Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

திருச்சி பதிவர்களுடன் ஒரு சந்திப்பு

மிழகத்தின் தூய்மை நகரமான திருச்சிக்கு கடந்த வாரம் ஒரு வேலையாக போயிருந்தேன். அப்போது பதிவரும் நண்பருமான தமிழ் இளங்கோ அவர்களை தொடர்பு கொண்டேன். 'திருச்சி வருகிறேன் நேரில் சந்திக்கலாமா?' என்று கேட்டேன். எனக்காக தனது வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, 'வாருங்கள் சந்திப்போம்!' என்றார். அதோடு நான் இதுவரை சந்திக்காத இரண்டு பெரும் பதிவர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார்.

நண்பர் ஜோசப் விஜு எனக்களித்த புத்தகங்கள்
ஒருவர் தனது வலைப்பக்கத்தை வண்ணமயமான ஜொலிஜொலிப்போடு வழங்கும் மூத்த பதிவரும் பிரபல எழுத்தாளருமான வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள், மற்றொருவர் தமிழ் இலக்கிய செல்வங்களை வசீகரத்தோடு அளிக்கும் ஊமைக்கனவுகள் ஜோசப் விஜு அவர்கள். இவர்களோடு மணவை ஜேம்ஸ் அவர்களையும் சந்தித்தேன். இதில் தமிழ் இளங்கோ, மணவை ஜேம்ஸ் இருவரையும் புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பில் ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். இதுவரை நேரில் சந்திக்காத இருவரை சந்திக்கும் அரிய வாய்ப்பை இளங்கோ அவர்கள் எனக்கு அளித்திருந்தார். அவருக்கு ஆயிரம் நன்றிகள். 

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நேராக ஆர்.சி. மேல்நிலைப் பள்ளிக்கு சென்றோம். அங்குதான் ஜோசப் விஜு மற்றும் மணவை ஜேம்ஸ் ஆகிய இருவரும் பணியாற்றுகிறார்கள். மிடுக்கான தோற்றத்தில் ஒரு மிலிட்டரி ஆபிசர் போல் இருந்தார் ஆங்கில ஆசிரியரான ஜோசப் விஜு. பின்னர்தான் தெரிந்தது அவர் அந்தப் பள்ளியின் தேசிய மாணவர் படையின் ஏர்ஃபோர்ஸ் ஆபிசர் என்று.  

பின்னூட்டங்களில் தாராளமாக பாராட்டும் குணம் கொண்டவர். அவரை நேரில் சந்தித்தது பெரும் மகிழ்ச்சி. இந்த சந்திப்பு எப்போதும் நினைவில் இருக்கும் விதமாக மூன்று புத்தகங்களை பரிசளித்தார். மூன்றுமே முத்தான புத்தகங்கள். எனக்கு மிகவும் பயன்படக்கூடியவை. வழக்கம்போல் அவரது படத்தை வெளியிட மட்டும் தடை விதித்துவிட்டார்.

வீடு கட்டும் பணி நடந்து கொண்டிருப்பதால் முன்பு போல் தன்னால் அதிகமாக வலைப்பக்கம் வரமுடியவில்லை என்று கூறினார் மணவை ஜேம்ஸ் அவர்கள். இருவரும் மொறுமொறு பக்கோடாவும் அருமையான காபியும் எங்களுக்கு கொடுத்தார்கள். சுவைத்துக் கொண்டே பேசத் தொடங்கினோம்.

வலைப்பக்கத்திற்கு வெகுநாட்கள் வராத காரணத்தை  கேட்டோம். இனி வருவது சந்தேகமே என்று அதிர்ச்சியை தந்தார் ஜோசப் விஜு. ஏனென்று கேட்டோம் சில பிரச்சனைகள் இருக்கிறது என்று சொன்னார். இருந்தாலும் விட்டுவிடாதீர்கள். உங்கள் பதிவுகளை மீண்டும் வெளியிடுங்கள். ஆவலோடு காத்திருக்கிறோம் என்று கூறி விடைப் பெற்றோம்.

அய்யா வைகோ அவர்களுக்கு என்னுடைய 'நம்பமுடியாத உண்மைகள்', 'ஹாலிடே நியூஸ்' புத்தகங்களை வழங்கியபோது எடுத்தது. 
அதற்குள் வை.கோ அய்யாவிடம் இருந்து போன் வந்துவிட்டது. மாலை நேரம் அவரது வீட்டிற்கு சென்றதும் முகமலர்ச்சியோடு வரவேற்றார். வெகுநாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த பெரியவரைப் பார்த்துவிட்டேன். இனிப்பு, காரம், பழங்கள், குளிர்பானம் என்று கொடுத்து அசத்திவிட்டார். எனக்கு அவரது சிறுகதை தொகுப்பான 'எங்கெங்கும்.. எப்போதும்.. என்னோடு..' புத்தகத்தை பரிசளித்தார். பதிவுலகம், வேலை, குடும்பம் என்று பலவற்றையும் பேசினோம்.  

நண்பர் தமிழ் இளங்கோ 'ஆதிசங்கரர்' நூலினை வழங்கியபோது எடுத்தது 
எனக்கு எப்படி வைகோ அய்யா மீது பெரும் மதிப்பு இருக்கிறதோ, அதைப்போலவே அவருக்கும் என்னை பிடித்திருந்தது மிகப் பெரும் ஆச்சரியமாக இருந்தது. எனது பாக்கியங்களுள் அதுவும் ஒன்று.

அதன்பின் மாடிக்கு சென்றோம். தொட்டுவிடும் தூரத்தில் மலைக்கோட்டை இருந்தது. ஸ்ரீரங்கருக்கும் அங்கிருந்தே வணக்கம் சொல்லிவிட்டு, கீழே வந்தோம். சுடச்சுட காபி தயாராக இருந்தது. அருந்திவிட்டு விடைபெற்றோம்.

சாதாரணமாக ஒரு வேலைநிமித்தமாக திருச்சி சென்றதை மறக்கமுடியாத ஒரு நாளாக மாற்றியது இந்த சிறு பதிவர் சந்திப்புதான். இந்த நாளை இனிமையாக மாற்ற காரணமாக இருந்த தமிழ் இளங்கோ அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

மாடியில் மலைக்கோட்டை பின்னணியில் அய்யாவுடன் நான் 



34 கருத்துகள்

  1. தங்களை அன்று சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

    தங்களின் அமைதியான தோற்றமும், மென்மையான மற்றும் மேன்மையான பேச்சுக்களும் ‘நிறைகுடம் தளும்பாது’ என்பதை எனக்கு நினைவூட்டுவதாக இருந்தன.

    நம் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து உதவிய நம் அருமை நண்பர் திருச்சி. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு, நானும் என் நன்றியினைத் தங்களோடு தெரிவித்துக்கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள் VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறக்க இயலாத இனிய நினைவுதான் அய்யா அது. தங்களின் பாராட்டை அன்பின் மிகுதியாகவே எடுத்துக்கொள்கிறேன்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்வுடன் கூடிய நன்றிகள் அய்யா!

      நீக்கு
  2. இனிமையான சந்திப்பு !ஆனால் ,போட்டோ என்றாலே ஏர் போர்ஸ் ஆபீசர் 'பறந்து 'விடுகிறாரே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே, தமிழ் இளங்கோ அவர்கள் எவ்வளவோ கேட்டுப்பார்த்தார். நண்பர் மறுத்துவிட்டார்.
      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  3. சொல்லியிருந்தால் சந்தித்திருக்கலாமே தோழர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழரே, நீங்களும் திருச்சியில் தான் இருக்கிறீர்களா? தெரிந்திருந்தால் சந்தித்திருப்பேன். பரவாயில்லை அடுத்த முறை சந்தித்துவிடுவோம்.
      வருகைக்கு நன்றி தோழரே!

      நீக்கு
    2. ஆசிரியர் தோழர் இரா.எட்வின் அவர்களுக்கு வணக்கம். பெரம்பலூரில் அண்மையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவிற்கு இரண்டு நாட்கள் வந்து இருந்தேன். உங்களைச் சந்திப்பதற்காக வேண்டி அங்கே ஸ்டாலில் இருந்த NCBH தோழரிடம் நீங்கள் எப்போது வருவீர்கள் என்று கேட்டேன். வந்து விட்டு சென்று விட்டதாக தெரிவித்தார். சந்தர்ப்பம் அமையும்போது தங்களை சந்திக்கிறேன்.

      நீக்கு
  4. திரு கோபு சார் பதிவிலும் உங்கள் சந்திப்பு பற்றி எழுதியிருந்தார். இனிமையான சந்திப்பு! ஊமைக்கனவுகள் இனி வருவது சந்தேகம் என்று சொல்லியது தான் வருத்தமாயிருக்கிறது. சங்க இலக்கியங்களை அவர் மூலம் படித்தறியலாம் என்று நினைத்திருந்த என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு பெரிய இழப்பு தான். சந்திப்பு பற்றிய பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அது வருத்தமாகவே இருக்கிறது. தமிழ் பற்றி அவர் சொல்லும் முறை மிகவும் அற்புதமாக இருக்கும். அவரைப்போல் எழுதுபவர்கள் குறைவே! மீண்டும் அவர் எழுதவேண்டும் அதுவே எனது ஆசை. இதை அவரிடமும் சொன்னோம். பார்ப்போம்.
      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  5. திருச்சி நண்பர்களைச் சந்தித்ததை அழகாகச் சொல்லி, எங்களையும் உடனழைத்துச் சென்றமைக்கு நன்றி. நானும் 50கல் தொலைவிலிருந்தும் இன்னும் அய்யா வை.கோ. அவர்களைப் பார்க்காமலிருப்பது வருத்தமாகவே இருக்கிறது. விரைவில் அவர்களின் அனுமதி பெற்றுச் சந்திப்பேன். நண்பர் விஜூவோடு அவர் வலைப்பக்கப் பயிற்சிக்குப் புதுகை வரும் முன்னரே பழக்கம்தான். அவரது எழுத்துகள் பலருக்கும் பாடங்களாக இருந்ததும் உண்மை..தொடர்வதில் உளச்சிக்கலாகவே உணர்கிறேன். அது தீர்ந்து விரைவில் எழுத வரவேண்டும் என்று நானும் சொல்லியிருக்கிறேன். எழுதுவார். இல்லையெனில் புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக அவர் வீட்டு வாசலில் போய் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று தீர்மானித்திருக்கிறோம்...த.ம.+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்கிறேன். அவரை மீண்டும் பதிவுலகத்திற்கு இழுத்து வரவேண்டும்.
      கருத்துக்கு நன்றி அய்யா!

      நீக்கு
    2. ஆமாம் அண்ணா விஜு அவர்கள் எழுதாதற்குக் காரணம் உளச்சிக்கல் என்றுதான் நானும் நினைக்கிறேன். அவரை மீண்டும் வலைப்பக்கம் கொண்டு வர வேண்டும்.

      நீக்கு
  6. இனிய சந்திப்புகள். ஜோசப் விஜு அவர்கள் வலைப்பக்கம் இனி வர மாட்டேன் என்று சொல்லி விட்டது வருத்தமாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. இனிய சந்திப்பு.... படித்ததே மகிழ்ச்சி தருகிறது. விரைவில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  8. ஜோசப் விஜு அவர்களின் முடிவு வருத்தமளிக்கிறது நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவர்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட மீண்டும் வருவார்.

      நீக்கு
  9. மகிழ்வான நினைவுகளை அசை போட வைத்தீர்கள். நண்பருக்கு நன்றி! நான் செய்தது கொஞ்சம் வழிகாட்டல் மட்டுமே. உங்களோடு வந்ததில் மீண்டும் அந்த மூவரையும் சந்தித்ததில் எனக்கு நிரம்ப மகிழ்ச்சியே.

    அன்பிற்குரிய ஆசிரியர் முத்துநிலவனும், ஆசிரியர் S.மது (மலர்த்தரு) அவர்களும் ஜோசப்விஜூ அவர்களை சந்தித்து பேசினால், மீண்டும் அவர் வலைப்பக்கம் வந்து விடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் செய்தது சிறிய உதவி என்றாலும், ஒருவேளை நீங்கள் வரவில்லை என்றால் நான் யாரையுமே சந்தித்திருக்க முடியாது. இந்த சந்திப்பிற்கு முழுமுதற் காரணமும் நீங்கள்தான்.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  10. அன்புள்ள அய்யா,

    தங்களை மீண்டும் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி. திருமிகு.தமிழ் இளங்கோ அவர்கள் ஆர்வத்துடன் உழைக்கக்கூடிய அன்பானவர்.

    மிக்க நன்றி.

    த.ம. 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை சந்தித்ததும் எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது அய்யா!

      நீக்கு

  11. இனிய சந்திப்பை சுவைபட பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்! எனக்கும் திருச்சி சென்று நீங்கள் சந்தித்த பதிவர்களை சந்திக்க ஆசை. காலமும் நேரமும் ஒத்து வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  12. அருமையான சந்திப்பு! அதை மிக அழகுற தந்திருக்கின்றீர்கள்.

    கீதா: அடுத்து எப்போது சென்னைக்கு வருகை? வந்தால் சொல்லுங்கள் சகோ..

    துளசி : நாம் எல்லாம் மீண்டும் எப்போது சந்திப்போம் என்று தெரியவில்லை. பதிவர் விழாவில் கொஞ்ச நேரம்தான் அதுவும் அறிமுகம் மட்டுமே செய்து கொண்டோம். அதிகம் பேச முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் சந்திப்போம் கீதா சகோ!
      பாலக்காடு வரும்போது தங்களை சந்திக்கிறேன் துளசி சார்!

      நீக்கு
  13. நல்ல சந்திப்பு! ஜோசப் விஜு ஐயா எனக்கு மிக மிக மிக (எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்) விருப்பத்துக்குரிய நண்பர்! அவர் எழுத்து கல்வெட்டு! அப்பேர்ப்பட்டவர் இனி எழுதுவது ஐயம்தான் என்பதை அறியும்பொழுது எனக்கேற்படும் வேதனையைச் சொல்லி மாளாது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் பெரும் அதிர்ச்சி தந்த முடிவு அது. பொறுத்துப் பார்ப்போம். தங்கள் வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  14. என் வலைப்பூவைத் தங்கள் தளத்தில் இணைத்திருக்கிறமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைத்திருக்கிறேன் அய்யா, நான் தொடரும் வலைத்தளங்களை பொதுவாக இணைத்துவிடுவேன். அப்போதுதான் புது பதிவுகளை படிக்க முடியும்.

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை