Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

மூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு


ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தாள். இன்று அவளுக்கு 'புனித சடங்கு'. இந்த சடங்கு அங்கு வாழும் 98% பெண்களுக்கு செய்யப்படுள்ளது. இது ஒரு கொடூரமான சடங்கு.

கேட்கவே மனம் பதைபதைக்கும் கொடூரம்! உலகம் எப்படி மூடநம்பிக்கையில் திளைத்திருக்கிறது என்பதற்கான நிகழ்கால உதாரணம்! இந்த வன்கொடுமை மூவாயிரம் வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

பிரமிடுகளில் புதைந்திருந்த மம்மிகளில் கூட இந்த அடையாளம் காணப்படுகிறது. அதுதான் இந்த சடங்கு 3,000 ஆண்டுகள் பழமை  மிக்கது என்று உலகுக்கு காட்டுகிறது.

தற்போதும் கூட 28 ஆப்பிரிக்கா  நாடுகளில் இந்த பழக்கம் தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எகிப்து, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் 98% பெண்களுக்கு இந்த சடங்கு பெருமையோடு நடத்தப் பட்டிருக்கிறது.

இங்கு பெண்ணாகப் பிறந்த எல்லோருக்குமே கட்டாயமாக இதை செய்கிறார்கள். அப்படி செய்யாத பெண்கள் தீட்டு கழியாத புனிதமற்ற பெண்களாக கருதி வெறுத்து ஒதுக்குகிறார்கள். அந்த சடங்கின் பெயர் 'பெண் சுன்னத்'. உலக சுகாதார மையம் இதை 'பெண்ணுறுப்பு சிதைவு' என்கிறது.

அந்த நாடுகளில் எல்லாம் இந்தக் கொடுமை போற்றுதலுக்குரிய புனிதமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாடுகளில் வாழும் 13 கோடி பெண்களின் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் 6,000 பெண்களுக்கு இது  நடத்தப்படுகிறது.

எதனால் இப்படி..?

அவர்கள் புனிதமாக கருதும் கலாச்சார விதி, 'பெண்கள் சைத்தானின் வடிவங்கள். அவர்களைப் பார்த்தால் பாலுணர்வு மட்டுமே தோன்றும். அவர்கள் பாலுணர்வு மிக்கவர்கள். ஆகவே அவர்களின் பாலுணர்வை சிதைப்பதன் மூலம் அவர்கள் ஒழுக்கத்தோடு வாழ்ந்து கணவனுக்கு யோக்கியமாய் இருப்பார்கள்.' என்கிறது.

மேலும்  யோனி வெட்டும் முறையும் அதில் கூறப்படுகிறது. இதனாலே இது பெண்களின் மறுக்க முடியாதா சம்பிரதாயமாக முக்கியத்துவம் பெறுகிறது.


பெண்களின் 4 வயது முதல் 10 வயதுக்குள் இதை செய்து விடுகிறார்கள். இதை செய்த பின் பெண்ணின் செக்ஸ் ஆர்வம் முற்றிலுமாக அழிந்துவிடும். மிக சொற்பமாக மனதளவில் மட்டுமே பாலியல் எண்ணம் தோன்றும்.

இயல்பாக பெண்களுக்கு பெண்ணுறுப்பில் ஏற்படக்கூடிய கிளர்ச்சியும், எழுச்சியும் இந்த சடங்குக்குப் பிறகு ஏற்படுவதில்லை. இதனால் இந்தப் பெண்கள் தவறான வழியில் போகமாட்டார்கள். வேறு ஆண்களுடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள். செக்ஸ் உணர்வு இல்லாததால் காலம் முழுக்க கற்போடு இருப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் ஆணாதிக்கம் திணித்த பெண் அடிமைத்தனமும் இதன் பின்னே இருக்கிறது.

சரி, அப்படி என்னதான் நடக்கிறது இந்த சடங்கில்...???

இளகிய மனம் படைத்தவர்கள் இந்த வீடியோவை 
தயவுசெய்து பார்க்க வேண்டாம்..! 


இதை ஆங்கிலத்தில் 'பீமேல் ஜெனிடல் மியுட்டிலேஷன்' என்பார்கள். தமிழில் பெண்ணுறுப்பு சிதைவு. பெண்ணுறுப்பில் 'க்ளிட்டோரியஸ்' என்ற பகுதிதான் உணர்ச்சி மிகுந்தது. ஆணுக்கு உடலில் எந்த இடத்தில் ஆணுறுப்பு இருக்குமோ, அதே இடத்தில் பெண்ணுக்கு இருக்கும் ஆணுறுப்பின் எச்சம்தான் 'க்ளிட்டோரியஸ்'.

ஆணுறுப்பில் எந்தளவுக்கு உணர்ச்சி இருக்குமோ அதே அளவு உணர்ச்சி சிறியதாக மொட்டுப் போல் இருக்கும் க்ளிட்டோரியசிலும் அப்படியே இருக்கும். உணர்வு ததும்பும் இந்த பாகத்தை வெட்டி எடுப்பதுதான், பெண்ணுறுப்பு சிதைவின் முதல் பகுதி.


இந்த வெட்டும் வேலையை செய்வது டாக்டர்களோ அறுவை சிகிச்சை நிபுணர்களோ இல்லை. வயது முதிர்ந்த கிழவியோ அல்லது பெண்ணின் தாயோ தான். எந்த மயக்க மருந்தும் கொடுக்காமல் கதற கதற ரண வேதனையோடு அறுத்தெரிவதுதான் முதல் நிலை. மருத்துவத்தில் இதற்கு 'க்ளிட்டோரிடேக்டமி' என்று பெயர்.

சடங்கின் இரண்டாம் நிலை, யோனியின் பக்கவாட்டில் இருக்கும் உதடுகளை வெட்டி எடுப்பது. இந்தப் பகுதிதான் உறவின்போது பெண்ணுக்கு இன்பத்தை அதிகப்படுத்துவது. அதையும் பிளேடால் அறுத்து எடுத்துவிடுவார்கள். இதனை 'லேபியாபிளாஸ்டி' என்று மருத்துவம் சொல்கிறது.

அதன்பின் மூன்றாம் நிலை, பெண்ணுறுப்பின் நுழைவு வாசலை ஊசி நூல் கொண்டு தைத்து மூடிவிடுவது. சிறுநீர், மாதவிலக்கு திரவம் வெளியேற சின்னதாக இரண்டு துளை மட்டும் ஏற்படுத்தி விடுவார்கள். இதற்கு 'வெஜைனாபிளாஸ்டி' என்ற மருத்துவப் பெயரும் உண்டு.

 இதை செய்வதற்கு வீட்டில் உள்ள கத்தி, பிளேடு, கண்ணாடி துண்டு, கத்திரி, சாதாரண ஊசி நூலையே பயன்படுத்துகிறார்கள்.


மூன்று நிலையும் முடிந்த பின்னே பெண்ணின் தாய் உறவினர்களிடம் வந்து 'என் மகள் பெண்ணாக மலர்ந்துவிட்டாள்' என்று மகிழ்ச்சியோடு சொல்வார். உடனே மதுவோடு விருந்து டாம்பீகமாக நடக்கும். உள்ளே வீட்டின் பின்புறத்தில் ஒரு மூலையில் இரண்டு காலையும் சேர்த்துக் கட்டிய நிலையில் தாங்கமுடியாத வேதனையோடு பெண்ணாக மலர்ந்த சிறுமி கதறி அழுது கொண்டிருப்பாள். இனி அந்தப் பெண் உணர்ச்சியற்ற ஜடம்.


காயங்கள் ஆறுவதற்காக 40 நாட்கள் கால்களை சேர்த்தே கட்டிப்போட்டு விடுவார்கள். கொடுமைகள் நிறைந்த இந்த சடங்கு உருவாக்கும் வலி, வேதனை, அதிர்ச்சி, பலவிதமான உடல் சார்ந்த நோய்களை பெண்ணுக்கு கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான பெண்கள் இதற்கு பின் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.


இவ்வளவு பாதிப்புகள் இருந்தும் இதை பெண்கள் தொடர்ந்து செய்து கொள்வதற்கு காரணம் அசைக்க முடியாத மத மற்றும் மூட நம்பிக்கைதான். இந்த சடங்கு பெண்ணுக்குரிய தீட்டை மறைத்துவிடும். உடலில் உள்ள துர்நாற்றத்தை நீக்கிவிடும். முகம் அழகு பெறும், பெண்மை அதிகரிக்கும் என்று ஏகப்பட்ட நம்பிக்கைகள் போதிக்கப்படுகின்றன.

பெண்ணுக்கு திருமணமானவுடன் கணவன்தான் பெண்ணுறுப்பின் தையலைப் பிரிப்பான். அவள் இன்னும் கன்னிதான் என்பதற்கான சாட்சி அந்த தையல்தான்.

பெண்ணுறுப்பின் வாசலை குறுக்கி தையல் போடுவது உடலுறவின் போதும் குழந்தை பிறப்பின் போதும் தாங்க முடியாத வலியையும் சிக்கலையும் உருவாக்குகிறது. இதனால் பிரசவத்தின் போது குழந்தை இறப்பதோ தாய் இறந்து போவதோ அதிகமாக நடக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் முட்டாள்தனமான சடங்குதான் என்று உலக சுகாதார மையம் கூறுகிறது.

எகிப்து நாட்டில் ஒரு 12 வயது சிறுமிக்கு இந்த சடங்கு செய்யும் போது வலி தாங்க முடியாமலும் அதிக உதிரம் வெளியேறியதாலும் இறந்துவிட்டாள். அது அங்கு பெரிய போராட்டமாக வெடித்தது. அதை தொடர்ந்து 2007-ம் ஆண்டு இந்த சடங்கை எகிப்து அரசு தடை செய்தது. ஆனாலும் மற்ற நாடுகளில் இந்த கொடூரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


சிறு வயதில் இந்த சடங்கை செய்து கொண்டு பின்னாளில் மிகப் பெரும் மாடலாக வலம் வந்த வாரிஸ் டேரி என்ற சோமாலியப் பெண் இதை 'தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்' என்கிறார்.

சிறுவயதில் அவருக்கு நடந்த சடங்கை இப்படி சொல்கிறார்,

"நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். பழைய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு அந்த மருத்துவச்சி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் கண்ணில் அப்படியொரு பேய்த்தனம்.

பைக்குள், தன் விரல்களைவிட்டு அரக்கப் பரக்க எதையோ தேடினாள். இறுதியாக ஒரு ரேசர் பிளேடு வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்தது.

பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன.

‘த்துப்..’

பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அதை, தன் துணியில் துடைத்தாள். அவள் துடைத்துக்கொண்டிருக்கும்போதே, அம்மா தன் கைகளை எடுத்து என் கண்களை மூடினாள்.

நான், உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்.

அடுத்த நொடி…

‘பர்ர்க்’ என்று ஒரு சத்தம்.

படக்கூடாத இடத்தில் பிளேடு பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. எந்த காலத்து பிளேடோ? துருபிடித்து, பற்களோடு இருந்திருக்கவேண்டும். நரநரவென்று மேற்கொண்டு முன்னும் பின்னுமாக இழுத்தாள் அந்தக் கிழவி.





‘அய்யோ…!’ -நரக வேதனை.

அசையக்கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடூரமாகும். பற்களைக் கடித்துக்கொண்டு படுத்துக்கிடந்தேன். என் தொடைகள் நடுங்கின.

‘கடவுளே! இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா?’

ஒரு வழியாக அம்மா என் கண்களை விடுவித்தாள். வெளிச்சத்துக்கு பழகியதும் பார்க்கிறேன். அந்த கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள். குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம். அக்கேசியா முட்களைத்தான் ஒவ்வொன்றாக என் பிறப்புறுப்பில் குத்தியிருக்கிறாள். பிறகு கடினமாக வெள்ளை நூல் கொண்டு உறுப்பை தைத்திருக்கிறாள்.

சிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்துவிட்டு மீதி உறுப்பு மூடப்பட்டுவிட்டது. என் கன்னித் தன்மையும், ஒரு இனத்தில் கவுரவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதற்கு, நான் செத்துப்போய் இருக்கலாம்.

தையல் முடிந்ததும் கிழவி போய்விட்டாள். நான் எழுந்திருக்க முயன்றேன். என்னால் அசையக்கூட முடியவில்லை. என் இரண்டு கால்களும் துணிப்பட்டையால சுற்றப்பட்டிருந்தன. அம்மா என்னை நகர்த்தியதும் பாறையைத் திரும்பிப் பார்த்தேன்.

ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன."


வாரிஸ் டேரி
என்ன கொடூரம்..! அதோடு நிறுத்தவில்லை வாரிஸ், இந்த சடங்கால் தனது செக்ஸ் உணர்வு முற்றிலும் காணமல் போனதை இப்படி சொல்கிறார்.

"செக்ஸ் என்றால் என்ன? இன்றுவரை எனக்குத் தெரியாது. என் வாழ்நாளில் ஒருபோதும் நான் செக்ஸ் இன்பத்தை அனுபவித்ததில்லை. அனுபவிக்கவும் முடியாது. நாங்கள் ஆண்களுக்காக, அவர்களின் தேவைக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு கன்னிப் பெண் வேண்டும் என்பதற்காக ஐந்து வயதுக்குள்ளாகவே எங்கள் உறுப்பை அறுத்து, க்ளிட்டோரியஸை வெட்டி எறிந்துவிடுகிறார்கள். மீண்டும் எப்போது அவர்களுக்குத் தேவையோ, அதாவது முதலிரவுக்கு முன்பு வெட்டித் திறந்துவிடுகிறார்கள்.

வாரிஸ் டேரி
3,000 ஆண்டுகளாக வெட்டவெளியில், எந்தவித மருத்தவ உபகரணங்களும் இன்றி, மயக்கமருந்துகூட இல்லாமல் இந்த அறுவை நடக்கிறது. சிலருக்கு கத்தி, கத்தரிக்கோல்கூட கிடைக்காது. கூர்மையான பாறைக் கற்கள்தான்.

நான் பிழைத்துவிட்டேன். ஆனால், லட்சக் கணக்கான என் சகோதரிகள்? அறுவையின்போது சிலர், அறுவைக்குப் பின் நோய்த் தொற்று ஏற்பட்டு சிலர், அப்படியே உயிர் பிழைத்தாலும் குழந்தைப் பேற்றின்போது சிலர் என அடுக்கடுக்காய் செத்துப் போகிறார்களே! அவர்களை யார் காப்பாற்றுவது?

மத அடிப்படைவாதிகளால், என் உயிருக்கு ஆபத்து என்று நண்பர்கள் அஞ்சுகிறார்கள். இருக்கட்டும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பெண்களின் பிறப்புறுப்பை சிதைக்கவேண்டும் என்று குரானில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா? சொல்லுங்கள்!’’ என்று நடைபெறும் அயோக்கியத்தனத்தை தட்டிக் கேட்கிறார்.

பெண்ணுறுப்பு சிதைவுக்கு எதிரான இயக்கத்துக்கு இவரைத்தான் தூதுவராக உலக சுகாதார அமைப்பு நியமித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 6-ம் நாளை உலக பெண்ணுறுப்பு சிதைவு எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வாரிஸ் டேரி வாழ்க்கையை சொல்லும் புத்தகம்
மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலம் வரை எந்த பிரச்சனையும் இல்லை. அவனே ஓரிடத்தில் நிலையாக தங்கி சொத்து சுகங்களை சேர்த்தப் பின் தனது வாரிசில் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவன் பெண்ணை படுத்திய பாடு இருக்கிறதே..

உலகம் உள்ள வரை ஆணிணத்துக்கு பெண்ணிடம் இருந்து மன்னிப்பு கிடைக்காது. இத்தனை பாவம் செய்த ஆண் என்ன பரிகாரம் செய்து அந்த பாவங்களை கழுவப் போகிறானோ தெரியவில்லை.

இதை எதிர்க்கும் அளவுக்கு அங்குள்ள பெண்களுக்கு கல்வியறிவோ பொருளாதார சுதந்திரமோ இல்லை. அதனால் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இன்னமும் இந்த சடங்கு செய்த பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று சொல்லும் அந்த நாட்டு ஆண்களை என்ன செய்வது..??!!

ஐ.நா. சபை இதை மனித உரிமை மீறல் என்று சொல்லியும் குறைந்த பாடில்லை..




79 கருத்துகள்

  1. any Muslims and academics in the West take pains to insist that the practice is not rooted in religion[1] but rather in culture. "When one considers that the practice does not prevail and is much condemned in countries like Saudi Arabia, the center of the Islamic world, it becomes clear that the notion that it is an Islamic practice is a false one," Haseena Lockhat, a child clinical psychologist at North Warwickshire Primary Care Trust, wrote.[2] True, FGM occurs in non-Muslim societies in Africa. And in Arab states such as Egypt, where perhaps 97 percent of girls suffer genital mutilation,[3] both Christian Copts and Muslims are complicit. (Haseena Lockhat, Female Genital Mutilation: Treating the Tears (London: Middlesex University Press, 2004), p. 16.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது இதுக்கும் இஸ்லாமுக்கும் சம்பந்தம் இல்லையா? அப்ப இது என்ன?

      http://sufimanzil.org/kidan-of-ladies/

      நீக்கு
    2. Islam is nothing But euphemism for Arab imperialism. Genital Mutilation is an Arab Practice. Mohammed was a witness to that.He did not ban it.

      நீக்கு
  2. . இது ஒரு கலாச்சாரமே அன்றி மதத்தின் சட்டம் அல்ல. இதில் முஸ்லிம், கிருத்துவர்கள் என்று எல்லோரும் செய்கின்றனர். இதை இஸ்லாமிய சட்டம் போல் காட்டுவது நேர்மையன்று.

    முஸ்லிம்களின் சட்டம் திருக்குரானும், ஆதாரபூர்வமான நபிவழியும் தானே தவிர வேறு எவரின் சொல்லும், பழக்கவழக்கங்களும் & கலாச்சாரமும் அல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே, இதில் நான் எங்கும் இஸ்லாமியர் என்று சொல்லவில்லை. இந்த கொடுமை நடைபெறும் நாடுகளில் இஸ்லாமியர்களும் வசிக்கிறார்கள். அவர்களும் இந்த கொடூரத்துக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவந்தேன்.

      நீக்கு
  3. //பிரமிடுகளில் புதைந்திருந்த மம்மிகளில் கூட இந்த அடையாளம் காணப்படுகிறது. அதுதான் இந்த சடங்கு 3,000 ஆண்டுகள் பழமை மிக்கது என்று உலகுக்கு காட்டுகிறது.
    தற்போதும் கூட 28 ஆப்பிரிக்கா மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இந்த பழக்கம் தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    3000 ஆண்டுகள் - இஸ்லாம் தோன்றி 1400 வருடங்கள் - எளிதாக புரிந்து கொள்ளலாம், இது இஸ்லாத்தின் சட்டம் அல்ல.
    இது காட்டுமிராண்டி தனமான செயல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்துவது நியாயம் அல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஸ்லாத்தோடு தொடர்பற்றது என்பதை தாங்களே எடுத்துக்காட்டுடன் கூறி விட்டீர்கள். இந்த பதிவுலும் கூட மாடல் வாரிஸ் டேரி அதைத்தான் குறிப்பிட்டுள்ளார்.

      நீக்கு
  4. வணக்கம் நண்பரே...
    ஊன்றிப்படித்து விட்டேன் கருத்துரை நாளை தருகிறேன்.
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே தங்கள் கருத்துரைக்கக காத்திருக்கிறேன்.

      நீக்கு
    2. வணக்கம் நண்பரே...
      இந்த விடயங்கள் எனக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் இதனைக்குறித்து ஒரு பதிவு எழுத வேண்டுமென்ற எண்ணம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது இருப்பினும் ஒரு தயக்கமும்கூட காரணம் நம்மவர்கள் எதையும் எழுதியது என்ன ? 80தைவிட எழுதியவர் யார் ? 80தைத்தான் கவனிக்கின்றார்கள் இதன் காரணமாக பல நல்ல விடயங்களும் தவறான கருத்தோட்டதில் படிக்கப்படுகின்றன அதன் காரணமாக அது தவறாகவே போய் விடுகிறது இதில் சுப்பு, சுல்த்தான், சூசை மூவருமே உண்டு.

      இது பலங்காலமாக சூடான், எஜிப்த், எமெனி, மற்றும் சவுதி போன்ற நாடுகளில் நடைமுறையில் இருந்து வந்து இருக்கிறது அதேநேரம் இதை முதன் முதலில் எதிர்த்து நிறுத்தியவர்கள் கிருஸ்தீனியர்கள் 80ம் குறிப்பிடத்தக்கது இதை சட்டப்பூர்வமாக நிறுத்தி மருத்துவமனைகளில் செய்வது அடியோடு நிறுத்தப்பட்டது. இருப்பினும் இன்றும் சூடானில் 40 % மக்கள் அதாவது கிராமப்புறங்களில் செய்து கொண்டுதான் வருகிறார்கள் இதை 3000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி வைத்த பெருமை எஜிப்தினியரையே சாரும்.

      நேற்று எனது அலுவலகம் விடுமுறை ஆதலால் இன்று அலுவலகத்தில் சூடானியர்களைக் கலந்து விபரங்கள் கேட்ட பிறகே இந்தக்கருத்துரையை எழுதுகிறேன் இதற்க்கான காரணத்தை கேட்ட பொழுது உணர்ச்சிகளைக் கொள்வதே முக்கிய காரணம் என்றபோது எனது மனம் ஒருகணம் துடித்து விட்டது எவ்வளவு கீழ்த்தரமான சிந்தனைகள் இது முழுக்க முழுக்க பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் வேறென்ன ? சொல்லமுடியும் இருப்பினும் இது வேதநூல்களில் சொல்லப்படாததே 80தையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டும்.

      இன்று ஒரு அரபிகூட வேடிக்கையாக கேட்டார் என்ன ? இன்று சூடானியர்களிடம் அதிகம் பேசிக்கொண்டு இருக்கிறாய் ஏதும் சங்கம் அமைக்கப் போகிறாயா ? என்று.....

      வேண்டாம் நண்பரே நான் தங்களைப்போல பக்குவமாக எழுதத் தெரியாதவன் கொடுமையைக் குறித்து எழுதத்தொடங்கினால் வார்த்தைகள் கடுமையாகி விடும் ஆகவே நிறுத்துகிறேன் என்னால் தங்களது தளம் விமர்சனத்துக்கு வருவது நல்லதல்ல...
      நலம் நன்றி.

      நீக்கு
    3. ''உணர்ச்சிகளைக் கொல்வதே'' என்று திருத்திப்படிக்கவும்.

      நீக்கு
    4. வாருங்கள் நண்பரே,
      சொல்லியபடி வந்து விரிவாக கருத்துரை பதிவிட்டதற்காக மிக்க நன்றி.
      சட்டப்பூர்வமான அறுவை சிகிச்சை நிறுத்தியப் பின் மருத்துவச்சி மூலம் செய்து கொள்வது அதிகமானது. அதுதான் மிகப் பெரிய ஆபத்து.

      இந்தக் கட்டுரையை 2007-ல் எழுதிய போது கடுமையான பல வார்த்தைகளை பயன்படுத்தினேன். பின் மீண்டும் மாற்றி எழுதினேன். வெகுஜன பத்திரிகையில் மிக காட்டமாக எழுத முடியாது. அதுவும் ஒன்றைகோடி மக்கள் படிக்கும் ஊடகத்தில் எழுதும்போது மிக கவனமாக எழுத வேண்டும்.

      நாம் எழுதும் விஷயத்தை வைத்துதான் நம்மை எடை போடுவார்கள் என்பது. இது ஓரளவு உண்மையே. 'சித்தர் அற்புதம்' என்ற தலைப்பில் தொடர் எழுதிக்கொண்டு இருக்கும் போது 350 கி.மீ. துரத்தில் இருந்து என்னை பார்க்க ஒரு வாசகர் வந்திருந்தார். என்னை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவர் நீண்ட வெண்தாடி கொண்ட ஒருவர்தான் இதை எழுதுகிறார் என்று எண்ணியிருந்தார்.

      பத்திரிகையில் எல்லாவிதமான சப்ஜெக்ட்டைப் பற்றியும் நான் எழுதியிருப்பதால், இவர் இப்படித்தான் என்ற பெயர் வந்ததில்லை. ஆனால் வலைப்பதிவு உலகிற்கு என்னைப் பற்றி எதுவும் தெரியாது. அதனால் தவறாக புரிந்து கொள்ளவும் வாய்ப்புண்டு.

      மீண்டும் சந்திப்போம்!

      நீக்கு
  5. படிக்கவே மனம் பதைக்கும் கொடூரம்....

    பதிலளிநீக்கு
  6. கொடுமையை வெளியே கொண்டுவந்த பதிவு.
    ஆசியாவில் இந்தோனேசியாவில் இப்போதும் இந்த கொடுமை நடைபெறுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே, இந்த பழக்கம் மத்திய தரைக்கடல் நாடுகள், பாரசிக வளைகுடா நாடுகள், ஏமன், பஹ்ரைன், சவூதி அரேபியா, மலேஷியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியாவில் சில பகுதிகளில் இந்த சடங்கு இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
    2. இந்தோனேஷியா: பரவலாய் நடக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு.
      இது பெண்குழந்தைகள் மீதான வன்முறை என்று வர்ணித்துள்ள ஐநா, இது நிறுத்தப்படவேண்டும் என்று குரல்கொடுத்திருக்கிறது.
      http://www.bbc.com/tamil/global/2016/05/160518_indonesiafgm

      நீக்கு
    3. இணைப்பை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  7. படிக்கவே மனம் பதைக்கும் கொடூரம்....This idiot system should be removed as soon as possible in the world. along with "Sunnath" also to be abolished.....How God create a human being with production defect....
    Human body is a amazing design how many sensor and function. is he create with problem and we will cut /remove the skin and correct it.... crazy...

    Seshan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் கருத்தோடு எனக்கும் உடன்பாடு உண்டு. இயற்கைவிட மிக சிறந்தக் கிரியேட்டர் யார் இருக்கிறார்கள்?

      நீக்கு
    2. முன்னரே இதைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், படிக்கும்போது நடுக்கம் உண்டாகிறது.

      நீக்கு
    3. உண்மைதான் நண்பரே, நெஞ்சை பதறவைக்கும் கொடுமை இது.
      கருத்துரைக்கு நன்றி!

      நீக்கு
  8. படிக்கப் படிக்க நெஞ்சம் நடுங்குகிறது நண்பரே
    இப்படியுமா செய்வார்கள் பாவிகள்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் அறியாதா இன்னுமோர் உலகம் இயங்குகிறது. அவற்றைப்பற்றி ஏற்கனவே சில கட்டுரைகள் எழுதியுள்ளேன். வாய்ப்பு கிடைக்கும் போது இங்கு பதிவிடுகிறேன்.
      வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  9. முழுமையாக என்னால் படிக்கக்கூட முடியவில்லை ,படங்கள் வேறு கொடுமையின் உச்சகட்டம் (;

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேரங்களில் உண்மையின் தன்மையையும் அதன் கொடூரத்தையும் பட்டவர்த்தனமாக சொல்ல இப்படிப்பட்ட படங்கள் தேவையாக இருக்கிறது.
      வருகை தந்து வாகளித்தமைக்கு நன்றி!

      நீக்கு
  10. மூடநம்பிக்கையின் கொலை வடிவம் இது! என்று மக்கள் விழிப்படைவார்களோ அன்றுதான் மாறும் நிலை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட இந்தப் பழக்கம் இருந்தது. ஆனால், அதை அவர்கள் கடுமையான சட்டத்தின் மூலம் 1930 களில் ஒழித்துவிட்டார்கள். அங்கெல்லாம் கூட இது மிக குறைந்த எண்ணிக்கையில் தான் நடைபெற்று வந்தது.
      ஆனால், நாட்டில் இருக்கும் எல்லா பெண்களும் இதை செய்தாக வேண்டும் என்று தீவிரமாக கடைபிடிக்கும் நாடுகளில் சட்டத்தாலும் தடை போட முடியவில்லை.

      நீக்கு
  11. இப் பெண்ணின் கதை, பல விபரணச்சித்திரங்கள் இதன் கொடுமை பற்றி பார்த்துள்ளேன்.
    ஆண் குழந்தைகளுக்கும் இது நடக்கிறது. யாருக்கானாலும் அந்த வயதில் அந்த இடத்தில்
    கொடுமையே!
    எவ்வளவோ மூடத்தனங்கள் என் கலாச்சாரத்தில், மதத்தில் இருந்தும் ,இது இல்லை என்பதில் எனக்குப் பெருமையும் மகிழ்வும் எப்போதும்.
    அதற்காக இந்தக் கலாச்சாரத்திலும், மதத்திலும் பிறந்தது எனக்கு மகிழ்வே!
    பலர் இதைச் செய்யும் கலாச்சாரம், மதம் சார்ந்தவர்கள் விழித்து விட்டார்கள். அந்த எண்ணிக்கை போதாது, முற்றாக ஒழிக்கும் நாளே நன்னாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வகையில் மிக்க மகிழ்வே!
      ஆனாலும் இதைப் பற்றி அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது. நாம் எதாவது சொல்லப் போக அதை மதத்தோடு சம்பந்தப் படுத்திவிடுவார்கள்.
      நன்றி!

      நீக்கு
  12. பதில்கள்
    1. இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
      நன்றி டிடி சார்!

      நீக்கு
  13. பயங்கரம் செந்தில் விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள் .
    இதைப் பற்றிய பதிவொன்று நீண்ட நாட்கள் எனது ட்ராப்டில் இருக்கிறது. பின்னர் திருத்தம் செய்து வெளியிட இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் வெளியிடுங்கள் நண்பரே!
      இந்த கட்டுரைகூட 2007-ல் எகிப்தில் இந்த சடங்கு தடைசெய்யப்பட்ட போது 'தினத்தந்தி'யில் நான் எழுதியதுதான். அதைதான் மீண்டும் இங்கு பதிவிட்டுள்ளேன்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
    2. எல்லாம் சரிதான்.இதில் பெண் சுன்னத் என்று உள்ளது சுன்னத் என்ற சொல் இஸ்லாமில் மட்டும் உள்ளது.அதை நீக்க வேண்டும் சகோதரா

      நீக்கு
    3. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் என்பதால் அப்படி ஒரு பெயர் வழக்கத்தில் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு இணையான சொல் இருந்தால் தெரிவியுங்கள் சகோ மாற்றிவிடுகிறேன்.

      நீக்கு
  14. ஆன்ஆதிக்கமுன்னு நாம சொன்னா கலாச்சார விரோதின்னு ஒரு கும்பல்கள் செல்லுது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்ற விஷயங்களில் எப்படியோ இந்த சடங்கை பொறுத்தவரை இதன் பின்னணியில் முழுக்க முழுக்க ஆணாதிக்கம்தான் உள்ளது. பெண்ணை ஒரு உயிருள்ள மனுஷியாக கூட பார்க்காமல் உயிரற்ற ஜடமாக பாவித்திருக்கிறார்கள்.

      நீக்கு
  15. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழில் ஒரு சூப்பர் மாடல் இந்த விசயத்தை விரிவாக பேசியிருந்தார்.
    அவர் ஒரு கிழவனுக்கு வாழ்க்கைப் படாமல் தப்பி ஓடும் பொழுது ஒரு மரத்தின் அடியில் அயர்ந்து தூங்கி விழித்த பொழுது எதிரே ஒரு சிங்கம் !
    இவரை தவிர்த்து விட்டு சிங்கம் சென்ற அந்த நொடியில் கடவுள் எனக்கு எதோ ஒரு பெரிய காரணத்தை வைத்திருக்கிறான் என்று நம்பியிருக்கிறார் ...
    யுனெஸ்கோ தூதராக இருந்தார் அவர். (சுன்னத்துக்கு எதிராக )
    மனிதர்களுக்கு உடல் , மூளைத்திறன் வளர்ந்த அளவிற்கு மனசு வளரவில்லை (இதற்ககு மேல் எழுதினார் கலீஜாக பதிவிடும் பயம் இருப்பதால் பை பை )
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கூறும் அந்த மாடலின் பெயர் வாரிஸ் டேரி. அவருடைய பேட்டியை தான் இந்த பதிவில் தந்துள்ளேன். 5 ஒட்டகத்திற்காக 60 வயது கிழவனுக்கு திருமணம் செய்துவைக்க அவரது தந்தை முடிவு செய்கிறார். அவரின் தாயோ கிழவனை திருமணம் செய்து கொள்வதற்கு பதில் எங்கேயாவது சென்று பிழைத்துக்கொள் என்று அனுப்பி வைப்பார். இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறி 300 கி.மீ. துரத்தில் உள்ள ஒரு நகரத்திற்கு நடந்தே வந்து சேருவார். மிகவும் துயரமான வாழ்க்கை அவருடையது.

      நீக்கு
    2. பிழைக்கப் போன இடத்தில் அவரை துரத்தி துரத்தி வந்து மாடலாக்கினார்கள் ...
      வாழ்வின் அர்த்தம் சொல்லும் விசயம் அது..
      நன்றி நண்பரே...

      நீக்கு
  16. இது மதத்தோடு சம்பந்த பட்டதா இல்லையா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு காலத்தில் இது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கூட இருந்தது. ஆனால் கடுமையான சட்டம் மூலம் 1930-களில் தடை செய்து விட்டார்கள். அப்படிப்பட்ட கடுமையான சட்டத்தை இஸ்லாமிய நாடுகள் பயன்படுத்தாததால் இன்னமும் தொடர்கிறது. மற்றபடி இது ஒரு மதத்திற்கு மட்டும் சொந்தமான சடங்கல்ல.

      நீக்கு
  17. இந்த வாரிஸ் டேரியைப் பற்றியும் அவரது பேட்டி பற்றியும் சில வருடங்களுக்கு முன்னால், ரீடர்ஸ் டைஜஸ்டில் படித்திருக்கிறேன். நண்பர் துளசியும், இந்த ஆண்டு பெண் சிறு குழந்தைகளைக் கடத்திய பொக்கொ ஹராம் பற்றிய கட்டுரை எழுதிய பின் பெண்கள்தினம் அன்று இந்த நிகழ்வைக் குறித்து எழுத வேண்டும் என்றும் நினைத்திருந்தார். ஆனால் அவரால் எழுத முடியவில்லை. நானும் இன்னும் தகவல் திரட்டி எழுதலாம் என்று விட்டுவிட்டேன் வேறு ஒரு பதிவு பெண்கள் தினம் முடிந்த பின் எழுதினேன்.

    பெண்கள் தினம்? அதுவும் உலக பெண்கள் தினம்? எதற்கு? நம்பிக்கை இல்லை. இது போன்ற நிகழ்வுகளை எல்லாம் உலக நாடுகளாலும், குழந்தைகள் நிறுவனங்களினாலும் நிறுத்த முடியாத போது மேடை போட்டு கூவி பெண்கள் உரிமை என்று பேசுவதில் அர்த்தமே இல்லை. அந்தக் கூவல் எல்லாம் அன்றைய ஒரு தினத்தோடு முடிந்து விடுகின்றது. என் பதிவும் பெரிதாகி விட, பின்னர் இந்த நிகழ்வு மனதை ஏதோ செய்ய என்னால் எழுத முடியவில்லை அன்று. பெண்ணாகிய நான் வெட்கித் தலை குனிகின்றேன். பெண் சிசுக்களைக் கொல்வதும், இந்த நிகழ்வைச் செய்வதும் பெண்களே! பெண்கள் உரிமை??????அட போங்கப்பா....(இது உலகை நோக்கி நண்பரே தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்...)

    கீதா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் கீதா மேடம்,
      தங்கள் உடல் நலம் எப்படி உள்ளது?

      தங்களின் கருத்துரை எப்போதும் மிக ஆழ்ந்த சிந்தனை கொண்டதாகவே இருக்கும். அதற்காகவே உங்கள் கருத்தை ஆவலோடு எதிர்பார்ப்பேன்.

      இந்த சடங்கைப் பொறுத்தவரை ஆண்களின் மேலோங்கிய ஆதிக்கமே அதிகம் உள்ளது. அதற்கடுத்து மதம். எதைப் பற்றியும் சுதந்திரமாக கருத்து சொல்ல முடியாத ஒரு மதம். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அரசாங்கம். இதை புனிதமாக கருதும் பெண்கள். பின் எப்படி ஒழிப்பது?

      கல்வியும் விழிப்புணர்வும் தொடர்ந்து அந்த மக்களுக்கு வழங்கப்பட்டால் இன்னும் ஒரு 20 வருடத்தில் இதை ஒழிக்கலாம். எங்கே பெண்கள் படித்துவிட்டால் இப்படி உரிமையெல்லாம் கேட்பார்களே என்று அவர்களை பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்கவிடாத ஆண்கள் அங்கு இருக்கும் வரை மாற்றம் வர வாய்ப்பில்லை.

      நீக்கு
  18. http://avargal-unmaigal.blogspot.com/2010/09/blog-post_30.html பலவினமான இதயம் உள்ளவர்கள் இதை பாரக்க வேண்டாம் என்று 2010 ல் இதைப் பற்றி நான் ஒரு பதிவு இட்டு இருக்கிறேன். ஆனால் உங்களைப் போல என்னால் இதைப்பற்றி விலாவாரியாக எழுத மன திடம் இல்லை. காரணம் பெண்கள் பூவைப் போல உள்ளவர்கள் . அவர்களுக்கு இப்படியா என்று நினைக்கும் போது இதையும் பார்த்து கொண்டிருக்கும் கடவுளே நீ ஒரு அரக்கன் தான் என்று என் மனம் சொல்லியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வலைதளத்தில் அந்த வீடியோ காட்சியை பார்த்தேன். மனம் பதைபதைக்க வைக்கும் காட்சி. என்று தான் தீருமோ அவர்கள் மீதான கொடுமை.

      நீக்கு
  19. கொடுமை என்கிற வார்த்தையின் முழு அர்த்தம். இப்போது முற்றிலுமாக நிறுத்தப் பட்டிருக்கிறதா இந்தக் கொடுமை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது நண்பரே, இந்த பதிவிலே அது சொல்லப் பட்டிருக்கிறது. தினந்தோறும் 6,000 பெண்களுக்கு இந்த கொடூர சடங்கு இன்னமும் நிகழ்கிறது. இன்று கூட புதிதாக 6,000 சிறுமிகளின் பெண்ணுறுப்பு சிதைக்கப் பட்டிருக்கும் என்பதுதான் உண்மை.

      நீக்கு
  20. வணக்கம்
    படிக்கவே மனதை கனக்கவைத்து விட்டது.... அருமையாக சொல்லியுள்ளீர்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015:  

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதை கனக்கச்செய்யும் விடயம் தான் இது.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  21. இந்த கட்டுரை படித்தவுடம் மிகப்பெரிய சோகம் என்னை கவ்வுகிறது. சக உயிரினமான் பெண் இனத்தின் மேல் இன்னும் எத்தனை கொடுமைகளை செய்வார்கள் மதத்தின் பேரால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இன்னும் பெண் எத்தனை துன்பங்களை தான் சுமப்பாளோ!

      நீக்கு
  22. கொடுமை .....மனத்தில் மிகவும் வலிக்கிறது ....

    பதிலளிநீக்கு
  23. கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் காலையில் முதலில் படிக்கும் நாளிதழ் லண்டனிலிருந்து வரும் கார்டியன். அதைத்தொடர்ந்து நியூயார்க் டைம்ஸ், நேரமிருந்தால் டான் (பாகிஸ்தான்). சில நேரங்களில் பிற வெளிநாட்டு நாளிதழ்களையும் படிப்பேன். அடிக்கடி கார்டியன் இதழில் FGM என்பது தொடர்பாகவும், அதனுடைய கொடுமை மற்றும் வேதனை தொடர்பாகவும் படித்துள்ளேன். அதனை தடை செய்ய பல நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருவதையும் படித்துள்ளேன். ஆனால் Female Genital Mutilation என்பதை முற்றிலுமாக என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. தங்களது இந்த பதிவின் மூலமாக மிக முக்கியமான ஒரு செய்தியை அறிந்து கொண்டேன். இக்கட்டுரைக்காக தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பாராட்டுகிறேன். இன்றுதான் உங்களது இக்கட்டுரையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைப் போன்ற வரலாற்று ஆய்வாளருக்கு என்னாலும் ஒரு புதிய தகவல், அதுவும் 3,000 வருடங்களாக நிகழும் ஒரு சரித்திர களங்கத்தை தெரிவிக்க முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பதிவு வெளியிட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இன்றைக்கும் அதிகம் பேர் படிப்பது இந்த பதிவைத்தான். இதுவரை 17,000-க்கும் மேல் இதை படித்துள்ளார்கள்.
      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  24. உலகில் ஏதோ ஒரு வகையில் ஆண்களால் பெண்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள்....இன்னும் அதை பெண்கள் உணரவில்லை என்பது தான் மிகக்கொடுமை...மனம் கனக்கிறது.....வேறு எந்த உயிரினங்களும் இப்படி பாதிப்புகளை தன் இனத்திற்கு உருவாக்குவதில்லை.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோ, ஏதோ ஒருவகையில் பெண்ணிற்கு ஆண் துன்பம் இளைத்துக் கொண்டுதான் இருக்கிறான். அதிலிருந்து இப்போதுதான் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் பெண்ணியவாதிகள் கைகளில் சிக்காமல் இருப்பதே நல்லது. பெண்ணியவாதிகளில் பலர் பெண்களுக்கு தவறான போக்கையே காட்டுகிறார்கள். இதற்கு வெளிநாட்டு நிதி வேறு வருகிறது. இந்த மாயவலையில் சிக்காமல் இருப்பதே நல்லது.
      வருகைக்கு நன்றி சகோ!

      நீக்கு
  25. உன்மையாகவா இன்னும் சொல்ல போனால் இந்தியாவிலும்ம இருப்பதாக கூறுகிறீர்கள் மிக மிக மிக கண்டிக்க பட வேண்டிய விசயம்

    பதிலளிநீக்கு
  26. idhu pondra innum yeralamana kodumaigal pennirukku indha samugathil nadakkiradhu, adhai velichatthurkku kondu vandhu penniyam and pengal indha samugathil mananiraivodu vazha vagaiseiungal anna.

    பதிலளிநீக்கு
  27. நமக்குத் தெரியாத பல பயங்கரங்கள் இந்த உலகில் உள்ளன. அஓற்றில் ஒன்றை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு நன்றி, செந்தில். நினைக்கவே பயமாக இருக்கிறது....பாவம் அந்தப் பிஞ்சு பெண் குழந்தைகள் படும் துன்ப ரணம்.....ஆற்றமுடியுமா என்ன.

    பதிலளிநீக்கு
  28. செந்தில்குமார் அய்யா அவர்களுக்கு, ஒரு கோரிக்கை... அதிகம் சுவைத்தவை என்ற தலைப்பின் கீழ் "மூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு"
    படித்தபின் மனது வலிக்கிறது... ஒரு பெண் குழந்தையை பெற்ற தகப்பனாக இன்னும் அதிகம்.... அந்த குழந்தை புகைப்படம்... அந்த கதறல்.... ஓ...கொடுமை....
    அதிகம் சுவைத்தவை என்ற தலைப்பை அதிகம் படித்தவை என்று மாற்றி விடுங்கள்... சுவைத்தவை என்பதை மனது ஒப்பு கொள்ளவில்லை.... pLEASE

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அய்யா! நானே அந்தக் கோணத்தில் யோசித்துப் பார்க்கவில்லை. 'கூட்டாஞ்சோறு' என்ற வலைப்பூ பெயருக்கு பொருத்தமாக அப்படி ஒரு தலைப்பை வைத்தேன். அதில் இந்த பதிவு அதிகம் படித்த பதிவுகளில் முதலிடம் பிடித்தப்பின் வேறுவித அர்த்தம் தருவதை தற்போதுதான் பார்த்தேன். நெருடலை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. வார்த்தையை மாற்றிவிட்டேன்.

      நீக்கு
  29. அய்யா எனது கருத்தினை ஏற்று தலைப்பினை மாற்றிய தங்களுக்கு நன்றி... உங்கள் கட்டுரைகள் அனைத்தும் மிகவும் அருமை... வெறும் தகவலை மட்டும் வழங்காமல் தக்க ஆதாரத்துடன் வழங்கும் தங்களின் பணி மென் மேலும் வளர்க... வாழ்க.

    பதிலளிநீக்கு
  30. படிக்கவே மனம் பதைக்கிறதே!! பெண்ணாக பிறப்பது பாவமா?

    பதிலளிநீக்கு
  31. ஐயோ! கொடூரம் என்ற வார்த்தையே வலிமையானதாய் இல்லையே இதற்கு!! காட்டுமிராண்டிபோல என்று திட்டுவோமே...அவர்கள் கூட பரவாயில்லையா!! FGM பற்றி வாசித்திருந்தாலும் உங்கள் பதிவு பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது சகோ. இத்தனை ஆண்டுகளாய்!!!! ஏன் அனுமதிக்கிறாய் இறைவா!!!!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை