Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

உடனடி மாற்றமா? உண்மையான மாற்றமா?


500, 1000 ருபாய் நோட்டுகள் செல்லாதென அறிவிக்கப்பட்டு 19 நாட்களுக்கு மேலாகியும், பணப்புழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படாத நிலை தொடர்வதை உணரமுடிகிறது. 


பிரதமர் மோடியும் கூட நிலைமை சீரடைய 50 நாட்கள் ஆகலாம் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதே. அதேநேரம், செல்லாது என்கிற அறிவிப்பு இனி மாற்றப்படுவதற்கான வாய்ப்புக்களே இல்லை என்றாகிவிட்ட பின்னர், பெருவாரியான மக்களும் கூட யதார்த்த சூழலுக்கு பழகிக்கொண்டு விட்டதாகவே தெரிகிறது.  

இந்தப் பிரச்சினையின் காரணமாக பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்படும் உடனடி மாற்றங்கள் குறித்தும், உண்மையான மாற்றங்கள் குறித்தும் பொருளாதார நிபுணர்களால் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி பாதியாக சரிவடையும் என்கிற அளவுக்கும் கூட கணிப்புகள் வெளியாகி அச்சுறுத்துவதும் உண்மையே.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் அதாவது 2016 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவிகிதமாக இருந்தது என மத்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்க செய்தியே என்றாலும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பின்னர், இரண்டாம் பாதியில் எந்த அளவுக்கு வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் என்பதை யாராலும் அறுதியிட்டுக்கூற முடியாது என்பது உண்மை. 

அரசு சொல்வதைப் போல், 50 நாட்களில் பணப்புழக்கத்தில் சகஜ நிலை ஏற்படுமானால், பொருளாதார வளர்ச்சி சிறிய அளவிலான பாதிப்புகளோடு தப்பிவிடும் வாய்ப்புண்டு என்பதையும், மறுக்க இயலாது. அதேநேரம், எதிர்பார்க்கப்படுவது போல் வெளிவராத கருப்பு பணம் கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் கோடியாக இருந்து, அது அனைத்தும் அரசுக்கு வருவாயாக மாறும் பட்சத்தில் பொதுச்செலவினங்கள் மற்றும் முதலீடுகள் அதிகரிக்கப்படுமாதலால், அதன் அடிப்படையில் வளர்ச்சியில் சாதகமான பலன்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஆனால், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பின் மூலமாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை மத்திய அரசு அடித்துள்ளதாகவே கருதப்படுகிறது.


அதாவது சரிவர கணக்கு காட்ட இயலாத மிகப்பெருவாரியான கருப்பு பணம் சந்தைக்கு வராமலே அழிக்கப்பட்டுவிடும் என்பதால், அரசுக்கு லாபம் என்பது ஒரு பலன் என்றால், தற்போது மாறியுள்ள சூழலில், ரூபாயாக சேமித்து வைப்பது அதிக ரிஸ்க் தரும் வழியாக கருதப்பட்டு வருவதால், பெருவாரியான வர்த்தக நடவடிக்கைகள் நேர்மறைக்கு திரும்பத் தொடங்கியிருப்பதும் ஒரு முக்கியமான  பலனாக பார்க்கப்படும் என்பதே உண்மை.

இனிவரும் காலங்களில் ரொக்க பரிவர்த்தனை குறையும் என்பதோடு, வங்கிகள் மூலமான அல்லது ஆன்-லைன் மூலமான பரிவர்த்தனையின் சதவிகிதம் அதிகரிக்கும் என்பதும் நிச்சயமாகிவிட்டது. இதைத்தான் மத்திய அரசும் எதிர்பார்த்திருந்தது.  அதாவது, கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வந்ததைவிடவும், வர்த்தகம், தொழில்துறையினர் மத்தியில் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தியதே இந்த அறிவிப்பின் மிகப்பெரிய சாதனையாக வருங்காலத்தில் குறிக்கப்படக்கூடும்.

ஒன்று மட்டும் நிச்சயம். பெருவாரியான பொதுமக்களால் வரவேற்கப்படும் இந்த திட்டம் புதிய ரூபாய் நோட்டுக்கள் வரத்தில் பிரச்சினைகள் இன்றி செயல்படுத்தப்பட்டிருக்குமேயானால், மிகப்பெரும் வெற்றியை அரசுக்கு அளித்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.


கட்டுரையாளர்: எம்.ஜே.வாசுதேவன் 




11 கருத்துகள்

  1. நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கட்டும்.

    இந்தக்கட்டுரையாளர் கடைசி பத்தியில் சொல்லியிருப்பது மிகவும் உண்மையே. பெரும்பாலானோர் எல்லோரும் இதையேதான் சொல்கிறார்கள்.

    இன்னும் இந்த ஆண்டு முடிய ஒரு மாதம் உள்ளதே!

    உடனடி மாற்றமா? உண்மையான மாற்றமா? ... என நாமும் பொருத்திருந்து பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் பொறுத்துப்பார்ப்போம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  2. பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடுதல் என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.....அதே போல தான் இந்த அரசும்....! பெரிய நோட்டுகளை கடந்த இரண்டு வருடங்களாக அள்ளி விட்டதும் இதே அரசு தான் , இப்போது அதையே திரும்ப வாங்கி பெயர் வாங்க நினைப்பதும் இந்த அரசு தான்....! உண்மை....அதுகுறித்து நான் ஒரு கட்டுரை எழுதி கொண்டு இருக்கிறேன்....இது ஒரு அரசியல் சதுரங்கம்...வழக்கம் போல....வெட்டுப்படுவது சிப்பாய்கள் ( மக்கள் ) தான்...

    பதிலளிநீக்கு
  3. பிரச்னைகள் இன்றி எந்த ஒரு பொதுக்காரியத்தையும் செய்ய முடியாது. ஒவ்வொரு நாள் நிலைமைக்கும் தக்கவாறு அவ்வப்போது கட்டுரைகளும், அபிப்ராயங்களை வெளிவந்து கொண்டிருக்கும்!


    பதிலளிநீக்கு
  4. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்று

    பதிலளிநீக்கு
  5. என்ன ஆளும்கட்சி சால்ரா பயங்கரமாக இருக்கிறது . உங்கள் கருப்பு பணத்தை மாற்ற ஆளும் கட்சி சப்போர்ட் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். அப்பிடி நடக்கும் இப்பிடி நடக்கும் என்பது எல்லாம் கற்பனையே. அரசியல் வாதிகள் அதிகாரிகள் நேர்மையாக நடக்காத வரை எதுவும் மாறப்போவது இல்லை. மக்களை முட்டாள் ஆக்குவதில் மோடி 100 கருணாநிதிக்கு சமம். கருப்பு பணம் வைத்திருக்கும் பெரியகருப்பனை பிடிக்கவோ அல்லது கருப்பு பணம் உருவாவதை தடுக்கவோ ஒரு துரும்பையும் அசைக்கவில்லை என்பதை யோசித்து பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. அடிப்படை கல்வி வழங்குவதற்கு அருகருகே கல்வி நிறுவனங்கள் ஆயிரம் கோடிகளில்...ஆனால் அடித்தட்டு, கல்வியறிவில்லா மக்களுக்கோ டிஜிட்டல் மைய அறிவிப்பு இதுதான் வளர்ச்சியா எல்லாம் ஏழைகளை துன்புறுத்தும் செயல்...ஓட்டு வாங்குவது ஏழைகளிடம். உபகாரம் செய்வது பணமுதலைகளுக்கு

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை