Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

என்று தணியும் இந்த சில்லரை தாகம்..!


ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், டிசம்பர் 10 ஆம் தேதி வரையில் ரூ.12.44 லட்சம் கோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


அதேநேரம், ரூ.4.61 லட்சம் கோடி பணம் பொதுமக்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்தான் பல்வேறு ஐயங்கள் எழுகின்றன. நாடெங்கும் வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் பணத்திற்காக வரிசைகள்  குறைவதற்கான வாய்ப்புக்களே இல்லாத சூழலே தென்படுகிறது. ஒட்டுமொத்தமாக ரூ.15.05 லட்சம் கோடி மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன என்கிற நிலையில், இவற்றில் வங்கி கருவூவலங்களில் எப்போதுமே இருப்பாக இருக்கும் கிட்டத்தட்ட ரூ.75 ஆயிரம் கோடி, தபால் நிலையங்களில் பெறப்பட்டதாகக் கூறப்படும் ரூ.25 ஆயிரம் கோடி ஆகியவற்றை கழித்துவிட்டுப் பார்த்தால், மொத்தமே ரூ.14 லட்சம் கோடி மட்டுமே புழக்கத்தில் இருக்கும் என்கிற நிலையில், இதில் ரூ.12.44 லட்சம் கோடி வங்கிகளுக்கு வந்துவிட்டது என்றால், மீதமுள்ள தொகை கிட்டத்தட்ட 1.6 லட்சம் கோடியாகவே இருக்கக் கூடும்.

ஆனால், ரூபாய் மதிப்பிழப்பு அடிப்படையில் பொருளாதாரத்திற்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றி  பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் கருத்து தெரிவிக்கும்போது நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 1 சதவிகிதம் வரை வளர்ச்சி குறைவு ஏற்படும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.


ஆசிய வளர்ச்சி வங்கியும்கூட, 7.6 சதவிகித வளர்ச்சி என்பதை 7 சதவிகிதமாக குறைத்துள்ளது. இது டிசம்பர் 14ஆம் தேதி வரையிலான சூழலைப் பொருத்ததே. இன்னும் நான்காம் காலாண்டு மிச்சமிருக்கின்ற நிலையில், தொடரப்போகும் பாதிப்புகள் வளர்ச்சி குறைவை  1 சதவிகிதத்திற்கும் அதிகமாகவே கொண்டுபோய் விடக்கூடும்.

நாட்டில் உள்நாட்டின் மொத்த உற்பத்தி ரூ.145 லட்சம் கோடி என்கிற நிலையில், அதில் 1 சதவிகித இழப்பு என்பது கிட்டத்தட்ட ரூ.1.45 லட்சம் கோடி ஆக இருக்கும். அதாவது இதுவரையில் வங்கிகளுக்குள் வராத பழைய நோட்டுகளின் மதிப்பும், இந்த நடவடிக்கையின் காரணமாக ஏற்படப் போகும் பொருளாதார இழப்பின் மதிப்பும் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கும் என்கிற ஐயமும் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கறுப்பு பணத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையென இது சொல்லப்பட்டாலும், தற்போது நாடெங்கும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் ரெய்டுகளின் பின்னணியில் புதிய ரூ.2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளே அதிகம் பிடிபடுகின்றன என்பதை என்னவென்று சொல்ல. மேலும், இதுகாறும் ரூ.4.61 லட்சம் கோடி பொதுமக்களுக்கு திருப்பித் தரப்பட்டுள்ளதில் 21.8 பில்லியன் நோட்டுகள் ரூ.10 ரூ.20 ரூ.50 மற்றும் ரூ.100 மதிப்பு கொண்டவை.


தோராயமாக இதன் மதிப்பு 2.25 லட்சம் கோடி என வைத்துக்கொள்ளலாம். அதே நேரம், புதிய ரூ.500 மற்று ரூ.2000 மதிப்பிலான நோட்டுகள் 1.7 பில்லியன் என்கிற எண்ணிக்கையிலேயே வெளியிடப்பட்டுள்ளதாகவும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதாவது, இதுவும்கூட சற்றேறக்குறைய ரூ.2.25 லட்சம் கோடியாக இருக்கக்கூடும். பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 12.44 லட்சம் கோடி வாங்கப்பட்டுள்ள நிலையில், ரூ.2.25 லட்சம் கோடி மட்டுமே புதிய நோட்டுகளாக புழக்கத்திற்கு வந்துள்ளன என்பதே உண்மை.


இதனால்தான் நாடெங்கும் கடுமையான பணவாட்டம் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கருத்துப்படியே இருக்கின்ற அச்சுத்திறனை கணக்கில் கொண்டால், ரூ.9 லட்சம் கோடி அளவிற்கு புதிய நோட்டுகளை வெளியிடவே 120 நாட்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே 40 நாட்கள் கழிந்துள்ள நிலையில், சில்லரை தாகம் தீர்ப்பதற்கு எதிர்பார்த்ததைவிட அதிக நாட்களாகும் என்பது புரிந்துவிட்டது.

அதனால்தான் பிரதமர் மோடியும்கூட, டிசம்பர் 30-க்குப் பிறகும்கூட மிக மிக மெதுவாகத்தான் சூழலில் மாற்றம் ஏற்படும் என தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. நீண்ட வரிசையில் நிற்கும் அனுபவம் மேலும் தொடரும் என்பதே யதார்த்த நிலவரமாகும். மக்கள் அதற்கு தயாராகிக் கொள்ள வேண்டியதுதான்.


கட்டுரையாளர் : எம்.ஜே.வாசுதேவன் 



10 கருத்துகள்

  1. ரொம்ப பயமுறுத்துகிறதே கட்டுரை. பணப்புழக்கம் இல்லைனா, வேலை, தொழில்கள் எல்லாமே பாதிக்கப்படுமே! இப்போதைக்குப் பிரச்சனை தீராதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கனவே பாதிப்பு தெரியத் தொடங்கிவிட்டது நெல்லைத் தமிழன். மோடியின் இந்த முடிவை ஆதரிக்க வேண்டிய கம்யூனிஸ்ட் மாநிலமாகிய கேரளா இதை எதிர்த்து தர்ணா செய்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அங்கு கடந்த 5 வருடங்களாக எந்தவித தொழில் வளர்ச்சியும் இல்லாத போதும் கேரளா வளர்ச்சியடைந்துள்ளது தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது என்றால் அங்கு மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து/கல்ஃப் வந்தப் பணப் புழக்கம்தான். வெளிநாட்டில் குடியிருக்கும் கேரளத்தவர் முதலீடு செய்யும் பணத்தினாலும், கறுப்புப் பணப் புழக்கம் மிகவும் அதிகமாக இருப்பதாலும்தான் , குறிப்பாக ஹவாலா மையமான துபாயிலிருந்து வரும் கறுப்புபணப் புழக்கம் கேரளத்தில் அதிகம். அது இப்போது முடங்கிப் போனதால் அங்கு எதிர்ப்பு....அங்கு உழவுத்தொழில் போன்ற தொழில்களைவிட (கேரளத்தில் எப்போதுமே தொழில் வளர்ச்சி என்பது குறைவுதான்..எப்போதும் தர்ணா, கடையடைப்பு, என்பதால்...அதனால் இந்தப் பணத்திநால் ஏற்பட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே இங்கு இதன் பாதிப்பு மிக மிக அதிகம். இதிலிருந்து மீண்டு வருவது கேரளத்திற்குக் கஷ்டம்தான்....எனவேதான் துளசி தனது பதிவில் இது நல்லதற்கே என்று எழுதியது. பிற மாநிலங்களிலும் கஷ்டமான நிலைதான் என்றாலும் நிலைமை வேறு.

      கீதா

      நீக்கு
  2. அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் நிலைமை சீராகலாம் என்று(ம்) சொல்கிறார்கள்...!

    பதிலளிநீக்கு
  3. இம்புட்டுத் தானா மோடி மந்திரம் ? திட்டமிடல் எதுவுமின்றி பாமர ஜனங்களை அலைக்கழிப்பது எந்த விதத்தில் நியாயம் :)

    பதிலளிநீக்கு
  4. யதார்த்த நிலையை மிகச்
    சரியாகச் சொன்னீர்கள்
    ஐம்பது நாட்களுக்குப் பின்
    இன்னொரு ஐம்பது என்பார்களோ என்னவோ

    பதிலளிநீக்கு
  5. சகோ..மோடியின் இந்தக் கொள்கை சரியென்று கொள்ளப்பட்டாலும் இன்னும் ஆழ்ந்து சிந்தித்து எடுத்திருக்க வேண்டிய முடிவு. எந்த ஒரு பொருளாதார ரீதியிலான முடிவும் மிகவும் ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட வேண்டிய ஒன்று. செல்லா நோட்டை அறிவுக்கும் முன்னர் அதனை நடைமுறைப்படுத்தும் முன்னர் அந்த நடவடிக்கையினால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை நன்றாக ஆராய்ந்து எடுத்திருக்க வேண்டும். முதலில் அவர் அறிவித்தவுடன் உண்மையாகவே பாராட்டினோம். அதுவும் நான் பொருளாதாரம் படித்த மாணவி என்ற முறையில் ரொம்பவே மகிழ்ந்தேன். ஆனால் ஒரே வாரத்தில் தெரிந்துவிட்டது இது சரியாக ஆராய்ந்து முன்னேற்பாடுகளுடன் எடுக்கப்பட்ட ம்டுஇவு அல்ல என்று.

    பணப்புழக்கம் இல்லை என்றால் முதலில் விலைவாசி குறைய வேண்டும். குறையவில்லை.ஏன்? கார்டு! அதே சமயம் சிறு வியாபாரிகள் கஷ்டப்பட்டார்கள் படுகிறார்கள். ஆனால் கார்டு தேய்க்கும் கடைகளில் எந்தவித கஷ்டமும் இல்லை. ஆனால் கார்டு தேய்ப்பதால் நமக்கு அதிகம் செலவு..கார்டில் கமிஷன் வெட்டப்படுகிறது.

    நான் பொதுவாகச் சந்தையில்தான் காய்கள் கனிகள் வாங்குவது வழக்கம். விலை குறைவு. அங்கிருக்கும் சிறு வியாபாரிகளுக்கும் பயன். ஆனால் பணம் இல்லாததால் நான் கார்டு தேய்க்கும் கடையில் வாங்க வேண்டியச் சூழல். விலை கண்டு பயந்து போனேன். கமிஷன் வேறு....என் பட்ஜெட் எகிறியது! இப்போது வங்கியில் மணிக்கணக்காய் நின்று பணம் அக்கவுண்டிலிருந்து வித்ட்ரா செய்து எடுத்து வருகிறேன். ஆனால் அங்கும் கொஞ்சம் தாமதித்துச் சென்று விட்டால் பணம் இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். தலைநகரிலும் இதே பாடுதான் என்று அங்கு வசிக்கும் எனது உறவினர்கள் சொன்னார்கள்.

    பலருக்கும் இரு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லையாம். குறிப்பாகத் தனியார் கம்பெனிகளில். வீட்டில் வேலை செய்பவர்களுக்குச் சம்பளத்தை இரு மாதங்களுக்கும் சேர்த்து வழங்கி அவர்களதுக் கஷ்டத்தைப் போக்குகிறார்கள் என் உறவினர்கள். கட்டிட வேலை செய்ப்வர்களுக்குக் கூலி வழங்கப்படாத நிலை. அதனால் வேலை வாய்ப்பு இல்லை. புதிய வேலைவாய்ப்பும் இல்லை. மொத்தத்தில் பொருளாதாரம் மந்தம் வளர்ச்சியின்மை.

    இதில் பொருளாதார வல்லுனர் கீனிஷியன் பொருளாதார மந்த நிலைக்கு அவரது கோட்பாட்டில் சொல்லியிருப்பதைக் கூட இங்கு இப்போது நிறுவ முடியாத நிலை. இவரது கோட்ப்பாடு சில குறைபாடுகள் இருந்தாலும் அருமையான கோட்பாடு...ஆனால் இன்று இந்தியாவே மந்த நிலையில் இருக்கிறது வளர்ச்சிக் குறைந்து வருகிறது எனப்துதான் உண்மை. கறுப்புப் பணத்தையும், பதுக்கிய பணத்தையும் கொண்டு வர வேறு வழிகள் எவ்வளவோ இருக்க அதைக் கடைபிடித்திருக்கலாம் இந்தக் கொள்கையுடன்..ஆனால்.. மோடியின் இந்தக் கொள்கை அதிருப்தியையே விளைவித்துள்ளது.

    நான் எழுதிய பதிவின் ஒரு அங்க்ம் இது சகோ. நான் படித்த பொருளாதார வல்லுனர்களின் கோட்பாட்டுடன் பதிவு எழுதி வைத்துள்ளேன் ஆனால் ஏனோ அத்னை முடித்து வெளியிடாமல் அப்படியே வைத்துள்ளேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு கட்டுரை. பல இடங்களில் பிரச்சனை இருக்கிறது. விரைவில் சரியாக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான கட்டுரை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை