Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

ஊடகங்கள் எப்படி செய்தியை பரபரப்பாக்குகின்றன?


செய்திகளை 'உள்ளது உள்ளபடி' தருவதுதான் ஊடக தர்மம். ஆனால், கொஞ்ச நாட்களாக காட்சி ஊடகங்கள் அந்த தர்மத்தை மீறி வருவதாக தெரிகிறது. அதற்கு பல காரணங்கள். இன்றைக்கு விளம்பரங்கள்தான் ஊடகத்திற்கு வருமானத்தை அள்ளித் தருகின்றன. இந்த விளம்பரங்கள் வரவேண்டும் என்றால் அதற்கு டி.ஆர்.பி. ரேட்டிங் வேண்டும். டி.ஆர்.பி. ரேட்டிங் வர அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தாக வேண்டும்.


அதற்கு சில பல அம்சங்களை சேர்த்ததாக வேண்டியிருக்கிறது. உள்ளதை உள்ளபடி சொல்வது என்பது சினிமாவில் ஆர்ட் ஃபிலிம் பார்ப்பது போல் கொஞ்சம் 'போராக' போகும். அதற்கு பதிலாக அதே கதையில் பாட்டு, நடனம், சண்டை, பஞ்ச் டயலாக்  சேர்த்து மசாலா கலவையாக கொடுத்தால் படமும் விறுவிறுப்பாக போகும். அதிகமான மக்களும் பார்ப்பார்கள். 

செய்தியும் அப்படிதான். உண்மையான செய்தியை அப்படியே தந்தால் போரடிக்கும். அதற்குப்பதிலாக கொஞ்சம் மசாலாவை அதாவது பரபரப்பை சேர்த்துக் கொடுத்தால் செய்தியும் சுவாரஸ்யமாக  இருக்கும். பார்வையாளர்களையும் ஈர்க்கும்.

பெங்களூரு கலவரத்தை பொறுத்தவரை ஊடகங்கள் ஆரம்பத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கலவரம் நடக்கின்றன என்று சொல்லி வந்தன. இப்போது வரை அங்கு அதேநிலைதான். கலவரங்கள் ஒருசில இடங்களில் மட்டுமே நடந்திருக்கின்றன. ஆனால், ஊடகங்கள் இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமை விட்டுவிட்டன. அதன் காரணமாக பெங்களூரே எரிந்து கொண்டிருப்பதாக நம்ப வேண்டியுள்ளது.  இதுவும் ஊடக தர்மத்தை மீறும் செயல்தான். செய்தியில் பரபரப்பை கூட்டுவதற்காக இரண்டு வார்த்தைகளை நீங்கியதால் பெங்களூரே பற்றி எரிவதுபோல் ஒரு தோற்றத்தை  அது தந்துவிட்டது. அதற்கு தோதாக வீடியோ காட்சிகளும் காட்டப்படுவதால் பெங்களூர் படுமோசம் என்று எண்ண வைத்தது.


இந்தநிலையில்தான் பெங்களூரில் இருக்கும் நண்பர்கள் சிலரை தொடர்பு கொண்டேன். "பெரிய கலவரமா..?" என்று கேட்டேன். "நாங்க இருக்குற ஏரியாவுல எந்த கலவரமும் இல்லை. டிவி-யை பாத்துதான் கலவரம் நடக்கிறது என்பதையே தெரிந்து கொண்டேன்" என்றார் அவர்.

பெங்களூரின் வேறுப்பகுதியில் உள்ள மேலும் சிலரை தொடர்பு கொண்டேன். அவர்களும் இதையே சொன்னார்கள். ஒரு நண்பர் கொஞ்சம் காட்டமாக "நம்மாள்க திருந்தவே மாட்டாங்களா..! ஏன் கன்னடர்களை இப்படி போட்டு அடிக்கிறார்கள். தமிழ்நாடு முழுசும் கன்னடர்களை தேடி தேடி அடிகிறங்க. ஏன் இந்த கொலை வெறி..?"

"ராமேஸ்வரத்துல மட்டும்தான் அடித்திருக்கிறார்கள். வேறு எங்கும் எதுவும் நடக்கவில்லை. சென்னையில் சில ஹோட்டல்களை அடைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான் மற்றபடி கன்னடர்கள் மீது பெரிய தாக்குதல் ஒன்றும் இங்கு நடக்கவில்லை." என்றேன்.

"அப்படின்னு நீ சொல்ற. நீயும் நானும் சொல்றத யார் நம்ப போறாங்க. டிவிக்காரன் சொன்னதாதானே நம்புவாங்க. இங்க கன்னட சேனல்கள் எல்லாம் தொடர்ந்து தமிழ்நாட்டில் கன்னடர்கள் தாக்கப்படுவையே காட்டுகின்றன. எப்படித்தான் இத்தனை வீடியோக்கள் அவர்களுக்கு கிடைக்கிறதோ தெரியவில்லை. இத தொடர்ந்து பார்க்கும்போது தமிழ்நாடு முழுவதுமே கலவர பூமியாகவே தெரிகிறது. எனக்கே இப்படியென்றால் கன்னடர்களுக்கு எப்படி இருக்கும்? ஏன் ஊடகங்கள் இப்படி கலவரத்தை தூண்டுகின்றன." என்று முடித்தார்.


"இங்கு தமிழ் சேனல்களும் அதையேதான் செய்கின்றன. தமிழர்கள் தாக்கப்படுவதை மீண்டும் மீண்டும் காட்டி வெறியேற்றுகிறார்கள்." என்று முடித்தேன்.

அடுத்து ஒரு நண்பரை தொடர்பு கொண்டேன். அவர் தீவிர இனவாதம் கொண்டவர். "கர்நாடகாவுக்கு அழிவு காலம் வந்திருச்சு. தமிழர்கள ஓட ஓட விரட்டி அடிக்கிறானுங்கோ. 1991 கலவரத்தையெல்லாம் மிஞ்சிருச்சு. 200 பஸ்ஸு, 500 லாரி, 1000 கார்களை கொளுத்திட்டானுங்கோ." என்றார். நல்லவேளை எந்த ஊடகத்தின் காதுகளுக்கும் இது கேட்கவில்லை. கேட்டிருந்தால் இதுவே பெரிய செய்தியாகியிருக்கும்.

இது உணர்ச்சிவசப்பட்டு செய்தியை மிகைப்படுத்தி சொல்வது. முன்பு இப்படிப்பட்ட ஆதாரமற்ற தகவல்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காது. இப்போது அப்படியெல்லாம் கிடையாது. எதையும் செய்தியாக்க அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

இந்தநிலையில்தான் டிவியில் இன்னொரு காட்சி பரபரப்பாக வந்தது. 'உயிருக்கு பயந்து தமிழர்கள் வெளியேற்றம்' என்று. அந்த காட்சிகளை பார்த்ததுமே அதன் சூட்சுமம் புரிந்தது.

தமிழக-கர்நாடக எல்லையில் இருக்கும் ஊடக நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டேன். "தமிழர்கள் எல்லாம் உயிருக்குப் பயந்து ஓடி வருகிறார்களா?" என்றேன். "அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. மூணு நாள் சேர்ந்தாப்பல லீவு வந்தாலே நம்ம தமிழ் மக்கள் சொந்த ஊர்ப்பக்கம் கிளம்பிடுவாங்க. இப்போ கலவரம் வேற சேர்ந்துக்குச்சு. அதனால அது முடியற வரைக்கும் எல்லாம் ஊருக்கு போறாங்க. இது ரொம்ப சாதாரணமான நிகழ்வு." என்றார்.

"நான் அந்த வீடியோவை பார்க்கும்போதே தெரிந்தது. மக்கள் சிரித்துக்கொண்டே சென்றார்கள். அப்போதே புரிந்து கொண்டேன். அப்பறம் ஏன் உயிருக்கு பயந்து வெளியேறுகிறார்கள் என்று சொல்கிறீர்கள்." என்று கேட்டேன். "தலைவரே, உங்களுக்கு தெரியாததா..?" என்று கூறினார்.

மேற்கண்ட இந்த உரையாடல்கள் ஊடகங்களின் பரபரப்பு செய்திக்கான காரணத்தை மறைமுகமாக உங்களுக்கு சொல்லியிருக்கும். இன்னும் குழப்பத்தில் இருப்பவர்கள் தெளிவாக புரிந்துகொள்ள ஒரு சின்ன கற்பனை உரையாடலை இங்கு தருகிறேன்.

தமிழர்கள் உயிருக்கு பயந்து வெறியேறுகிறார்கள் என்ற செய்தியையே எடுத்துக் கொள்வோம். இந்த செய்தி எடுப்பதற்கு முன்பு அந்த செய்தியாளர் என்னென்ன பேசியிருப்பார் என்பதை கற்பனையாக இங்கு தருகிறேன்.

ஒரு நிருபரும் ஒளிப்பதிவாளரும் அடங்கிய குழுவுக்கு பொறுப்பாளராக ஒரு தலைமை நிருபரோ அல்லது செய்தி ஆசிரியரோ இருப்பார். அவர்களின் வழிகாட்டுதலின்படிதான் இவர்கள் இயங்க முடியும். உணர்வுப்பூர்வமான ஒரு செய்தி என்றால் இவர்கள் பாடு படு திண்டாட்டம்தான்.

"என்னப்பா, அங்க நிலவரம் எப்படி இருக்கு?" - இது தலைமை நிருபர்.

"அமைதியா இருக்கு சார்! தமிழக லாரிகளெல்லாம் போலீஸ் பாதுகாப்போடு தமிழ்நாட்டுக்குள்ள வந்துக்கிட்டு இருக்கு." - இது நிருபர்.

"அதுல எதுவும் கலவரத்துல சேதமான லாரி வருதா?"

"அப்படி எந்த லாரியும் வரல சார்."

"வந்தா அத மிஸ் பண்ணிராதீங்க. பஸ் ஓடுதா..?"

"பஸ்களை இன்னும் அனுமதிக்கல. இரண்டு மாநில எல்லைகளோடு நிறுத்திடறாங்க. மக்கள் ஒரு கி.மீ. தூரம் நடந்து வந்து தமிழக பஸ்ஸில் ஏறுகிறார்கள்."

"அவங்ககிட்ட பேசினீர்களா..?"

"பேசினோம்!"

"என்ன சொன்னாங்க..?"

"சொந்த ஊருக்குப் போய் ரொம்ப நாளாச்சு. கலவரம் ஓயிற வரைக்கும் அங்க போய் இருக்கப்போவதாக சொன்னாங்க."

சிறிது நேர மவுனத்திற்குப் பின்..

"உயிருக்கு பயந்து தமிழர்கள் குடும்பம் குடும்பமாக மூட்டை முடிச்சோடு வெளியேற்றம். இதுதான் 'லீடு'! இதுக்கு ஏத்த ஃபுட்டேஜ் எடுத்து அனுப்புங்க.!"

"சரிங்க சார்.!"

===

நிருபர் கூட்டத்தை தேடி போகிறார். பெண்களை தேடுகிறார். சோகமாக யாராவது வருகிறார்களா என்று பார்க்கிறார். அப்படி யாரும் வரவில்லை. பின் ஒரு பெண்ணை நிறுத்தி கேள்வி கேட்கிறார்.

"கன்னடர்களால் உங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா..?" 

"இல்லை. மற்ற இடங்களில் கலவரமாக இருப்பதால். முன் ஜாக்கிரதையாக எங்கள் சொந்த ஊருக்குப் போகிறோம். நான் சொன்னது டிவியில வருமா..?"

"இப்படி சொன்ன வராது. நான் சொல்ற மாதிரி முகத்தை சோகமா வச்சுக்கிட்டு சொன்ன வரும்."

"எனக்கு டிவிலே என் முகம் வந்தா போதும்."

செய்தியாளர் சொன்னதுபோலவே அந்தப் பெண் சோகமாக சொல்கிறார். லீடுக்கான ஃபுட்டேஜ் கிடைத்துவிட்டது.

இதில் தமிழர்கள் வெளீயேறுகிறார்கள் என்பது உண்மை. அதில் உயிருக்குப் பயந்து என்பதுதான் ஊதி பெரியதாகும் சங்கதி. இதுதான் பரபரப்பு.

சரி ஊடகங்கள் ஏன் இப்படி மாறின? இன்றைக்கு ஊடகங்களுக்கு போட்டி சமூக ஊடகங்கள்தான். அதில் பரபரப்பாகவும் அதிரடியாகவும் உண்மையாக பொய்யாக என்று எதையாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இணையாக ஊடகங்களும் பரபரப்பு தர வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றன. அதுபோக சக ஊடகங்களின் போட்டியை சமாளிக்கவும் பரபரப்பாக ஏதாவது செய்தாக வேண்டியிருக்கிறது. அதனால் ஊடக தர்மம் காற்றில் பறக்கவிடப்படுகிறது.


கன்னடர்கள் பலர் தங்கள் வாகனங்களில் தமிழர்களை ஏற்றிக்கொண்டு தமிழக எல்லையில் வந்து விட்டிருக்கிறார்கள். இதை எந்த ஊடகமும் செய்தியாக வெளியிடவில்லை. அதேபோல் சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு கர்நாடகா எண் கொண்ட காரில் சென்று கொண்டிருந்த ஒரு கன்னட குடும்பத்தை மறித்து நிறுத்தி, அவர்களின் காரை பத்திரமாக ஓரிடத்தில் நிறுத்திவிட்டு தமிழக பதிவு எண் கொண்ட காரில் அனுப்பி வைத்தார்கள். அதுதான் பாதுகாப்பு என்றும் திரும்பி வரும்போது உங்கள் காரை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்தார்கள். இந்த நல்ல செய்தி எதுவும் எந்த ஊடகத்திலும் வரவில்லை. அதற்கு பதிலாக வன்முறை செய்திகளை முந்தி தருகிறார்கள்.

அதற்காக ஊடகங்களை ஒரேயடியாக குறையும் சொல்லிவிட முடியாது. சென்னை வெள்ளத்தின் போது அரசைவிட பொதுமக்கள் உடனடியாக வந்து உதவியதற்கு ஊடகங்களின் ஒளிபரப்பே  காரணம். அப்துல் கலாம் இறந்தபோது கூடிய கூட்டத்துக்கு ஊடகங்களின் பங்கு  அதிகம். ஊடகங்கள் நல்லதும் செய்கின்றன. அதன் எண்ணிக்கை குறைவாக இருப்பதுவே வருத்தமாக இருக்கிறது.






18 கருத்துகள்

  1. tvல் வரும் செய்திகள் ,பட்டி மன்றம் ,சுட்டிக் குழந்தைகள் நிகழ்ச்சி எல்லாமே ஒத்திகைப் பார்த்த பின் வரும் டிராமா என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் :)

    பதிலளிநீக்கு
  2. செய்தியை சுவையாக தருவது வேறு திரித்து சொல்வது வேறு அப்படி திரித்து சொல்லும் சேனல்களை சட்டப்படி முடக்க வேண்டும் ஆனால் சட்டம் பணத்தை வாங்கி கொண்டு தீர்ப்பை திருத்தி சொல்லும் நாடு இது

    இதற்கு மாற்றுதான் சோஷியல் மீடியா மக்களால் நல்ல தகவல்களை பறிமாறிக் கொள்ள முடியும் ஆனால் இங்குள்ள மக்களும் லைக்ஸ்களுக்காக இவர்களும் ஊடகங்கள் போலவே தகவல்களை பெரிசு படுத்தி சொல்லுகிறார்கள்

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. வாசிப்பு விகிதத்தை மேம்படுத்திக் காட்டுவதற்காக செய்யப்படும் செயல்களை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. பொதுமக்கள் நடுநிலையோடு கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

    பதிலளிநீக்கு
  4. தாங்களே ஒரு பத்திரிகை ஆசிரியராகவும், வேறு சில பத்திரிகைகளுக்கு நிரூபராகவும், செய்திகள் சேகரிப்பவராகவும், எழுத்தாளராகவும், பதிவராகவும் பல முகங்களுடன் இருப்பினும், நடுநிலை தவறாமல் அனைத்தைத் தரப்பு நியாயங்களையும் வெகு அழகாக அலசி ஆராய்ந்து எழுதியிப்பது, தங்களின் தனித்தன்மையைக் காட்டுவதாக உள்ளது.

    தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே என் பின்னூட்டத்தில் ஒரு சிறிய எழுத்துப்பிழை உள்ளது. வருந்துகிறேன். :(

      எழுதியிப்பது = தவறு

      எழுதியிருப்பது = சரி

      நீக்கு
  5. செந்தில் சகோ கை கொடுங்கள்!! பின்னிட்டீங்க! பாரட்டுகள் நான் அடிக்கடிச் சொல்லி வருவது. அதை அப்படியே கொடுத்துவிட்டீர்கள். முன்பே நான் ஊடக தர்மம் என்று ஒரு கட்டுரை எழுதி அதை வெளியிட்டால் பிரச்சனை வருமோ என்று வெளியிடாமல் வைத்துவிட்டேன். ஆனால் அவ்வப்போது சிறிது சிறிதாக வாய்ப்புக் கிடைக்கும் போது சொல்வதுண்டு. பின்னூட்டங்களில்

    மலையாளத்தில் ஒரு படமே உண்டு. மிக அருமையான படம். மம்மூட்டி நடித்த படம் அதாவது பரபரப்புச் செய்திகளை ஊடகங்கள் எப்படித் தருகின்றன அப்படித் தருவதற்கு தாங்கள் முதலிடத்தில் இருப்பதற்கு எதையும் செய்வார்கள் என்று....

    கீதா

    பதிலளிநீக்கு
  6. உண்மை. ஒருதொகுப்பாளர் செய்தியாளரிடம் " சொல்லுங்கள் திரு ..... அவர்களே திறந்துவிட்ட தண்ணீர் போதுமானதாக இல்லை என்பது போன்ற கருத்து ஏதாவது விவசாயிகள் தெரிவிக்கிறார்களா? என்று ஆரம்பித்து சில கேள்விகள் எல்லாம் எதிர்மறையானவை அடுக்கிக்கொண்டே போனர்.... தனியாக நின்றிருந்த அப்பாவி விவசாயி ??? ஒருவர் இன்னும் நிறைய நீர் வேண்டும் என்று சொல்ல வந்த வேலை முடிந்து நிலையம் திரும்பினார் செய்தியாளர்.
    செய்தியைப்பார்த்தபோது இதுதான் எனக்கும் தோன்றியது.

    இன்னும் ஒரு செய்தி கேட்டால் சிரிப்பீர்கள் சில ஆயிரங்கள் மதிப்பான மரக்கட்டைகள் சந்தன கட்டை என ஏமாற்றப்பட்டு எடுத்துச் செல்கையில் பிடிபட்டது இந்த விஷயம் அடுத்தநாள் கோடிக்கனக்கான ரூபாய் மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல் என வெளியான போது சிரிக்கத்தான் முடிந்தது.. செய்திக்கு 200/300 பணம் கூட கொடுக்கப்படுகின்றதாக கேள்விப்படுகிறோம்.. அப்படி காசுக்காக பரபரப்பாக்கபட்டது ... உண்மை என்பது பல விஷங்களில் வெளிவருவதே இல்லை...

    பதிலளிநீக்கு
  7. கீழே உள்ள உரலியில் சொன்ன செய்திகள் பொய்யா என்பதை அறிய ஆவல்

    http://kadavulinkadavul.blogspot.com/2016/09/blog-post_27.html

    பதிலளிநீக்கு
  8. இதுதான் ஊடக தர்மம்... இவர்கள் கல்லாக் கட்ட ரெண்டு இனத்தை அழிக்கப் பார்க்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல பகிர்வு. பல விஷயங்கள் இப்படித் திரித்து வெளியிட்டால் தான் அவர்கள் பிழைப்பு நடக்கும் என்ற கேவலம்.

    பதிலளிநீக்கு
  10. சரியான பதிவு. 'சொல்... உண்மை' போன்றவற்றையும் பார்த்திருப்பீர்கள். தொலைக்காட்சி எந்த ஒரு செய்திக்கும் மசாலா சேர்த்துத்தரும். ஆனால், கலவரம் போன்றவற்றில் சரியான செய்தி தரவில்லை என்றால், இரு மானிலத்துக்கும் அது ஆறா வடுவை உண்டாக்கும். இதெல்லாம் யாருக்குத் தெரிகிறது. அவர்களுக்குத் தேவை அன்றைய மசாலா. எனக்கெல்லாம், மியூட்டில் செய்தி பார்க்கவும், எப்போதும் சிரிப்பொலி, ஆதித்யா (சினிமா காமெடி மட்டும்) பார்க்கப் பிடிக்கும். முன்னால டைம்ஸ் நவ் பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்சம் அசந்தா, அவர் (அர்னாப்) டீவிலேருந்து நேரா என் முகத்துலயே கர்ஜிப்பார் என்று தோன்றியதால், அதைப் பார்ப்பதையும் விட்டுவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  11. உணவில் சுவை கூட்ட மசாலை இணைப்பது போல் ஊடகங்களும் தங்கள் வேலையைச் செம்மையாகச் செய்கின்றன. இன்று அனைத்தும் ஊடகங்களுக்குள் அடங்கிவிடுவதால் அவர்கள் சொல்வதே செய்தியாக உள்ளது. ஊடகங்கள் மட்டுமே இதற்குக் காரணம் என்று முழுமையாகக் கூற முடியாது, சில நேரங்களில் தவறான செய்திகளைப் பரப்ப அவர்களும் காரணமாக இருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான் உண்மை.

    சரியான நேரத்தில் வந்த சரியான பதிவு!!!

    பதிலளிநீக்கு
  12. நண்பரே! இந்தப் பதிவைப் படிக்க இப்பொழுதுதான் வாய்ப்புக் கிடைத்தது.

    கடந்த பதிவின் கருத்துப் பகுதியில் "உண்மையிலேயே அங்கே நிலவரம் அவ்வளவு மோசமாக இல்லை எனில் தமிழர்கள் ஏன் அங்கிருந்து கிளம்பி வருகிறார்கள்" என்று நான் கேட்டிருந்ததற்குப் பதிலளிக்கும் வகையில் அதையே மையக் கேள்வியாக வைத்து இந்தப் பதிவை நீங்கள் எழுதியிருப்பதைக் கண்டேன். மிக்க நன்றி! உண்மையை உணர்ந்தேன்.

    ஊடகங்கள் தங்கள் பிழைப்புக்காக எப்படியெல்லாம் செய்திகளை ஊதிப் பெரிதாக்குகிறார்கள் என்பதை நானும் அறிவேன். ஆனால் இப்படி, விடுமுறையைக் கொண்டாட ஊருக்கு வருபவர்களை உயிருக்கு அஞ்சி ஓடுவதாகப் பதிவு செய்யும் அளவுக்குப் போவார்கள் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

    ஆனால், "நம் மக்கள் திருந்தவே மாட்டார்களா? ஏன் இப்படிக் கன்னடர்களைத் தேடித் தேடித் தாக்குகிறார்கள்?" என்று கேட்ட உங்கள் நண்பரை அடுத்த முறை தொடர்பு கொள்ளும்பொழுது என் சார்பில் ஒரே ஒரு கேள்வியைக் கேளுங்கள்! இதற்கு முன் எப்பொழுது தமிழர்கள் இப்படிக் கன்னடர்களையோ பிற இனத்தவரையோ தாக்கியிருக்கிறோம், திருந்தவே மாட்டோமா என்று கேட்பதற்கு?

    மேலும், இன்னும் ஒரு விதயத்தை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் கூறியது போலக் கர்நாடகம் முழுவதும் கலவரம் நடக்காமல் இருக்கலாம். ஆனால், சராசரியாகக் கன்னடர்கள் எல்லோருமே காவிரி விதயத்தில் தமிழர்களுக்கு எதிராகத்தான் கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நீங்கள் கீச்சகத்தில் (டுவிட்டர்) இருப்பீர்கள் என நினைக்கிறேன். அங்கு #Cauvery, #CauveryIssue போன்ற காவிரி தொடர்பான சிட்டைகளில் சென்று பார்த்தீர்களானால் எந்த அளவுக்குக் கன்னடர்கள் இதில் வெறியாக இருக்கிறார்கள் என்பதை உணரலாம்.

    பொதுவாக நான் இப்படிப்பட்டவர்களிடம் சண்டைக்கெல்லாம் போவது கிடையாது. காரணம், இது இரு வேறு நிலப்பகுதிகளுக்கு இடையே பற்றியெரியும் பிரச்சினை. இதில் விளையாட்டாகவோ போகிற போக்கில் உணர்ச்சிவசப்பட்டோ நாம் தெரிவிக்கும் எந்த ஒரு கருத்தும் மிகப் பெரிய தீங்குகளை விளைவிக்கலாம். ஆனால், காவிரி பற்றி நான் என் கருத்தை வெறுமே பதிவு செய்தததற்கு அன்று முதல் இன்று வரை என்னுடன் கருத்து மோதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யாரும் குறிப்பிட்ட அந்தக் கன்னட வெறி அமைப்பைச் சேர்ந்தவர்களாகத் தெரியவில்லை. நன்கு படித்த, நாகரிகமான, சராசரிக் கன்னடர்கள்தாம். நாம் எவ்வளவுதான் பொறுமையாகவும் உரிய சான்றுகளோடும் மரியாதையாகவும் உண்மைகளை எடுத்துரைத்தாலும் அவர்கள் அவற்றைப் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அவர்கள் சொல்வது மட்டும்தான் சரி என்றுதான் சாதிக்கிறார்கள்.

    பொதுமக்கள் மட்டுமில்லை, கன்னட நடிகர்கள் எல்லாரும் கூட (சிவராச் குமார் ஒருவர் தவிர) காவிரி விவகாரத்தில் எவ்வளவு வெறியாகவும் ஈவிரக்கமின்றியும் பேசினார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்!

    கன்னடர்கள் மட்டும்தாம் என்றில்லை, கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் கூடத் தமிழ்நாட்டுக்குக் காவிரியிலிருந்து தண்ணீர் விடக்கூடாது என்று போராட்டம் நடத்தியதையும் நாளேடுகளில் பார்த்தோம்.

    நீங்கள் கூறுவது போல் எத்தனையோ கன்னடர்கள் தமிழர்களுக்கு உதவுபவர்களாக இருக்கலாம். அதை நம்புவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. காரணம், அப்பேர்ப்பட்ட இலங்கையிலேயே எத்தனையோ சிங்களர்கள் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதில்லையா? நல்லவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கவே செய்கிறார்கள். அதுவும் பெரும்பான்மையாகவே! ஆனால் அதே நேரம், கலவரம் பற்றிய ஊடகங்களின் செய்திகள் வேண்டுமானால் மிகையாக இருக்கலாமே தவிர, கன்னடர்கள் பெரும்பாலானோர் காவிரிப் பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராகத்தான் சிந்திக்கிறார்கள் என்பதும் உண்மையே!

    பதிலளிநீக்கு
  13. பரபரப்புக்காக பல பொய்மூட்டைகள் இலவச இணைப்பகளாக..!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை