Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

மேகமலை பயணம் - 2

மேகமலைக்கு இரண்டு முறை பயணம் செய்திருக்கிறேன்.முதல் பயணம் 2009-ல். அப்போதுதான் தமிழக அரசு புதிதாக 18 சுற்றுலா தலங்களை அறிவித்திருந்தது. அதில் மேகமலையும் ஒன்று.

இந்த அறிவிப்பை பார்த்த நாளில் இருந்து அங்கு போக வேண்டும் என்ற கட்டுக்கடங்கா ஆவல் தோன்றியது. மேகமலைக்கு தேனியில் இருந்து ஒரு நாளைக்கு மூன்று பேருந்துகள் மட்டுமே செல்கின்றன. அவைகளும் அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்ளும் என்று கேள்விப் பட்டேன். ஆக, பஸ் சரிப்பட்டு வராது.

அடுத்து என்னுடைய சாய்ஸ், டூ வீலர்தான். மதுரையிலிருந்து மேகமலை 150 கி.மீ  ஏற்கனவே கொடைக்கானலுக்கு டூ வீலரில் போன அனுபவம் இருந்ததால் தைரியமாக கிளம்பினேன். கூடவே எனது 10 வயது மகனும் இணைந்து கொண்டான்.

டூ வீலரோ காரோ எந்த வாகனமாக இருந்தாலும் நீண்ட தூரம் நானே ஓட்டிக்கொண்டு போவது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளில் காலை 5 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பினோம்.

பாதையோர பசுமை 
அது அறுவடைக்கு முந்திய காலம். சாலையின் இருபக்கமும் பசுமையான வயல்கள் செழித்திருந்தன. அரும்பி நிற்கும் இளம் நெல்மணிகளின் பால் வாசம் பாதை எங்கும் பரவியிருந்தன. அதுவே எங்கள் பயணத்திற்கு புத்துணர்ச்சி தந்தது.

உசிலம்பட்டி வரை இருட்டுக்குள் பயணித்த எங்களுக்கு, அதன் பின் விடியலின் வெளிச்சமும் இதமான குளிரும் பயணத்தை மேலும் இனிமையாக்கியது.


கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பசுமை, அதன் நடுவே கருப்பு நிற தார்ச்சாலை வளைந்து நெளிந்து வசீகரமாக நீண்டு கொண்டே போனது. வாகனங்களற்ற சாலையில் பயணிப்பதும் தனி சுகம்தான். நமக்கு உணவளிக்கும் உழவர்கள் மட்டுமே காலையில் காய்கறியோடு டூ வீலரில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.


அடுத்ததாக  ஆண்டிப்பட்டி வந்தது. குளிரின் இதமான பிடியில் இருந்து எங்களை சற்று விலக்கிக் கொள்ள சூடான தேநீர் அருந்தினோம். மீண்டும் பயணம். தேனியை கடந்து வீரபாண்டி வந்ததும் வண்டியை நிறுத்தினோம்.

பாரதிராஜா படங்களில் அடிக்கடி தலை காட்டும் அந்த அழகிய இடம் எங்களை மேற்கொண்டு போகவிடாமல் கட்டிப் போட்டது. எத்தனை 'லலலா..!' பாடல்கள் இங்கு படமாக்கப் பட்டுள்ளன.

வைகையின் கிளை நதி அது. சிறிய தடுப்பணையை கடந்து நீள்வசத்தில் விழும் சிறிய நீர்வீழ்ச்சி போன்ற ரம்மியம். இளம் வெயில்... கண்ணாடி போல் தெளிந்த நீரோட்டம்... நம்மை கட்டிப் போட இயற்கைக்கு இது போதாதா..!

"சூப்பர இருக்குப்பா..! குளிக்கலாம்..!" என்றான் மகன்.

 ஆற்று நீரில் குளிப்பதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன. குளித்து முடித்தப் பின் நாம் ஓய்வெடுப்பதாக இருந்தால் தாரளமாக குளிக்கலாம். இல்லையென்றால் குளிக்க கூடாது. நம்மைப் போல் நகரத்தில் வாழும் மக்களுக்கு குளியலறையில் தண்ணீரை கண்டும் காணாமல் குளித்தே பழக்கம்.


தீடீரென்று பெரும் நீரோட்டத்தில் குளித்து முடித்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தூக்கம் கண்ணைக் கட்டும். நீண்ட தூரம் வாகனம் ஓட்டும் போது இதை கருத்தில் கொள்ள வேண்டும்.

நம்மவூரு வண்டி - சின்னமனூர் 
எனது முடிவை என் மகனும் அரை மனதுடன் ஒத்துக்கொண்டான். அடுத்து சின்னமனூர் வந்தது. காலை உணவை அங்கு முடித்துக் கொண்டோம். இனி பாதையில் எந்த பெரிய ஊரும் வராது. மலையும், மலைக் கிராமங்களும்தான் வந்து போகும்.

மேகமலை அடிவாரம்

வனத்துறை செக் போஸ்ட்
இங்கிருந்து 29 கி.மீ. பயணித்தால் மேகமலை வந்துவிடும். மலையின் அடிவாரத்தில் வனத்துறை செக் போஸ்ட் வருகிறது. அந்த இடத்தின் பெயர் தென்பழனி. அங்கு ஒரு முருகன்கோயில் உள்ளது. கட்டுச்சோறு கட்டி வருபவர்கள் இங்கு அமர்ந்து சாப்பிட நல்ல இடம்.

தென்பழனி முருகன் கோயில்
அதனை கடந்ததும் மலைப் பாதைதான். மலை பாதையில் எங்கள் பயணம் தொடங்கியது. முதலில் ஒரு செக் போஸ்ட் வந்தது. இது எஸ்டேட்டுக்கு சொந்தமானது. வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் உண்டு. கார்களுக்கு 100, டூ வீலர்களுக்கு 50 என்று கட்டணம் நிர்ணயித்திருந்தார்கள். யார் நிர்ணயித்தது? என்ற சந்தேகம் வந்தது. அதையே அவர்களிடம் கேட்டேன். உடனே இலவசமாக என்னை அனுமதித்து விட்டார்கள். இப்போது அந்த செக் போஸ்ட் எடுக்கப்பட்டுவிட்டது.

எஸ்டேட் செக் போஸ்ட், இப்போது இல்லை
செக் போஸ்டை கடந்து எங்கள் பயணம் தொடர்ந்தது. மலைப்பாதை வளைந்து வளைந்து சென்றது. வளைவுக்கு அப்பால் பார்க்க முடியாது. அதனால் ஒவ்வொரு திருப்பத்திலும் கவனமாக திரும்ப வேண்டியிருந்தது.

எங்களை கடந்து சென்ற பஸ்
அப்படித்தான் ஒரு திருப்பத்தில் திரும்பிய போது 'சடார்' என்ற சத்தத்துடன் ஒரு மான் உயரத்திலிருந்து ரோட்டில் விழுந்து சரிவை நோக்கி ஓடி மறைந்தது. ஒரு எட்டடி முன்னால் வண்டி போயிருந்தால் அந்த மான் எங்கள் தலையில்தான் விழுந்திருக்கும். அப்படி நடந்திருந்தால்.. இப்படியொரு பதிவெழுத முடியாமல் போயிருக்கும்.

மனதுக்குள் லேசாக அச்சம் எட்டிப் பார்த்தது. ஆனாலும் தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தோம். மற்றொரு வளைவில் திரும்பிய எங்களை மகிழ்ச்சியில் நிறுத்தி வைத்தன சிங்கவால் குரங்குகள்.

ரோட்டை மறித்து வரிசையாக அமர்ந்திருந்தன குரங்குகள். இயற்கையின் அழகிய பின்னணியில் பார்க்கும் போது அது அம்சமாக இருந்தது. வண்டியை ஓரங்கட்டி, என்ஜினை ஆப் செய்து, கேமரா பேக்கோடு குரங்குகளை நோக்கி முன்னேறினேன்.

கேமரா பேக்கை திறக்கும் சத்தம் அந்த அமைதியான இடத்தில் பெரும் ஓசையாக கேட்டது. அதுவரை எங்களை பார்க்காமல் இருந்த குரங்குகள் அந்த சத்தம் கேட்டு நொடியில் ஓடி மறைந்தன. நல்ல படம் மிஸ் ஆகிப்போனது.

கொண்டைஊசி வளைவு 
மறுபடியும் எங்கள் பயணம் தொடர்ந்தது. இதுவரை நன்றாக இருந்த சாலை, இப்போது வேறு வடிவம் எடுத்திருந்தது. கற்கள் பெயர்ந்து சாலையின் மேல் துருத்திக்கொண்டு நின்றன. ஆங்காங்கே பள்ளம் வேறு. தார்ச்சாலை என்ற அடையாளத்தை அது முற்றிலுமாக இழந்திருந்தது.

செங்குத்தாக செல்லும் மேடான சாலையில் சரளைக்கற்கள் நிறைந்திருக்கும் பாதையில் பேலன்ஸ் செய்து வண்டி ஓட்டுவது சிரமமாக இருந்தது. மக்கள் நடமாட்டமே இல்லாமல் இருப்பது ஒருவித அச்சத்தை மனதில் தோற்றுவித்தது.

திடிரென்று சாலையில் யானையின் சாணம் குவியல் குவியலாக கிடந்தன. அதன் தன்மை சற்று நேரத்திற்கு முன்புதான் யானை அந்த பாதையில் நடந்து சென்றிருக்கிறது என்பதை உணர்த்தியது. அதுவும் ஒற்றை யானை.

காட்டில் சிங்கம் புலிகூட ஆபத்தான விலங்குகள் இல்லை. ஒற்றை யானை மிகவும் ஆபத்து நிறைந்தது. பேசாமல் திரும்பிவிடுவோமா..? என்ற கேள்வி எழுந்தது.

மகனோ விட்டபாடில்லை. "அப்பா! யானை எங்கேப்பா..? காணோம்..!" என்று ஆவலோடு கேட்டுக்கொண்டிருந்தான். அவன் நம்மூர் வீதிகளில் வலம் வரும் அமைதியான யானையைப் போலவே காட்டு யானையையும் நினைத்துக் கொண்டான்.


இது வனப் பகுதி என்பது தெரியும். ஆனால், கொடைக்கானல் போல் சாலையில் விலங்குகள் நடமாட்டம் இருக்காது என்று நம்பி மகனையும் கூட்டி வந்தது எவ்வளவு பெரிய தவறு என்று அப்போது புரிந்தது. சரி, யாரிடமாவது இதை பற்றி கேட்கலாம் என்றால் ஒரு மனித ஜாதியை கூட பார்க்க முடியவில்லை.

600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வனப் பிரதேசத்தை முதுமலை போல வன சரணாலயமாக மாற்றிட வேண்டும் என்ற கனவு வனத்துறைக்கு வெகு நாட்களாக இருந்தது. ஆனாலும் காலம் கை கூட வில்லை.

பசுமை பள்ளத்தாக்கு
அதற்குள் சுற்றுலாதுறை முந்திக்கொண்டு இந்த இடத்தை சுற்றுலா தலமாக அறிவித்துவிட்டது. 600 கிலோமீட்டர் வனப்பரப்பில் கிட்டத்தட்ட 200 சதுர கிலோமீட்டர் அளவுக்கு தேயிலை, காபி, ஏலக்காய் எஸ்டேட்டுக்கள் நிறைந்திருக்கின்றன.

முன்பு 'ப்ரூக் பாண்ட்' நிறுவனம் தேயிலை எஸ்டேட்டுகளை நிர்வகித்து வந்தது. இப்போது உட்பிரையர் குருப், ஆனந்தா பிளான்டேஷன், பொன்சிவா பிளான்டேஷன், பீல்டுமேட் எஸ்டேட் போன்ற நிறுவனங்கள் பொறுப்பில் இருக்கின்றன.

மழை நேரத்தில் வழுக்கும் மண் சாலை 
மேகமலை செல்லும் ரோடும் இவர்களுக்கு சொந்தமானது. 'பரூக் பாண்ட்' பொறுப்பில் மொத்த எஸ்டேட்டும் இருந்த போது அவர்கள் நன்றாக சாலையை பராமரித்திருக்கிறார்கள் . அதன் பின் 12 வருடமாக புதிதாக ரோடு போடவில்லை. அதனால்தான் ரோடுகள் ஜல்லிக்கற்களாக பெயர்ந்து குண்டும் குழியுமாக இருக்கின்றன.

இந்த மலைப் பாதை தனியாருக்கு சொந்தமானதல்ல. அது அரசுக்கு சொந்தமானது என்று கூறி எஸ்டேட் செக் போஸ்டை எடுக்க வைத்தவர் தேனி மாவட்டத்தின் அப்போதைய கலெக்டர் முத்துவீரன்தான்.

மேகமலை கிராமத்தில் சின்ன சர்ச்
ஒருவழியாக எங்களின் பைக் மேகமலை கிராமத்தை வந்தடைந்தது. இனி விலங்குகள் பயம் இல்லை என்று அங்கிருந்த ஒருவர் கூறினார். நான் எதிர்பார்த்தது போல் மேகமலை பெரிய ஊரக இல்லை. மிக சிறிய கிராமமாக இருந்தது. ஒரு சிறிய தேநீர் கடைதான் அதற்கான அடையாளமாக இருந்தது.

மேகமலை கிராமம்
நாங்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தோம். இங்கிருந்து 12 கி.மீ. சென்றால் ஹைவேவீஸ் என்ற இடம் வருகிறது. இது ஒரு பேரூராட்சி. இங்கு ஹைவேவீஸ், கிளவுட் லேண்ட், மணலாறு என்ற மூன்று பிரிவுகள் இருக்கின்றன.

மேகமலை பஸ் ஸ்டாப்
இவற்றில் ஹைவேவீஸ் தான் பெரியது. இந்த இடத்தை 'பச்சை கூமாச்சி' என்று தமிழில் கூறுகிறார்கள். தமிழில் இதை சொன்னால் இங்கிருக்கும் யாருக்கும் தெரியாது. இந்த பெயருக்கு பசுமையான மலை என்று பொருள். தேயிலை தோட்டம்தான் இப்படி பசுமையாக காட்சி அளிக்கிறது.

மாரியம்மன் கோயில் மேகமலை
ஹைவேவீசில் இரண்டு அணைகள் உள்ளன. அவற்றை மேலணை மற்றும் கீழணை என்று அழைக்கிறார்கள். இது போக தூவாணம், மணலாறு, வெள்ளியாறு, இரவங்கலாறு என்று அடுத்தடுத்து நான்கு அணைகள் வருகின்றன.

சாலையோரத்தில் ஒரு மலர்
இதில் விசேஷம் என்னவென்றால், அணைகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் வெளியேற வழி கிடையாது. சுற்றிலும் மலைகள், அணைகள் இருப்பதோ பள்ளத்தில்.. இதனால் தண்ணீரை அடுத்த அணைக்கு கொண்டு செல்ல, மலையை குடைந்து அதில் குழாய்களை அமைத்திருக்கிறார்கள். இதில் 10 கி.மீ. தூரம் தண்ணீரை கொண்டு சென்று இரவங்கலாறு அணையில் சேர்த்திருப்பது, ஒரு சாதனை! இயற்கைக்கு சவால் விடும் சிக்கலான வேலை இது.



                                                                                                                        - பயணம் தொடரும்



22 கருத்துகள்

  1. அழகான படங்கள்...

    சென்று ரசிக்க வேண்டும் என்கிற ஆவல் பிறக்கிறது...

    ஆனால் பேருந்து அதிகமில்லை என்பது வருத்தம் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேருந்தில் சென்றால் சரியாக பார்க்க முடியாது. இந்த இயற்க்கை அழகை ரசிக்க கார்தான் சரி. சின்னமனூரில் இருந்துகூட வாடகை கார்கள் கிடைக்கின்றன. நண்பர் சிவக்குமாரை (98940 55554) தொடர்பு கொண்டு எல்லா உதவிகளையும் பெறலாம்.
      வருகைக்கு நன்றி டிடி சார்!

      நீக்கு
  2. அருமை நண்பரே! உங்கள் படங்களைப் பார்த்த போது போன நினைவுகள் வந்தாலும் அணைகள் பார்க்கவில்லை. அந்தத் தகவல்கள் இனி அடுத்த முறை போகும் போது பார்த்தே தீர வேண்டும். மகனிடமும் சொன்ன போது அவன் இன்னும் விவரமாகவே சொன்னான் அம்மா நாம போயிருக்கோம் இதே இடங்கள் என்று. மீண்டும் இருவரும் ப்ளான் போட்டாச்சு. நான் பதிவு எழுதணும்ல...ஹஹஹஹ் இல்லேனா என்னாறது..!!!?

    அந்தப் பறவை? அது "இது யாருடா நம்ம ஏரியாக்குள்ள நுழையறது ?" என்று பார்ப்பது போல் உள்ளது...

    டூ வீலரோ காரோ எந்த வாகனமாக இருந்தாலும் நீண்ட தூரம் நானே ஓட்டிக்கொண்டு போவது எனக்கு ரொம்ப பிடிக்கும்.// அட ஆமாங்க கை கொடுங்க நாங்களும் உங்க கட்சிதான்....நான்/மகன் இருவரும் தான் எங்கள் வீட்டு சாரதிகள்.....

    நமது வாகனத்தில் சென்றால் தான் இயறகையை ரசிக்க முடியும். நம் விருப்பபடி ஆங்கானே நிறுத்தி ரசித்துப் புகைப்படம் எடுத்து பல விவரங்களும் தெரிந்து கொள்ளலாம். ஒரு சிறிய உணவகம் உண்டே அங்கு...அது ஒன்று மட்டும் தான் என்று நினைவு. ஆனால் கையில் சாப்ப்பாடு கீழிருந்து கம்பத்தில் வாங்கிக் கொண்டு சென்று விட்டோம். ஏரியை நினைவூட்டினான் பையன் பின்னர் அந்தச் சிறிய அருவியில் குளித்தோம் என்றும் சொன்னான்...ஆம் நாம் ஓட்டுவதாக இருந்தால் அருவியில் ஆற்றில் குளித்தால் செம பசி எடுக்கும் பின்னர் உண்ட, குளித்த மயக்கம் தூக்கம் நன்றாகவே வரும்....அனுபவம் உண்டு

    நண்பரே கொல்லி மலை சென்றிருக்கின்றீர்களா.? அருமையான மலை. நாமக்கல்லிலிருந்து என்றால் வண்டிகள் ....70 கொண்டை ஊசி வளைவுகள் நினைவு...ஆனால் மிகவும் கவனமாகச் செல்ல வேண்டும். .திருச்சி- புளியம்சோலை சென்று அங்கிருந்து ட்ரெக்கிங்க் உண்டு. நாங்கள் புளியம்சோலை வரை சென்றுள்ளோம். அருமையான இடம்....

    அருமையான விவரணங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சென்ற பயணத்தை நினைவு படுத்தி எழுதியிருப்பது அருமை. மேகமலை கிராமத்தில் ஒரு சிறிய உணவகம் இருந்தது. ஊர் இன்னும் தள்ளிப் போனால் வரும் என்று நினைத்து போய்கொண்டே இருந்தோம். மொத்தமே ஊர் அவ்வளவுதான்.

      இப்படி இயற்கையை ரசிக்க வேண்டும் என்றால் சொந்த வகனம்தான் சிறந்தது.

      கொல்லிமலை சென்றிருக்கிறேன். அதிலும் திரும்பி வரும்போது டூவீலரில் வந்தேன். மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். நல்ல அனுபவம் அதை பற்றியும் விரைவில் பதிவிடுகிறேன்.

      தங்களின் மேகமலை பயண அனுபவத்தை படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

      வருகைக்கும் வாக்குக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  3. அவர் தளத்தில் அவர் மட்டுறுத்தி வெளியிட்ட பின்னூட்டம் ஒன்று உங்கள் பார்வைக்காக!
    ///////////////AnonymousFriday, April 03, 2015
    THIS GUY VARUN VOMITING EVERYWHERE/////////

    அமாம்! இன்னும் ஏன் வாந்தி பேதி வருண் இங்கு வந்து வாந்தி எடுக்கவில்லை?
    ஒரு வேளை உடம்பு சரியில்லையா என்னவோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா நண்பரே,

      வருணுடனானா உங்கள் வாதங்களை அவரது தளத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு இந்த பதிவுக்கு பொருத்தமான கருத்துக்களை மட்டுமே வெளியிடுங்கள்.

      நன்றி!

      நீக்கு
  4. மேகமலை திரும்பிய பக்கம் எல்லாம் பச்சைப் பசேல் டீ எஸ்டேட் ...கண்ணுக்கு குளிர்ச்சி தருகின்றன உங்கள் படங்கள் :)

    பதிலளிநீக்கு
  5. மேகமலைக்கு போகும் ஆர்வத்தை தூண்டுகின்றது பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  6. அருமையாண பயணத்தொடர் கூடவே வருவது போன்ற உணர்வை ஏற்படுத்திய நடையழகு தொடர்கிறேன் புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

    //டூ வீலரோ காரோ எந்த வாகனமாக இருந்தாலும் நீண்ட தூரம் நானே ஓட்டிக்கொண்டு போவது எனக்கு ரொம்ப பிடிக்கும்//

    நண்பரே இதனால் ஒரு டவுட்டு
    மாட்டு வண்டியுமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, நீங்கள் நகைசுவைக்காக கேட்டிருக்கிறீர்கள். உண்மையில் நான் மாட்டு வண்டியும் ஒட்டியிருக்கிறேன். இப்போது அல்ல சின்ன வயதில். அதுவும் பிடித்தமான பயணமே!
      வந்து கருத்திட்டதற்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  7. அருமையான பயணம் நண்பரே
    ஆனாலும் இதுபோன்ற இடங்களுக்கு இரு சக்கர வாகனத்தல் போவது
    என்பது ஆபத்தானது. இனி இதுபோன்ற இரு சக்கர வாகனப் பயணங்களைத் தவிர்க்கவும்
    மகிழ்வுந்தில் செல்லுதல் நலம் பயக்கும்
    நன்றிநண்பரே
    அடுத்தப் பதிவிற்காகக் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அறிவுரையை ஏற்றுகொள்கிறேன் நண்பரே, இந்த மலைப் பாதையில் சாதாரண கார்கள் பயணிக்க முடியாது. போர் வீல் டிரைவ் வகை ஜீப்புகளும், எஸ் யு விக்களும் மட்டுமே சிரமமில்லாமல் பயணிக்கும். அதனால்தான் டூவீலரில் சென்றேன்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  8. இம்முறைக்கான விடுமுறைப் பயணத்தின் போது தங்களுடைய பதிவுகளைப் பார்த்துத்தான் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இன்னும் உறுதிப்படுகிறது.

    த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
  9. அன்பு நண்பரே!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      நீக்கு
  10. மேகமலை போகவேண்டும் என்ற என் ஆசையை நீங்கள் மேலும் தூண்டிவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி! போய்வாருங்கள் இனிமையான அனுபவம் கிட்டும்!

      நீக்கு
  11. இது போன்ற பயணங்களூகாக என் மகன்கள் என்னை அழைத்து செல்லுமட்டும் காத்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை