Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

தடம் மாறிப் போயினவோ தார்மீக நெறிமுறைகள்


கைக்கட்டி நிற்கும் கல்வியாளர்கள், தத்தமது வீடுகளை தங்க நகை ஷோரூம்களாகவும், ரொக்க கஜானாக்களாகவும் மாற்றிவிட்ட சில அரசு அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் என்கிற செய்திகளை பார்க்கும் போது பேரதிர்ச்சி ஏற்படுகிறது.

மக்களுக்காக ஆட்சியாளர்கள் என்கிற நிலை மாறி, ஆட்சியாளர்களுக்காக மக்கள் என்கிற நிலைக்கு தமிழகம் தாழ்ந்துவிட்டதோ என எண்ணத்தோன்றும் அளவிற்கு காட்சிகள் நிழலாடுவதைக் காணமுடிகிறது. 24 மணி நேரத்திற்கும் அதிகமாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீடுகளிலும், அலுவலகத்திலும் வருமான வரி சோதனைகள் நடந்திருப்பது தமிழகத்திற்கு தலைக்குனிவு என்று சொல்லப்பட்டாலும், இதற்குரிய பொறுப்பை ஊழல் அதிகாரிகளும், அரசியல்வாதிகளுமே ஏற்கவேண்டும்.



மணல் விற்பனையை அரசே எடுத்து நடத்தும் எனும்போது, அது அத்துறையில் சிக்கல்களை நீக்கி வெளிப்படையான போக்கினை ஏற்படுத்தும் என்றும், அதன் அடிப்படையில் கட்டுமான வேலைகளுக்கு தேவையான மணல் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது சிலருக்கு பொன் முட்டையிடும் வாத்தாக மாறியிருப்பது தான் கண்ட பலனாகி போயுள்ளது.

மண் வாசனையை பொன் வாசனையாக மாற்றும் வித்தகத்திற்கு சேகர் ரெட்டி போன்றவர்கள் சொந்தக்காரர்கள் என்றால், அதற்கு அனுசரணையாக பின்புல உதவிகள் புரிந்த அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் என்னவென்று சொல்வது. தானே உழைத்து சம்பாதித்த பணத்தை எடுப்பதற்காக வங்கிகளின் வாசல்களில் தவம் கிடக்கும் தனி மனிதனின் கண்களுக்கு இத்தகைய பொன்னும், பொருளும் பிடிபடும் காட்சிகள் ஒரு மிரட்சியையே ஏற்படுத்தும். புலிவாலைப் பிடித்த கதையாக மாறிப்போய்விட்ட பண மதிப்பிழப்பு விவகாரத்திலிருந்து மீண்டு வரும் முயற்சியாக மத்திய அரசு நாடெங்கும் இத்தகைய சோதனைகளை நடத்துகிறது என குற்றம் சொல்வோரும் உண்டு.


ஆனாலும், அப்பட்டமான கொள்ளையை அசராமல் அடித்திருக்கும் அதிகாரிகள் மற்றும் செல்வாக்கு மிக்க சிலரின் செயல்களைப் பார்க்கும்போது, நாடு முழுவதும் இதுபோன்ற சோதனைகள் முன்னிலும் கடுமையாக தொடர வேண்டும் என்பதே சாதாரண குடிமகனின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும். கக்கன், காமராஜர் போன்ற தலைவர்களை தேட வேண்டிய சூழலில் தமிழகம் சிக்கித் தவித்து வரும்போது, தனிச்செருக்குமிக்க, தகுதிசால் அரசு அதிகாரிகளையும் தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தமிழகத்திற்கு வாய்த்திருப்பதை என்னவென்று சொல்ல. அரசியல் ரீதியாக ஏற்றத்தாழ்வுகளோ, கடும் நெருக்கடிகளோ ஏற்பட்டாலும்கூட, தமிழகத்தின் அதிகார வர்க்கம் மிகத் திறமையானது என்பதால் அரசாட்சி கொண்டு செலுத்தப்படுவதில் பிரச்சினைகள் இருக்காது  என்றும், ஆட்சி இயல்பாகத் தொடரும் என்றும் பொதுவாக சொல்லப்படுவதுண்டு.

அது உண்மைதான் என்பதையும் சமீப வருடங்களில் தமிழகம் பார்த்தே வந்துள்ளது என்பதையும் மறுக்க இயலாது.  ஆனால் நேர்மையற்ற அதிகாரிகளின் செயல்பாடுகளால் அந்த கெளரவம் பாழாகிவிட்டதையும் மறுக்க இயலா­து.  தலைமைச் செயலாளர் மீதான சோதனை என்பது இதுவரை காணாதது என்றாலும், கூட்டாட்சி முறைக்கு எதிரானது என கூப்பாடு கிளம்பியிருப்பதை ரசிப்பதற்கு தமிழகத்தில் ஆள் இருப்பார்களா என்பதும் சந்தேகமே.


பொதுவாகவே பண மதிப்பிழப்பு விவகாரங்கள் காரணமாக கடும் சிரமங்களை மக்கள் சந்தித்து வரும் வேளையில் இதுபோன்ற புத்தம் புதிய நோட்டுகள் பெரும் அளவில் ஒரே இடத்தில் சிக்குவது போன்ற செய்திகள் அவர்களிடத்தில் எதிர்ப்பையே உண்டுபண்ணும் என்பதே யதார்த்தம்.

அதே நேரம் கடினமான சூழல் என்பது, நியாயமான, மிக சிறப்பான வழிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் உருவாக்கித் தரும் என்றும் நம்பப்படுவதுண்டு. அந்தஅடிப்படையில் அதிகார வர்க்கம் சுயபரிசோதனை மேற்கொண்டு மக்கள் நல பணிகளில் மிகத்தீவிரம் காட்டுவது குறித்து சிந்திக்க வேண்டும்.

ஆட்சியாளர்களுக்கும் அதுவே கடமையாகும். பல்வேறு முனைகளிலும் மாற்றங்கள் வேகமாக கண்ணுக்குத் தெரிகின்ற நேரத்தில் இதுபோன்ற லஞ்ச லாவண்ய இடர்பாடுகள் வெளிப்படுவதும் ஒரு வகையில் வரவேற்கத்தக்கதே. அது சமூகம் தன்னை சுத்தப்படுத்திக் கொள்வதற்கும், நேர்மையானவர்களை அடையாளம் காண்பதற்கும் உபயோகமாக இருக்கும் என்பது மட்டும் திண்ணம்.

கட்டுரையாளர்: எம்.ஜே.வாசுதேவன் 



8 கருத்துகள்

  1. வணக்கம் சகோ,

    அதிகார வர்க்கம் சுய பரிசோதனை மேற்கொண்டு இதை இவர்கள் செய்தால் ,,,,, இப்படி ஒரு நிகழ்னுவுகள் நடக்க வாய்ப்பே இல்லையே,,,
    சமூக மாற்றம் என்பது ஒவ்வோரு மனிதனும் தான் சுயமாக எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே அமைய முடியும்,,
    இவை எல்லாம் உண்மையாக வேறு ஒரு சாயம் புசாமல் அப்படியே தொடர்ந்தால் நலம்,, இங்கு நடப்பவை உண்மை ,,, தானா (?) என்பதை பாரமக்கள் உணராமல் இல்லை,,,, இல்லை
    பகிர்வுக்கு நன்றி சகோ,,

    பதிலளிநீக்கு
  2. தொடரட்டும்... நல்லதொரு தீர்வு பிறக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு பகிர்வு.

    ஊழல் எங்கும் புறையோடிப் போயிருக்கிறது....

    பதிலளிநீக்கு
  4. மக்கள் தலை குனியட்டும் சொறனையாவது மிச்சம்

    பதிலளிநீக்கு
  5. மிகவும் சரியாக சொன்னீர்கள்.
    தார்மீக நெறி முறைகள் எல்லாம் இங்கே தடமாறி போய்விட்டன.ராம மோகனராவ் போன்ற கொள்ளையர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுத்து பக்கபலமாக இருந்தவரை இரும்பு பெண், ஆளுமை கொண்ட தலைவி என்று எப்படியெல்லாம் போற்றுகிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. unmaiyil jayalalitha irutnu irunthaal Chief Secretary male kai vaika CBI yaal mudiyumaa...?? no...not possible.....thats why JAYA LALITHA IS CALLED as IRON LADY....ANY DOUBT...????

      நீக்கு
  6. ஓட்டுபோடும்போதுயோசிக்கவேன்டும்

    பதிலளிநீக்கு
  7. மாறியது ஒருவர் இருவரே.... வெளியே இருப்பதோ பலர். ஜெ ஆட்சியின் சிறப்பு இதுவே.
    இவர்களும் பேரம் படியாததால் மாட்டி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை