப்பு பண்ணிட்டேன். தெரியாம செய்திட்டேன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே.. ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே. 
சமைக்கலயாமே.. உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க.. எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. 'இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான்" என்று தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து "இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்படாதீங்கன்னு அவரோட மனைவி, குழந்தைங்ககிட்ட சொல்லுங்க.." ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி "போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்" என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

மரியாதை மனிதனுக்கு இருந்த காலம் அது. மனிதநேயமிக்க மகான்கள் உலாவந்த இந்த தமிழகம் இப்பொழுது பதவி வெறி, பண  மோகம் கொண்டோரின் கையில் அகப்பட்டு சின்னா பின்னமாகி வருகின்றது என நினைக்க நினைக்க வேதனையே மிஞ்சுகிறது. 

* * * * * 

ஜாதி பார்க்க வேண்டாம்..! மதம் பார்க்க வேண்டாம்..! கட்சி பார்க்க வேண்டாம்..! சின்னம் பார்க்க வேண்டாம்..! வாக்கை விலைக்கு விற்க வேண்டாம்..! வேட்பாளரை மட்டும் பார்ப்போம்..! அவர் நல்லவரா என்று பார்ப்போம்..! நாட்டுக்கு நல்லது செய்வாரா..! என்று பார்ப்போம். நல்லவர்களுக்கு மட்டுமே வாக்களிப்போம்..! 

அனைத்து மக்களும் இப்படியொரு முடிவெடுத்தால் நல்லவர்களுக்கு மட்டுமே வாக்கு கிடைக்கும். அடுத்த தேர்தலில் நல்லவர்களை மட்டுமே வேட்பாளர்களாக அரசியல் கட்சிகள் நிறுத்தும். இப்படித்தான் அரசியலை கெட்டவர்களிடமிருந்து மீட்க முடியும். அப்படி ஒரு அதிரடி நடவடிக்கை மக்கள் மேற்கொண்டால்தான் ஒரு காமராஜரோ ஓமந்தூராரோ மீண்டும் நமக்கு முதல்வராக கிடைப்பார்கள். 

நல்லவர்களுக்கு மட்டுமே நமது வாக்கு..!


அன்புடன்..



35 கருத்துகள்

  1. புதிய விடயம் அறிந்து வியந்தேன் நண்பரே
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  2. பல முறை படித்த செய்தி என்றாலும் கர்மவீரர் போல் ஒரு நல்ல தலைவரை தமிழகம் பெறுவது எப்போது..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தேகம்தான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  3. ஏற்கனவே படித்துள்ளேன். மீண்டும் படித்ததில் மிக்க மகிழ்ச்சியே. படிக்காத மேதை காமராஜரைப்போல வேறு ஒருவரை நாம் இனி நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் ஒரு ஒப்பற்ற தலைவர்தான் அய்யா! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  4. செந்தில் சகோ இந்த நிகழ்வு ஏற்கனவே அறிந்திருந்தாலும் மீண்டும் வாசித்த போது சத்தியமாகச் சொல்கின்றேன் அழுதுவிட்டேன் சகோ! சத்தியமாக. இதோ இப்போது இதை அடிக்கும் போது கூட கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த தலைவர். ஒரே ஒரு முறை அவரை நேரில் சந்தித்தது உண்டு. அவர் ஆட்சியில் இல்லை. என் மாமா ஒரு சிறிய கிராமத்துப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்ததால் அவருடன் சந்திப்பு. கைகொடுத்து, தட்டிக் கொடுத்து, சொன்ன வார்த்தைகள் நல்லா படிக்கணும். படிப்புதான் நல்ல வாழ்க்கை தரும். தைரியமா நேர்மையா இருக்கணும், ஏழைங்களுக்கு உதவணும் என்று. வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை சகோ. பொன்னான காலம். மாமனிதர். அந்தக் காலத்தையும் இப்போதைய காலத்தையும் நினைத்துக் கூட பார்க்கத் தோன்றவில்லை....கேவலம் இப்போதைய நிலைமை. இப்படிப்பட்ட ஒரு மாமனிதரை தமிழகம் பெறுமா??!! கேள்விக் குறியே.

    நீங்கள் சொல்லியிருக்கும் இறுதி வார்த்தைகள் ஓட்டு போடுவது பற்றி ஆம் அதைத்தான் வழிமொழிகின்றோம் சொல்லி வருகின்றோம் சகோ....பகிர்வுக்கு மிக்க நன்றி

    https://www.facebook.com/permalink.php?story_fbid=1477980402511351&id=1435651170077608 இதையும் நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போன்று இன்னும் பல நிகழ்வுகள் காமராஜரைப் பற்றி இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக பகிர்கிறேன். அப்போதுதான் அந்த மனிதநேயமிக்க மகத்தான தலைவரைப் பற்றி இன்றைய தமிழகம் தெரிந்து கொள்ளும். காமராஜரைப் போலவே மற்றுமொரு பண்பான தலைவர் ஓமந்தூரார். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷங்கள்.
      உண்மையில் நீங்கள் மிகப் பெரிய பாக்கியவான் சகோ! அவரை நேரில் சந்தித்தது மட்டுமில்லாமல், அவர் தங்களுக்கு அறிவுரையும் வழங்கி தட்டிக் கொடுத்திருப்பது சாதாரண செயலில்லை. நெகிழ வைத்துவிட்டீர்கள். உணர்வுப்பூர்வமான கருத்துக்கும் அன்பான வருகைக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  5. இந்தத் தகவலைச் சற்றே வித்தியாசமாகப் படித்திருக்கிறேன்.

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பர் ஸ்ரீராம்!

      நீக்கு
  6. இவர் போல் தலைவர் எவருமில்லை....

    பதிலளிநீக்கு
  7. படிக்காதமேதை காமராசர் ஐயாவை தேர்தலில் தோற்கடித்து அவமானப்படுத்திய பாவம்தான் தமிழகம் வந்தேறிகளால் சூறையாடப்பட்டு வஞ்சிக்கப்பட்டு நாசமாய் போய்விட்டது.

    பதிலளிநீக்கு
  8. இன்றைய முதல்வர்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறார்கள் என்று சொன்னதால் தப்பித்தீர்கள் ,இல்லையென்றால் ,வீட்டைத் தேடி ஆட்டோ வந்திருக்கும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ ஒரு முதல்வர் என்றால் பெயரைச் சொல்லலாம். ஒன்றுக்கு மேல் இருப்பதால் பன்மையில்தான் சொல்லவேண்டியிருக்கிறது.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  9. உண்மைதான் நண்பரே.... மனிதனுக்கு மரியாதை தந்த காலம்தான் அந்தக் காலம்....இந்தக் காலத்தில்...அந்தக்காலம் இல்லை..நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று பணத்துக்கும் பதவிக்கும் மட்டுமே மதிப்பு. மனிதனுக்கு கொஞ்சம் கூட கிடையாது.

      நீக்கு
  10. அறிந்த செய்திதான். இருந்தாலும் அம்மாமனிதரைப் பற்றிய பதிவுகள் என்றென்றும் அவருடைய பெருமையினை பேசும் என்ற நிலையில் தங்களின் இப்பதிவுக்கு நன்றி. இவரைப் போன்ற மாமனிதரை இனி எப்போது காண்போம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி காண முடியாது என்பதுதான் உண்மை.
      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  11. நானும் படித்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  12. படித்த செய்தியாக இருந்தாலும் இத்தகைய செய்திகளை அவ்வப்போது பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் தான் யாருக்காக, எந்தக் கட்சிக்காக, எந்தத் தலைவருக்காக ஆதரவுச் செய்தி போடுகிறோம், ஏன் போடுகிறோம் என்று ஒவ்வொருவரும் மீண்டும் எண்ணிப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

    காமராஜர் போன்று தலைவர்கள் இருந்தபோதும், அதை மதிக்கும் குணமுள்ள மக்கள் பெரும்பான்மையாக இல்லை என்பது தெரிகிறது. இப்போது அது (அத்தகைய மக்கள்) இன்னும் பல மடங்கு பெருகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளைஞர்களிடம் மாற்றம் தெரிகிறதே கவனித்தீர்களா..!

      நீக்கு
  13. இதேபோன்று நாம் ஒவ்வொரு முறை உண்ணும்போதும், நாம் எப்படி சக விவசாயிகளுக்கு எதிரானவர்களாக மாறிவிட்டோம் என்று எண்ணிப்பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் விவசாயப் பத்திரிக்கை நடத்துவதால் அவர்களை நினைக்காத நாளே இல்லை.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  14. நெகிழவைத்த நிகழ்வு.. இது போன்றதொரு பொற்காலத்துக்காகத்தான் ஒவ்வொரு உண்மையான குடிமகனின் உள்ளமும் ஏங்கிப்போய்க் கிடக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ஏக்கம் நிறைவேறுமா என்பதுதான் சந்தேகம்?

      நீக்கு
  15. படித்த செய்தியாக இருந்தபோதிலும்
    ஒவ்வொரு முறை படிக்கும்பொழுதும்
    நெஞ்சில் ஒரு பெருமித உணர்வு தோன்றுகிறது நண்பரே
    இனி இவரைப் போன்றவர்களைப பார்ப்பது எக்காலமோ?
    தம +1

    பதிலளிநீக்கு
  16. இதே நிகழ்வு பற்றி முன்பு கட்டுரையாகப் படித்திருக்கிறேன். இதுவும் கட்டுரைதான்; ஆனால், வெகு அருமையாகச் சிறுகதை போல் நீங்கள் அழகாக எழுதியிருக்கிறீர்கள்!! மிக்க நன்றி!

    ஆனால், அரசியலில் நேர்மை பற்றிப் பேச்சு வந்தாலே எல்லாரும் மறைந்த தலைவர்களையும் கடந்த காலங்களையும் பற்றி மட்டுமே எழுதுகிறோம். இது, நடப்புக் காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மையை மேலும் கூட்டி வாக்களிப்போர் எண்ணிக்கையைக் குறிக்கிறது என்பது என் பணிவான கருத்து. செய்தியாளரான உங்களுக்குத் தெரியாததில்லை; நிகழ்காலத்திலும் நல்ல அரசியலாளர்கள், தலைவர்கள் நிறையவே இருக்கிறார்கள். நல்லகண்ணு, வைகோ, தமிழருவி மணியன், பழ.நெடுமாறன் என நிறையப் பேர். இவர்கள் தவிர, அவ்வளவாகப் புகழ் பெறாத, உள்ளூரார்க்கு மட்டுமே தெரிந்த நல்ல தலைவர்களும் உள்ளனர். அவர்களைப் பற்றி எழுதினால் தற்கால அரசியல் மீதும் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். அப்படிப்பட்டவர்கள் மீது கவனம் குவித்து அதற்கேற்ப வாக்களிக்கும் பழக்கம் வரும். செய்தியாளர் எனும் முறையில் அத்தகைய தகவல்கள் பலவற்றை அறிந்திருக்கக்கூடிய நீங்கள் அவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்!

    பி.கு: எனக்குத் தெரிந்த நல்ல தலைவர்கள் எனும் முறையில்தான் குறிப்பிட்ட சிலர் பெயரைப் பட்டியலிட்டிருக்கிறேனே தவிர, அவர்களின் கட்சி சார்பான பார்வையில் இல்லை. :-)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை