Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

மெல்லச் சாகுமோ இனி ஆணினம்..?!




லகில் இருக்கும் ஒட்டுமொத்த ஆணினமும் ஆபத்தில், அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பதுதான் இப்போதைய 'ஹாட் டாப்பிக்'!

திடீரென்று ஆணினத்துக்கு என்ன ஆனது? அவர்கள் ஏன் அழியவேண்டும்? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. முதலில் சமூகக் காரணம் கூறப்படுகிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த ஆணின் உயிரணு எண்ணிக்கையில் பாதியளவு கூட இன்று இருக்கும் ஆணிடம் இல்லை. மடமடவென்று விந்தணுவின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு வேலை, டென்ஷன், உணவு முறை, சுற்றுச்சூழல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இப்படியே போனால், வருங்காலத்தில் ஒரு ஆணால் இயற்கை முறையில் ஒரு பெண்ணை தாய்மையடையச் செய்ய முடியாத நிலை வந்துவிடும் என்கிறார்கள்.

இப்போதே ஆண் துணையின்றி பெண் மட்டுமே அவள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்கள் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறையெல்லாம் வந்துவிட்டது. பயனற்ற உயிரினம் அழியும் என்பது டார்வின் விதி. ஆணின் பிரதான வேலையான இனப்பெருக்கத்தைத் தரமுடியாமல் போகும்போது ஆணினமும் அழியத்தொடங்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மருத்துவ காரணங்கள் வேறுமாதிரியாக சொல்கின்றன. இயற்கையே ஆணை பலவீனமானவனாகத்தான் படைத்திருக்கிறது. உருவத்திலும் உடல் வலிமையிலும் வேண்டுமானால் ஆண் பெண்ணைவிட சிறந்தவனாகத் தோன்றலாம். ஆனால், உள்ளுக்குள் நோய் எதிர்ப்பு திறனில் பெண் இனம் மிக வலுவுள்ள இனமாக இருக்கிறது.

இயற்கையே அப்படிதான் உருவாக்குகிறது. 100 பெண் சிசுக்களை பெண்கள் வயிற்றில் உருவாக்கும் அதே நேரத்தில் 140 ஆண் சிசுக்கள் அந்த பெண் சிசுக்களுக்கு இணையாக இயற்கை தோற்றுவிக்கிறது. அதாவது கருவாக உருவாகும்போதே ஆண் இனம் பெண் இனத்தைவிட ஒன்றரை மடங்கு கூடுதலாக உருவாக்கப்படுகிறது.

அப்படியிருந்தும் பிறக்கும் போது கிட்டத்தட்ட ஒரே எண்ணிக்கையில்தான் குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது 100 பெண் குழந்தைகளுக்கு 106 ஆண் குழந்தைகள் என்ற விகிதத்தில்தான் பிறக்கின்றன.  

கரு உருவான கணக்குப்படிப் பார்த்தால் 100 பெண் குழந்தைகளுக்கு 140 ஆண் குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். ஆனால், 34 ஆண் குழந்தைகளும் கருவிலே அழிந்துவிடுகின்றன. 

அதற்கு காரணம் ஆண் பலவீனன் என்பதுதான். இதில் என்னவொரு அதிசயம் என்றால் பெண் குழந்தைகள் இயற்கையான முறையில் கருவில் அழிவதேயில்லை.  கருவில் அழிவதெல்லாம் ஆண் குழந்தைகள் மாத்திரமே..!

சரி, பிறந்த பிறகாவது ஆண் குழந்தைகள் தாக்குப் பிடிக்கின்றனவா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. அதிலும் பெண் குழந்தைகள்தான் ஜெயிக்கின்றன. குழந்தைகள் பிறந்த 6 மாதங்கள் முடியும் முன்பே தொற்றுநோய், சுற்றுப்புற தூய்மை கேடால் 1,000 ஆண் குழந்தைகளில் 17 குழந்தைகளும், பெண் குழந்தைகளில் 11 குழந்தைகளும் இறக்கின்றன. இதிலும் ஆண் குழந்தைகளின் இறப்பு விகிதமே அதிகம். 

பெண் குழந்தைகள் நோய் எதிர்ப்புத்திறனுடன் இருப்பதற்கு 'ஹீமோபைலியா ஜிடெண்டரஸ்' என்ற ஒருவகை ஹார்மோன் தான் காரணம். இது கருவுற்ற தாயின் உடலில் இருந்து கருவில் இருக்கும் பெண் குழந்தைக்கு மட்டுமே போகிறது. இது ஒரு போதும் தாயிடமிருந்து ஆண் குழந்தைகளுக்கு செல்வதில்லை. இந்த அதிசயமான போக்கு எதனால் ஏற்படுகிறது என்று மரபியல், செல்லியல், நுண் செயலியல் அறிஞர்கள் மண்டையைப் போட்டுக் குடைந்து கொண்டிருக்கிறார்கள், விடைதான் கிடைத்தபாடில்லை. 

இந்த ஹார்மோன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொடுக்கக் கூடியது. அதனால்தான் பெண் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களாக இருக்கிறார்கள். 

கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் அதிர்ச்சிகள், உடலுக்கு ஒத்துக் கொள்ளாத மருந்துகள், தீமை தரும் உணவுகளை உட்கொண்டதால் ஏற்படும் விளைவுகளே குழந்தைகளை பிறவி ஊனமாக மாற்றிவிடுகிறது. 

அதிலும் கூட ஊனமுற்ற 100 குழந்தைகளில் 70 ஆண் குழந்தைகளாகவும், 30 பெண் குழந்தைகளாகவும் இருக்கிறது. இப்படி நோய்களில் இருந்து பெண் குழந்தைகளை மாய்ந்து மாய்ந்து காப்பாற்றுவது 'ஹீமோபைலியா ஜிடெண்டரஸ்' என்ற ஹார்மோனும் 'இம்முனோ குளோபின்' என்ற எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட ரத்த புரதமும்தான். இது பெண்களின் ரத்தத்தில் மட்டும்தான் அதிகமாக உள்ளது.

இதனால்தான், பெண் குழந்தைகள் கடுமையான பாக்டீரியாக்களின் தாக்குதல்களை சமாளித்து வாழ்ந்துவிடுகின்றன. சராசரி ஆயுளை எடுத்துக் கொண்டால் ஆணைவிட பெண் கூடுதலாக 8 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்கிறாள். 

மாரடைப்பு, திக்குவாய், வலிப்பு, பைத்தியம் போன்ற எல்லாமே ஆண்களைத்தான் தாக்குகிறது. உடல் வலிமை வேறு, உடலின் எதிர்ப்பு சக்தி வேறு, வலிமையை ஆணுக்கும், எதிர்ப்பு சக்தியை பெண்ணுக்கும் இயற்கை அளித்துள்ளது. எதிர்ப்பு சக்தி குறைந்த ஆணினம் இனி மெல்ல மெல்ல சாகும் என்கிறது மருத்துவதுறை. இவையெல்லாவற்றையும் விட சமீபத்தில் வெளிவந்த ஒரு ஆய்வின் முடிவு ஒட்டுமொத்த ஆணினத்தையும் ஆட்டம் காணவைத்து விட்டது. 

குரோமோசோம்களின் மாயாஜாலத்தால்தான் ஆண் பெண் உருவாக்கபடுகின்றன. 'எக்ஸ்' குரோமோசோமும் 'ஒய்' குரோமோசோமும் தான் இந்த மாயாஜாலம். பெண் என்றால் இரண்டு 'எக்ஸ்' குரோமோசோம்களும், ஆண் என்றால் ஒரு 'எக்ஸ்', ஒரு 'ஒய்' குரோமோசோம்களுடன்தான் இருப்பார்கள். 

'எக்ஸ்' குரோமோசோம்
இதில் 'எக்ஸ்' குரோமோசோம் முழுமையாக வளர்ச்சியடைந்த ஒரு கருக்கூறு. 'ஒய்' குரோமோசோம் அப்படியல்ல. அது பாதியளவு மட்டுமே வளர்ச்சியடைந்த கருக்கூறு. அதனால்தான் மருத்துவ உலகம் முழுமையாக வளர்ச்சியடையாத ஒரு பெண்ணே ஆண் என்று கூறுகிறது. சமீபத்திய ஆய்வு இதை மேலும் மெய்ப்பிக்கிறது.

கிரேவ்ஸ் என்ற ஆஸ்திரேலிய பெண் விஞ்ஞானி இந்த அதிர்ச்சியான ஆய்வு முடிவை வெளியிட்டிருக்கிறார். அதன்படி ஆண் இனம் 'ஒய்' குரோமோசோம்களை கொண்டிருப்பதால் அது அழியத் தொடங்கியுள்ளது என்கிறார். 'ஒய்' குரோமோசோம் உள்ளுக்குள்ளேயே அழியும் தன்மைக் கொண்டது என்றும், அதன் அழிவால் புவியில் ஆண்களால் நிலைத்திருக்க முடியாது என்றும், கடைசியில் பூமியில் இருப்பது பெண் இனம் மட்டுமே என்றும் ஆணித்தரமாக கூறியிருக்கிறார். 

மேலும் அவர், பெண்மையின் குரோமோசோமான 'எக்ஸ்' குரோமோசோமில் ஆயிரம் ஜீன்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஆணின் குரோமோசோமான 'ஒய்' குரோமோசோமில் வெறும் 100 ஜீன்கள் மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆக மொத்தம் பெண்கள் இரண்டு 'எக்ஸ்' குரோமோசோமுடன் 2,000 ஜீன்கள் கொண்டவர்களாகவும், ஆண்கள் ஒரு 'எக்ஸ்' (1,000 ஜீன்கள்) ஒரு 'ஒய்' (100 ஜீன்கள்) குரோமோசோம்களைக் கொண்டு 1,100 ஜீன்கள் மட்டுமே கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். 

ஆரம்ப காலங்களில் ஆண்களின் 'ஒய்' குரோமோசோமிலும் 1,000 ஜீன்கள் இருந்தனவாம், லட்சக்கணக்கான ஆண்டுகளில் 'ஒய்' குரோமோசோமில் இருந்த ஜீன்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இந்த எண்ணிக்கைக்கு வந்ததாகவும் கூறுகிறார். 


மேலும், 'எக்ஸ்' குரோமோசோம்கள் பெண்ணுக்கு ஜோடியாக அமைந்துள்ளதால் ஜீன்களின் பாதிப்பை அவைகள் தாங்களே சரி செய்து கொள்கிறது. ஆணிடம் குரோமோசோம்கள் ஜோடியாக இல்லாததால் ஜீன்களின் பாதிப்பு ஏற்பட்டால் அது சரி செய்ய முடியாமல் அழிந்து போகிறது. இப்போது 'ஒய்' குரோமோசோமில் உள்ள ஜீன்களும் எதற்கும் பயன்படாத குப்பைகள் என்று பயமுறுத்துகிறார், கிரேவ்ஸ்.

"இந்த பரிணாம வளர்ச்சியில் ஈடுகொடுக்க முடியாமல் ஆணினம் அழிந்து போகும். இது ஒரு பரிதாபமான முடிவு. ஆண்கள் பரிதாபமானவர்கள்." என்று தனது ஆய்வை முடிக்கிறார். கிரேவ்ஸ்.

ஆனால், இதெல்லாம் நடைபெற இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகள் இருக்கின்றன என்று கூறி விஞ்ஞானிகள் நம் வயிற்றில் பால் வார்க்கிறார்கள். ஆனாலும், மெல்லச்சாகும் ஆணினத்தை தடுக்கவே முடியாது என்று சத்தியமும் செய்கிறார்கள். 

வருங்காலம் ஆணுக்கு கொடூரமானதாகவே இருக்கும்!       


====


46 கருத்துகள்

  1. வாசித்தாயிற்று ...கண்ணைக் கட்டுது...நாளை வந்து கருத்து...துளசியும் வாசிக்க வேண்டுமே...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பயமுறுத்துகிறது ஆய்வுச் செய்திகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதும் உண்மை சுடத்தானே செய்யும்! ஆனால் நமக்கு எந்த பயமும் இல்லை என்பது மட்டுமே ஆறுதல்!

      நீக்கு
  3. இன்னொரு ஆய்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் குரோமோசோம்கள் குறைவதும் கூடுவதும் இயல்பே என்றும் படித்தேன் ...
    விரைவில் ஒய் க்ரோமொஸ் கூடவும் செய்யலாம் என்று சொன்னது அது ..
    நல்ல கட்டுரை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம், ஆனாலும் ஒய் குரோமோசோம் எப்போதுமே பலவீனமானதுதான்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  4. நல்ல ஆய்வுக்கட்டுரை. ஒரு லட்சம் ஆண்டுகள் இன்னும் இருக்கின்றது, அதற்குள் வேறு ஏதாவது ஒரு அதிசயம் நடக்கலாம். இயற்கை தன்னுடைய எந்த படைப்பையும், எப்படியும் காப்பாற்றும் என்று தோன்றுகிறது, நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக நடக்க வேண்டும். நடக்கும் என்றே நம்புவோம்!

      நீக்கு
  5. அருமையான ஆய்வுக்கட்டுரை. காலம் கடக்கும் நிலையில் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படலாம். அதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எது எப்படியாயினும் சமநிலை தவறும்போது பல சிக்கல்கள் வர வாய்ப்புண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா!
      காலம் மாற்றத்தை ஏற்படுத்தட்டும்.

      நீக்கு
  6. சுவாரசியமான கட்டுரை. விவரங்கள் திகைப்பூட்டுகின்றன. திக்குவாய், மாரடைப்பு போன்றவை பெண்களையும் வெகுவாகத் தாக்குகின்றன.

    ஆணினம் பலவீனப்பட்டு வருகிறது என்பதை மறுக்க முடியாத அளவுக்கு நிறைய நிகழ்ந்து வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களை நோய்கள் தாக்குவதே இல்லை என்று இங்கு சொல்லவில்லை. அதிகமாக பாதிப்பது ஆண்களுக்குதான் என்பதுதான் உண்மை.
      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  7. அருமையான கட்டுரை நண்பரே
    கருவில் தானே அழிவதெல்லாம் ஆண் குழந்தைகளே
    இந்த உண்மை கசக்கிறது நண்பரே
    பெண் குழந்தைகளை இவர்களே அழிக்கிறார்கள்
    ஆனால் ஆண் குழந்தைகளோ தானேஅழிகின்றன
    எதிர்காலம் சிக்கல்தான்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்தனை பலவீனமான கரு ஆண் கரு!
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  8. அதிர்ச்சியான தகவல். ஆனாலும் அறிவியலார்கள் இதற்கும் ஒரு தீர்வு கண்டுபிடித்துவிடுவார்கள். அதைப் பார்க்க நாம் தான் இருக்கமாட்டோம்! தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. துளசி: நல்லதொரு ஆய்வுக் கட்டுரை. நண்பரே! ஆனால் கொஞ்சம் பயமாக இருக்கின்றது, நாமெல்லாம் தப்பித்தோம் என்பதால் கொஞ்சம் ஆறுதல்..ஹஹஹ அதற்கப்புறம் நடப்பதை நாம் பார்க்கப் போவதில்லையே அதனால்....

    கீதா: உலகம் சமநிலை பெற வேண்டும் (அடுத்த வரி இங்கு வேண்டாம் இதற்கு சம்பந்தம் இல்லை..) என்ற பாடலின் முதல் வரிதான் நினைவுக்கு வந்தது, பெற்றும் விடும். ஆனால் சில தடுமாற்றங்களுடன்...

    என்னதான் ஆய்வுகள் வந்து கொண்டே இருந்தாலும், இயற்கை தன்னைச் சமநிலைப் படுத்திக் கொள்ள ஏதேனும் ஒரு விளையாட்டை நிகழ்த்திக் கொண்டே இருக்கும். இன்னும் பல மில்லியன் வருடங்கள் இருக்கும் போது அதற்குள் மருத்துவத் துறை சும்மா இருக்குமா என்ன? அது தனது பங்கிற்கு மருந்துகள் கண்டுபிடிக்கும். ஜெனிட்டிக்ஸ் ஆய்வாளர்கள் சும்மா இருப்பார்களா என்ன? அவர்களும் ஆய்வுகள் செய்வார்கள். இப்போது பயோடெக்/ஜெனிட்டிக் பொறியியல் துறைகள் எவ்வளவோ கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது இதிலும் மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு.

    எப்படி கொசுக்கள், கரப்பான் பூச்சிகள், வயலில் உள்ள பூச்சிகள், எறும்புகள் முதலியவை, என்னதான் மருந்துகள் அவைகளை அழிக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றின் ஜீன் கள் அந்த மருந்துகளுக்கு அடாப்ட் பண்ணிக் கொள்ளும் வகையில் மாற்றம் நிகழ்ந்து சர்வைவல் ஆஃப் தெ ஃபிட்டஸ்ட் என்று தொடர்ந்து அதன் இனம் அழியாமல் இருப்பது போல....

    நேற்று நல்லதல்ல என்று சொல்லப்பட்டவை இன்றுநல்லவை என்று ஆய்வுகள் சொல்லுகின்றன... நேற்று நல்லவை என்று சொல்லப்பட்டவை இன்று நல்லதல்ல என்று சொல்லப்படுகின்றன. எனவே ஆய்வுகள் நொடிக்கு நொடி மாறி வெளிவந்து கொண்டேதான் இருக்கும். அறிவியல் உலகம் விந்தையானதே. ஒரு உயிர் எப்படித் தோன்றுகின்றது? எந்த நிமிடத்தில் உருவாகின்றது என்பதை ஒரு அளவிற்கு மேல் எந்த அறிவியலாளர்களாஉம் கண்டுபிடிக்க முடியவில்லை அதை அறிய அதனை நோக்கி மனிதன் நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றான்....ஆனால் இயற்கை லேசுப்பட்டதில்லை....அதிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். ஏற்கனவே மனிதனின் தவறுகளால் பூமியின் சமனிலையில் தடுமாற்றம்...இயற்கை சீற்றங்கள்... மனிதனை வெல்ல அது ஒருகாலும் அனுமதிக்காது......சில அழிவுகளும் ஆக்கங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கும்...ஒரு வேளை மனிதன் இயற்கையை வெல்லும் காலம் வந்தால், உலகமே அதற்குள் பிறழ்ந்து புதியதோர் உலகம் பிறந்து, இயற்கை தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும்..

    நல்ல கட்டுரை நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பின்னூட்டம்!
      வழக்கம்போல் மிக தெளிவான விளக்கமான கருத்துரை.
      மாற்றம் ஏற்பட வேண்டும். ஏற்பட்டால் நல்லது.
      என்னதான் ஜெனடிக் தொழில்நுட்பம் வந்தாலும் அவற்றால் அழிந்துபோன ஒரு உயிரினத்தை உருவாக்கமுடியுமா? அந்தவிதத்தில் மனிதன் தோற்றுத்தானே போயிருக்கிறான். இயற்கை முடிவு செய்துவிட்டால் மனிதன் காப்பாற்றமுடியாது என்பதுதான் உண்மை.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  10. அழகான அருமையான அதிர்ச்யான ஆய்வு கட்டுரை
    வாழ்த்துகளும் நன்றிகளும்

    அன்புடன் கருர் பூபகீதன் நன்றி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  11. இயற்கையை வெல்ல யாராலும் முடியாது! என்ற உண்மைதான் கட்டுரையை படித்தவுடன் தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள்! எனது கருத்தும் அதுதான்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  12. இயற்கை தன்னைத் தானே சமநிலைப் படுத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டது, ஒரு லட்சம் ஆண்டுகளுக்குள்ளாக இந்நிலை சரியாகும் என நம்புவோம். எங்கள் மருமகளும் இதையே கூறுவாள். ஆண் குழந்தைகள் தான் கருவிலேயே அதிகம் அழிகின்றன என்றே அவளும் கூறிக் கொண்டிருக்கிறாள். இப்போது பெண்களுக்குத் தான் அதிகம் கிராக்கி இருந்து வருகிறது . இனி நடப்பாண்டுகளில் ஆண்களுக்கு ஏற்படப் போகிறது! சுற்றிச் சுற்றி வரும் வட்டம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி அம்மா!
      என்னுடைய கருத்தும் அதேதான். இயற்கை மட்டுமே எல்லாவற்றையும் மாற்றமுடியும்.

      நீக்கு
  13. அதிர்ச்சியூட்டும் தகவல்கள் .
    ஆண் பிள்ளை பிறந்தால் தான் முகமலர்ச்சியே அனைவரிடமும் காண்கிறோம் அப்படியிருக்க இந்த தகவல்கள் இன்னும் ஆண் குழந்தைகளை கண்ணைப்போல் காக்க உதவியாக அமையுமோ?
    பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் பலவீனமானவர்கள் என்பதை ஆண் குழந்தைகளை பெற்று வளர்க்கும் இன்றைய தாய்மார்கள் தெரிந்துவைத்திருப்பார்கள். ஏனென்றால் பெண் குழந்தை பெற்றால் பத்தியமெல்லாம் எதுவும் வேண்டாமாம். எல்லாவற்றோடும் ஒத்துப்போகும் பெண் குழந்தைகள் ஆதலால் பத்தியமில்லா உணவு அவர்களுக்கு குழந்தை பிறந்தவுடனே கொடுக்கிறார்கள். ஆண் குழந்தை என்றால் பத்திய உணவு தான் அதை சேர்க்காதே இதை சேர்க்காதே பிள்ளைக்கு ஆகாது என்று அப்பப்பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய விஞ்ஞானம் ஆராய்ந்து சொல்லும் கருத்துக்களை நமது தாய்மார்கள் தங்களது அனுபவத்தில் அன்றே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
      தங்கள் வருகைக்கு நன்றி சகோ!

      நீக்கு
    2. @சசிகலா, எனக்குத் தெரிந்து எங்கள் வீடுகளில் அப்படி இல்லை! பெண் குழந்தை பிறந்தாலும் பத்திய உணவு தான்; ஆண் குழந்தை பிறந்தாலும் பத்திய உணவு தான். என் சித்திக்கு 4 பெண் குழந்தைகள். நாலு பிறந்த போதும் பத்திய உணவு தான். எனக்கு முதல் குழந்தையே பெண் தான். எங்க வீட்டில் பத்தியம் தான் போட்டார்கள். என் நாத்தனார்களுக்கெல்லாம் 3 பெண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் என உண்டு. எல்லோருக்கும் பத்தியச் சமையல் தான்! :) சில வீடுகளில் இப்படிப் பாரபட்சம் பார்க்கிறார்களோ என்னமோ! எனக்கு இது புதிய தகவல்.

      நீக்கு
  14. அசத்தலான ஆய்வுக்கட்டுரை! பிரமிப்பூட்டும் தகவல்கள் மனதை திகைக்க வைக்கின்றன!

    பதிலளிநீக்கு
  15. படித்தேன்! தலை சுற்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  16. அதிசயத்தகவல்கள் மொத்தத்தில் உலகம் அழிவை நோக்கியே செல்கிறது உறஉதியாகி விட்டது நண்பரே...நாளைய நமது சந்ததிகளுக்காக வேதனைப்படத்தான் முடியும்
    தமிழ் மணம் 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் இயற்கையை மதிக்காதவரை நம் சந்ததிகளின் வேதனையை தடுத்து நிறுத்த முடியாது.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  17. லெஸ்பியன்களுக்குத்தான் இனி வரும் காலம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எப்போதுமே வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவர் ஜி! அது இந்த கருத்திலும் தெரிகிறது.
      தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  18. செந்தில்,

    நல்ல கருத்தான கட்டுரை.

    தற்போது உலகில் ஆண்கள் சதவிகிதம் அதிகரித்து வரும் நிலையில் இந்தக் கட்டுரை வேறு ஒரு உண்மையை சொல்கிறது. xy, xx குரோமசோம்கள் ஆண் பெண் என்ற பாலின அடையாளத்துக்கு அடிப்படையாக இருந்தாலும் மருத்துவத்தின் படி தாயில் வயிற்றில் உருவாகும் அனைத்து கருக்களுமே துவக்கத்தில் (இரண்டு வாரம் வரை என்று நினைக்கிறேன்.)xx அதாவது பெண்ணாகத்தான் இருக்கின்றன. அதன் பின்னரே ஒரு x மர்மமான முறையில் y யாக மாறி, ஆண் குழந்தையாக வளர்கிறது. நா ஆம்பளடா என்று வீரம் பேசும் அல்லது மனதுக்குள் மமதையுடன் எண்ணிக்கொள்ளும் ஆண்கள் எல்லோருமே பெண்களாக இருந்து ஆண்களாக மாறியவர்கள்தான். பெண்கள் துவக்கத்திலிருந்தே பெண்களாகவே இருக்கிறார்கள்.இந்த விஞ்ஞான உண்மை தெரியாமல் திரியும் ஆண் திமிர் பிடித்த ஆணாதிக்கவாதிகள் இந்தக் கட்டுரையை படிக்க நேர்ந்தால் திகிலடைத்து போய்விடுவார்கள்.

    மேலும் உலகத்தின் முதல் மனித உயிரினம் ஒரு பெண் என்றும் அவள் பெயர் லூசி என்று சொல்லப்பட்டு வருகிறது.
    வழக்கம்போல ஒரு புதிய தகவல் தந்ததற்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஞ்ஞானமே மூளியான ஒரு பெண்ணே ஆண் என்றுதான் கூறுகிறது. ஆனால் நீங்கள் கூறும் முதலில் பெண்ணாகவும் பின் ஆணாகவும் மாறுவது உண்மையல்ல. ஏனென்றால் இன்றைய மருத்துவம் மூலம் கருவை ஆண் கருவாகவே உருவாக்க முடியும்.
      ஆணிடம் இருந்து சேகரிக்கப்பட்ட விந்தில் குறிப்பிட்ட ஒரு கெமிக்கலை கலந்து விட்டால் அது 'ஒய்' குரோமோசோமை கீழ் பகுதியிலும், 'எக்ஸ்' குரோமோசோமை மேல் பகுதியிலும் தனித்தனியாக பிரித்துவிடும். அதில் கீழே தங்கியிருக்கும் 'ஒய்' குரோமோசோமை மட்டும் தனியே எடுத்து ஆண் குழந்தைகளை உருவாக்கும் கலாச்சாரம் பஞ்சாப்பின் பணக்கார குடும்பங்களில் இருக்கிறது. இது மிகவும் மேம்படுத்தப்பட்ட நவீன தொழிநுட்பம். இது புதிய கருத்தம்மா போன்றது. பிறந்தப்பின் பெண் குழந்தைகளை கொல்வதற்கு பதிலாக கருவையே ஆணாக உருவாக்கிவிடுவது. அதனால் கரு பெண்ணாக தோன்றி பின் ஆணாக மாறும் என்பது உண்மையல்ல.

      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு

    2. கர்ப்பத்தில் எல்லாமே பெண்தான் என்றும் பிறகே சில ஆண்களாக மாறுகின்றன என்றும் படித்திருக்கிறேன். உளவியல் நிபுணர் !ஷாலினி ஒரு நிகழ்ச்சியில் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லும் செயற்கை விஞ்ஞானம் பற்றி தெரியவில்லை. ஒருவேளை க்ளோனிங் போல ஜீன்களை மாற்றியமைக்கும் அறிவியலாக இருக்கலாம்.
      உங்கள் பார்வைக்கு ;
      https://answers.yahoo.com/question/index?qid=20060729192640AAeckqU

      நீக்கு
  19. சுவாரஸ்யமான ஆய்வு கட்டுரை... பகிற்விற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  20. பயந்து என்ன செய்வது?நடப்பது நடக்கட்டும்..மிக அருமையான பொருள் சேர்ந்த கட்டுரை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. நடப்பது நடக்கட்டும். எல்லோருக்கும் உள்ளது நமக்கும்.
      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  21. ம்ம்ம் சிக்கலான எதிர்காலம் தான்!! இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகள்னு சொல்றது கொஞ்சம் அதிகம்...
    இப்பவே 10ல 5 அவுட்...வருங்காலத்தில விந்து வங்கி வளர்ச்சியடைந்து, விந்துவ காசு கொடுத்து வாங்கற நிலைமை வரும்...ஆல்ரெடி ஸ்டார்ட் ஆயிடுச்சி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை