Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

கண்கள் பற்றிய மூடநம்பிக்கை



ண்களைப் பற்றிய ஏராளமான மூடநம்பிக்கைகள் நம் மக்கள் மத்தியில் இருக்கின்றன. அதன் மீது கண் மூடித்தனமாக நம்பிக்கை வேறு வைத்திருக்கிறார்கள். தூக்கமின்மை, உடல்சூடு போன்றவற்றால் கண்கள் சிவந்து காணப்பட்டால் கூட உடனே குழந்தைக்கு தாய்ப்பால் தரும் பெண்ணைத் தேடி போய் தாய்ப்பாலை வாங்கி சிவந்த கண்களில் ஊற்றுவார்கள். அப்படி செய்தால் கண்ணின் சிவப்பு மறைந்துவிடும் என்பது ஒரு நம்பிக்கை. உண்மையில் கண்ணின் சிவப்புக்கும் தாய்ப்பாலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. 


அதேபோல சந்தனத்தை அரைத்து இட்டுக்கொள்வது, நாமக்கட்டியை உரசிப் பூசுவது, மரப்பாச்சி பொம்மையை தேய்த்து அதன் மசியை கண்ணில் தேய்ப்பது என்று எல்லாமே தவறானவை என்கிறது மருத்துவத்துறை.

குழந்தைகளுக்கும் வயது வந்த பெண்களுக்கும் கண்களில் மை இட்டுக்கொண்டால் கண்கள் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நினைக்கிறார்கள். இந்த நம்பிக்கையில் கண்ணுக்கு அதிகமாக மையிடுகிறார்கள். இது தவறானது. மையில் இருக்கும் கார்பன் கண்ணுக்கு மிக கெடுதல் தரும் தன்மை கொண்டது. 


தொடர்ந்து ஒரு பெண் கண்ணுக்கு மை போட்டுவந்தால் அது விஷம். இதனை 'லெட் பாய்சன்' என்கிறார்கள். அதாவது 'கார்பன் விஷம்'.  இது அதிகரிக்க அதிகரிக்க வளர்ச்சியின்மை ஏற்படும். வலிப்பு வரும். மனநிலை பாதிப்பு ஏற்படும் என்று பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகிறது மருத்துவத்துறை.

அதேபோல பெண்ணுக்கு வலது கண் தானாக துடித்தாலும், ஆணுக்கு இடது கண் தானாக துடித்தாலும் அதனை அதிர்ஷ்டம் என்கிறார்கள் மக்கள். உண்மையில் கண்கள் தானாக துடிப்பதற்கு வைட்டமினும் கால்சியமும் பற்றாக்குறையில் இருக்கிறது என்பதே காரணம். மற்றபடி இது அதிர்ஷ்டமும் இல்லை. துரதிஷ்டமும் இல்லை. 

மேலும் கண் பார்வையற்றவர்களுக்கு அவர்களின் கண்ணை முழுமையாக எடுத்துவிட்டு வேறு ஒருவரின் கண்ணை அப்படியே பொறுத்திவிடுவார்கள் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கிறது. இதுதான் கண் மாற்று அறுவை சிகிச்சை என்றும் பலர் தவறாக நினைக்கிறார்கள். 


உன்மையில் கண்ணை முழுமையாக மாற்றுவதில்லை. கண்ணில் இருக்கும் 'கார்னியா'வை மட்டுமே மாற்றுகிறார்கள். நல்ல கண்ணில் இருக்கும் கார்னியாவை எடுத்து பாதிக்கப்பட்ட கண்ணுக்கு மாற்றுகிறார்கள். இது கிட்டத்தட்ட கீறல் விழுந்த கைக்கடிகாரத்தின் கண்ணாடியை எடுத்துவிட்டு புதிய கண்ணாடியை மாற்றுவது போன்றாகும்.   

இப்படியாக பல நம்பிக்கைகள் கண்களைப் பற்றி இருக்கின்றன.




19 கருத்துகள்

  1. நிறைய விளக்கங்கள் தந்து என் கண்ணை திறந்து விட்டமைக்கு நன்றி நண்பரே...
    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. கண்கள் பற்றி மிகவும் பயனுள்ள கண்ணான தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  3. சில நேரங்களில் கண்கள் பேசும் என்கிறார்களே ,அது உண்மையா ஜி :)

    பதிலளிநீக்கு
  4. அருமையான விழிப்புணர்வு பதிவு நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  6. தகவலுக்கு நன்றி! Lead என்பது காரீயம் அல்லவா? Carbon என்பது கரிமம் ஆயிற்றே. எனவே Lead Poison என்பதற்கு காரீய நஞ்சு என இருக்கவேண்டும் என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அப்படிதான் நினைத்தேன். ஆனால் மருத்துவத்தில் கார்பன் என்றே சொல்கிறார்கள். அதனால் அதையே இங்கும் பயன்படுத்தியிருக்கிறேன்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  7. கண்ணுக்கு மையழகு என்று கூறியது அந்தக்கால தேங்காய் மூடியில் இயற்கையாக தயாரித்த மையை குழைத்து தடவுவது ... அதனால் எந்த தீமையும் இல்லை ... கண்கள் பற்றி விளக்கம் தந்து எங்களின் கண்ளை திறந்த தங்களுக்கு ...நன்றி...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் தேங்காய் முடியின் உள்ளே நெய் தடவி விளக்கின் புகையை பிடித்து மை உருவாக்கினார்கள். இப்போது எல்லாம் கெமிக்கல்கள்தான். அதனால்தான் கேடு.
      வருகைக்கு நன்றி !

      நீக்கு
  8. வணக்கம் நண்பரே!

    தாமதமாக வருவதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். பொறுத்தாற்றுங்கள்.

    ஆங்கிலேயர் வருகைக்கு முன்பும் நம் மக்களுக்கு கண் தொடரபான வியாதிகள் வந்திருக்கின்றன.

    நயன நூல், நயன விதி என கண்ணுக்கு மட்டுமே மருத்துவம் கூறிய நூல்கள் நம்மிடையே இருந்தன. இருக்கின்றன.

    பருத்தி இழையைக் கரிசலாங்கண்ணிச் சாற்றில் முக்கியெடுத்து, உலர்வித்து அதன் மேல் சற்று விளக்கெண்ணை விட்டு ஓர் அகலில் எரிவிப்பர். அதற்கு மேல் ஒரு சிறிய தடுப்பொன்று கூரை போல வைக்கப்படும்.

    இந்தக் கரிசலாங்கண்ணிச் சாறு படிந்த திரி எரியும் போது, வரும் புகை அதில் படியும். அதை விளக்கெண்ணையில் வழித்தெடுத்து வைத்துப் பயன்படுத்தியதே பண்டைய கண்மை.

    கரிசலாங்கண்ணிக்கும் விளக்கெண்ணைக்கும் கண்தொடர்பான மருத்துவக்குணங்கள் உண்டு.

    இதனால் படியும் கார்பன் தீமை செய்திருந்தால் நம் மரபில் இருந்து என்றோ அது காணாமற்போயிருக்கும்.

    இன்று இதெற்கெல்லாம் நேரமில்லை.

    நாம் செயற்கைக்கு மாறிவிட்டோம்.

    நிற்க,

    கண்ணுக்குக் கண்ணை எடுத்து வைத்தல் என்பது கண்ணப்பநாயனார் புராணத்தில் இருக்கிறது.

    நம் தமிழர் அன்றே கண் மாற்று அறுவை சிகிச்சை குறித்து அறிந்திருந்தனர் என்று இந்நிகழ்வைச் சான்றாக மேற்கோள் காட்டுவது அபத்தமே.

    வழக்கம் போல புதிய செய்திகளைத் தெரிந்து கொள்கிறேன்.

    பழைய பதிவுகளையும் பார்க்கிறேன்.

    த ம 7

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமாக வந்தால் என்ன? ஏராளாமான தகவல்களுடன்; அதுவும் இலக்கியத்தின் உவமையோடு வந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியே. நான் எனக்கு தெரிந்த கண்மை தயாரிக்கும் முறையை சொன்னேன். நீங்கள் மிக விரிவாக சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  9. அருமையான பதிவு - சிறந்த
    உளநல வழிகாட்டல்

    பதிலளிநீக்கு
  10. கரிசலாங்கண்ணி சாற்றில் தான் என் அம்மா எங்களுக்குக் கண் மை தயாரிப்பார். பருத்தித் துணியை கரிசலாங்கண்ணி சாற்றில் முக்கியெடுத்துக் காய வைப்பார். பின் அதைக் கிழித்துத் திரியாக்கி நல்ல விளக்கில் போட்டு விளக்கெண்ணெய் ஊற்றி எரிப்பார். விளக்கின் மேல் புதிதாக வாங்கிய மண்சட்டியைக் கவிழ்த்து வைப்பார். முழுவதும் கவிழ்த்தால் அணைந்து விடும் என்பதால் இடையில் ஒரு தடுப்புக் கொடுத்து விடுவார். சட்டியில் படியும் புகைத்தூளைத் திரட்டி எடுத்து விளகெண்ணையில் குழைத்து மை தயாரிப்பார். இப்போது எல்லாமே செயற்கையாகிவிட்டது. தகவல்களுக்கு நன்றி செந்தில். மிகவும் தாமதமாக வந்தமைக்கு வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல தகவல்கள்....

    கண் மை மட்டுமா, இன்று எல்லாவற்றிலும் கலப்படம் - செயற்கை ரசாயனம்....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை